திருவள்ளுவரின் திருக்குறள்

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.



அறிவு அழிவிலிருந்து காக்கும் கருவி பகை கொண்டவருக்கு உள்ளே வந்து அழிக்கமுடியாத அரண்.



அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.



அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.



பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.


True wisdom wards off woes, A circling fortress high;
Its inner strength man's eager foes Unshaken will defy.


Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy.



aRivatranG kaakkunG karuvi seRuvaarkkum
uLLazhikka laakaa araN

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.



சென்ற இடத்திற்கு ஏற்ப மாறாமல் தீமைகளைக் களைந்து நன்மைகளை ஏற்பது அறிவு



மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.



மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு.



மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.


Wisdom restrains, nor suffers mind to wander where it would;
From every evil calls it back, and guides in way of good.


Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom.



sendra idaththaal selavitaa theedhoree-i
nandrinpaal uyppa thaRivu

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.



எதைபற்றியும் யார் யார் என்ன சொல்ல கேட்பினும் அதைப்பற்றிய உண்மையான பொருளை காண்பதே அறிவு.



எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.



எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.



எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.


Though things diverse from divers sages' lips we learn,
'Tis wisdom's part in each the true thing to discern.


To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom.



epporuL yaaryaarvaaik kaetpinum apporuL
meypporuL kaaNpa thaRivu

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.



எண்ணும் பொருளை உணர்தும்படிச் சொல்வதும், அடுத்தவர் வார்த்தையில் நுண்பொருள் காண்பதும் அறிவு.



தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.



அரிய கருத்துகளைக்கூடக் கேட்பவர்க்கு விளங்கும்படி எளியனவாகவும், அவர் மனங் கொள்ளும்படியும் சொல்லும்; பிறர் சொல்லும் கருத்து நுண்ணியது என்றாலும் அதை எளிதாக விளங்கிக் கொள்ளும்; இது அறிவு.



நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.


Wisdom hath use of lucid speech, words that acceptance win,
And subtle sense of other men's discourse takes in.


To speak so as that the meaning may easily enter the mind of the hearer, and to discern the subtlest thought which may lie hidden in the words of others, this is wisdom.



eNporuLa vaakach chelachchollith thaanpiRarvaai
nuNporuL kaaNpa thaRivu

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.



உலகத்தை ஒட்டிய நட்பு பாரட்டினாலும் மலர்வதும் சுருங்குவதும் இல்லாத்தே அறிவு.



உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு.



உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது அறிவு.



உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.


Wisdom embraces frank the world, to no caprice exposed;
Unlike the lotus flower, now opened wide, now petals strictly closed.


To secure the friendship of the great is true wisdom; it is (also) wisdom to keep (that friendship unchanged, and) not opening and closing (like the lotus flower).



ulagam thazheeiya thotpam malardhalum
koompalum illa thaRivu

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.



உலக இயக்கம் எப்படி என்று அறிந்து அதற்க்கு ஏற்றார்ப் போல் உலகத்துடன் இணக்குவது அறிவு.



உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.



உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.



உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.


As dwells the world, so with the world to dwell
In harmony- this is to wisely live and well.


To live as the world lives, is wisdom.



evva thuRaivadhu ulagam ulakaththoatu
avva thuRaiva thaRivu

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.



அறிவு உள்ளவர்கள் அடுத்து நடப்பதை அறிவார்கள் அறிவு இல்லாதவர்கள் அதை அறிய கல்லாதவர்கள்.



அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.



அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.



ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.


The wise discern, the foolish fail to see,
And minds prepare for things about to be.


The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise.



aRivutaiyaar aava thaRivaar aRivilaar
aqdhaRi kallaa thavar

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.



பயப்பட வேண்டியதற்கு பயம் இல்லாது இருப்பது அறியாமை பயப்பட வேண்டியதற்கு பயப்படுவது அறிவாளிகளின் தொழில்.



அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.



பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.



அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.


Folly meets fearful ills with fearless heart;
To fear where cause of fear exists is wisdom's part.


Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared.



anjuva thanjaamai paedhaimai anjuvadhu
anjal aRivaar thozhil

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.



எதிர்ப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளும் அறிவுடையவருக்கு இல்லை நடுங்கச் செய்யும் நோய்



வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.



நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.



வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.


The wise with watchful soul who coming ills foresee;
From coming evil's dreaded shock are free.


No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils.



edhiradhaak kaakkum aRivinaark killai
adhira varuvadhoar noai

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.



அறிவு உள்ளவர்கள் எல்லாம் உள்ளவர்கள் அறிவு இல்லாதவர்கள் என்ன பெற்றிருந்தாலும் இல்லாதவர்களே.



அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.



ஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும், அறிவு இல்லாதவர் ஏதும் இல்லாதவரே.



அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.


The wise is rich, with ev'ry blessing blest;
The fool is poor, of everything possessed.


Those who possess wisdom, possess every thing; those who have not wisdom, whatever they may possess, have nothing.



aRivutaiyaar ellaa mudaiyaar aRivilaar
ennutaiya raenum ilar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பகைவரால் கொள்ளை கொள்ள முடியாத அழிவையும் காக்கும் கருவியான அறிவு நன்றியுணர்வைத் தரும். யார் எதைப் பேச கேட்பினும் உண்மைப் பொருளை உணர்வதே அறிவு. உலகத்தில் ஒட்டி வாழ்ந்தாலும் உண்மைத் தன்மையுடன் இருப்பதே அறிவு. நடுக்கமோ, பயமோ, அஞ்சுவதோ இல்லாமல் தேவையான எல்லாம் உடையவரே அறிவுடைவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.