திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: பெருமை / Greatness

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.



ஒருவருக்கு ஒளியாகும் சுய வெளிச்சம் என்பது உள்ளத்தை வெறுமையாக வைத்துக்கொள்வது. ஒருவருக்கு இழிவானது வெறுமை இழந்து உள்ளத்து குமுறலுடன் வாழ்வது எனலாம்.



ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.



ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்ல செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது கேவலமே.



ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும். ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்.


The light of life is mental energy; disgrace is his
Who says, 'I 'ill lead a happy life devoid of this.'


One's light is the abundance of one's courage; one's darkness is the desire to live destitute of such (a state of mind).



oLi-oruvaRku uLLa veRukkai iLi-oruvaRku
aqdhiRandhu vaazhdhum enal

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.



ஒத்தபடி பிறப்பெடுக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு என்பது அதனதன் செயல்பாடுகளில் மாற்றம் இருப்பதே.



எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.



எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.



பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்.


All men that live are one in circumstances of birth;
Diversities of works give each his special worth.


All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.



piRappokkum ellaa uyirkkum siRappovvaa
seydhozhil vaetrumai yaan

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.



செய் தொழிலில் மேன்மையான இடத்தை அடைந்தாலும் நற்சிந்தை அற்றவர் மேலானவராக இருக்கமாட்டார். தொழில் வேற்றுமையால் கீழான தொழில் செய்தாலும் நற்சிந்தையால் கீழானவராக இருக்கமாட்டார்.



மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.



நல்ல பண்புகள் ( பெருமைகள்) இல்லாதவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு உரியவர் அல்லர்; சிறிய பதவியில் இருந்தாலும் உயர்வான பண்புகளை உடையவர் பெருமை குறைந்தவர் அல்லர்.



பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈ.டுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள்.


The men of lofty line, whose souls are mean, are never great
The men of lowly birth, when high of soul, are not of low estate.


Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base.



maelirundhum maelallaar maelallar keezhirundhum
keezhallaar keezhal lavar

ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.



ஒருவனையே ஏற்று வாழும் மகளிர் போலவே பெருமை தன்னை தானே அறிந்து தனக்கு நேர்மையாய் வாழ்வதால் உண்டாகும்.



ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.



தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு.



தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும்.


Like single-hearted women, greatness too,
Exists while to itself is true.


Even greatness, like a woman's chastity, belongs only to him who guards himself.



orumai makaLirae poalap perumaiyum
thannaiththaan koNtozhukin undu

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.



பெருமைக்கு உரியவர்கள் செயல்படும் விதம் செயல்களை அருமையாக செய்யும் வழியை அறியும்படி இருக்கும்.



பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.



எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.



அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்.


The man endowed with greatness true,
Rare deeds in perfect wise will do.


(Though reduced) the great will be able to perform, in the proper way, deeds difficult (for others to do).



perumai yudaiyavar aatruvaar aatrin
arumai udaiya seyal

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு



சிறுமைப்பட்ட மனிதர்களின் உணர்ச்சியில் இருக்காது பெருமைக்கு உரிய பெரியவர்களை போற்றி ஏற்கும் நோக்கம்.



பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.



பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது.



பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை.


'As votaries of the truly great we will ourselves enroll,'
Is thought that enters not the mind of men of little soul.


It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature.



siRiyaar uNarchchiyul illai periyaaraip
paeNikkoL vaemennum noakku

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.



அழிவை நோக்கியே செயல்படுவார்கள் சீரல்லாதவர்களுக்கு சிறப்புகள் மட்டுமே கிடைத்தாலும்.



சிறப்பு நிலையும் தனக்கு பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்.



பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம்.



சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை.


Whene'er distinction lights on some unworthy head,
Then deeds of haughty insolence are bred.


Even nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce everincreasing pride.



iRappae purindha thozhitraam siRappundhaan
seeral lavarkaN patin

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.



என்றும் பணிவுடன் இருப்பதே பெருமை. சிறுமையே தன்னை தானே வியந்து தேவையற்றதை அணிந்துக் கொள்ளும்.



பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.



பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.



பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.


Greatness humbly bends, but littleness always
Spreads out its plumes, and loads itself with praise.


The great will always humble himself; but the mean will exalt himself in self-admiration.



paNiyumaam endrum perumai siRumai
aNiyumaam thannai viyandhu

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.



பெருமை ஆணவம் இல்லாமல் இருக்கும். சிறுமை ஆணவத்துடனே அடுத்ததை செய்யும்.



பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.



பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லா‌மலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை.



ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும். ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்.


Greatness is absence of conceit; meanness, we deem,
Riding on car of vanity supreme.


Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness.



perumai perumidham inmai siRumai
perumidham oorndhu vidal

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.



தேவையற்றதை மறைப்பதே பெருமை சிறுமையோ குற்றங்களை மட்டுமே எடுத்துரைக்கும்.



பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.



பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்‌களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர்.



பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும். பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்.


Greatness will hide a neighbour's shame;
Meanness his faults to all the world proclaim.


The great hide the faults of others; the base only divulge them.



atram maRaikkum perumai siRumaidhaan
kutramae kooRi vidum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

எண்ணமற்ற வெறுமையுடன் இருப்பதே மனிதனுக்கு பெருமை. உயிர்களிடத்தில் இருக்கும் வேறுபட்ட செயல்பாடுகளே பெருமை. மேலாக செயல்பட வாய்ப்பு இருந்தும் அப்படி இல்லாதவர் கீழானவரே. தன்னை தானே கேட்டு நடப்பவரே கற்புடை பெண் போன்றவர், தேவையற்றதை மறைத்து ஆற்றக்கூடியதை ஆற்றி பெருமிதம் இல்லாமல் பணிவுடன் இருப்பதே பெருமை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.