திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: நிறையழிதல் / Reserve Overcome

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.



காமம் சார்ந்த கணக்கிடுதல் உடைத்துவிடும் நிறை என்ற நாணத்தால் தாழ் போட்ட கதவும் வீழ்த்தும்படி.



நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய கோடாலி உடைத்து விடுகிறதே.



நாணம் என்னும் தாழ்பாளைக் கோத்திருக்கும் நிறை எனப்படும் கதவைக் காதல் விருப்பமாகிய கோடரி பிளக்கின்றதே!.



காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மன அடக்கம் என்கிற கதவையே உடைத்தெறிந்து விடுகின்றது.


The axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modesty.


My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of.



Kaamak Kanichchi Utaikkum Niraiyennum
Naanuththaazh Veezhththa Kadhavu

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.



காமம் என்ற ஒன்று மட்டுமே கண்ணில் நின்று என் நெஞ்சத்தை இரவிலும் ஆளும் தொழில் செய்கிறது.



காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது.



எல்லாரும் வேலையின்றி உறங்கும் நடுச்சாமத்திலும் என் நெஞ்சத்தைத் தண்டித்து வேலை வாங்குவதால் காதல் என்று சொல்லப்படும் ஒன்று இரக்கமற்றதாக இருக்கிறது.



காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில் அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது.


What men call love is the one thing of merciless power;
It gives my soul no rest, e'en in the midnight hour.


Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy.



kaamam enavondro kannindren nenjaththai
yaamaththum aalum thozhil

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.



மறைக்க முடியுமா என் காமத்தை. அது முன் அறிவிப்புக் குறிப்பின்றி தும்மல் போல் தோன்றிவிடுமே.



யான் காமத்தை என்னுள்‌ளே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல் போல் தானே வெளிப்பட்டு விடுகிறது.



என் காதல் ஆசையை நான் மறைக்கவே எண்ணுவேன்; ஆனால், அது எனக்கும் தெரியாமல் தும்மலைப் போல் வெளிப்பட்டு விடுகிறது.



எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் கட்டுப்படாமல் தும்மல் நம்மையும் மீறி வெளிப்படுகிறதல்லவா; அதைப் போன்றதுதான் காதல் உணர்ச்சியும்; என்னதான் மறைத்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்.


I would my love conceal, but like a sneeze
It shows itself, and gives no warning sign.


I would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneeze.



maraippaenman kaamaththai yaanoa kurippindrith
thummalpoal thoandri vidum

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.



நிறைவானவன் என்றே இருந்தேன் ஏனோ என் மறைக்க முடியா காமம் மறைவாக இருந்து பலர் முன்னிலையில் வெளிப்படுகிறது.



யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.



இன்றுவரை நான் என்னை மன அடக்கம் உடையவள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றோ என் காதல் ஆசை, மறைத்தலைக் கடந்து ஊரவர் அறிய வெளிப்பட்டுவிட்டது.



மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே.


In womanly reserve I deemed myself beyond assail;
But love will come abroad, and casts away the veil.


I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public.



Niraiyutaiyen Enpenman Yaanoen Kaamam
Maraiyirandhu Mandru Patum

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.



விரும்பாது சென்றவர் பின் செல்லாமல் இருக்கும் பெருந்தகைமை காமநோய் அடைந்தவர் அறியக்கூடிய ஒன்று இல்லை.



தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அனறு.



தன்னைப் பிரிந்து சென்றவர் பின்னே செல்லாது, தானும் அவரை விட்டுப் பிரிந்து நிற்கும் மன அடக்கத்தைக் காதல் நோயை அறியாதவர் பெற முடியும். அறிந்தவரால் பெற முடியாது.



தம்மைப் பிரிந்து சென்ற காதலரைப் பகையாகக் கருதி அவரைத் தொடர்ந்து மன அடக்கம், காதல் நோயுற்றவர்க்கு இருப்பதில்லை.


The dignity that seeks not him who acts as foe,
Is the one thing that loving heart can never know.


The dignity that would not go after an absent lover is not known to those who are sticken by love.



setraarpin sellaap perundhakaimai kaamanoai
utraar aRivadhondru andru

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.



விரும்பாது சென்றவர் பின் சென்று சேரும் சூழலை அளித்ததே என்னை ஏற்ற நானடைந்த துயரம்.



வெறுத்து நீங்கிய காதலரின் பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்த காமநோய் எத்தன்மையானது? அந்‌தோ!.



என்னைப் பிரிந்து சென்றவர் பின்னே நான் போய்ச் சேர வேண்டும் என்று என்னைப் பிடித்த இந்தக் காதல் நோய் தூண்டுவதால் இது மிகமிகக் கொடியது.



வெறுத்துப் பிரிந்ததையும் பொறுத்துக் கொண்டு அவர் பின்னே செல்லும் நிலையை என் நெஞ்சுக்கு ஏற்படுத்திய காதல் நோயின் தன்மைதான் என்னே.


My grief how full of grace, I pray you see!
It seeks to follow him that hateth me.


The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?.



setravar pinsaeral vaendi aliththaroa
etrennai utra thuyar

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.



நாணம் என்ற ஒன்றை அறியாமல் போகலாம் காமத்துடன் நமக்கு வேண்டியதை பேணுபவர் பெறச் செய்தால்.



நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்.



என்னால் விரும்பப்பட்டவர் காதல் ஆசையில் நான் விரும்பியதையே செய்தபோது, நாணம் என்று சொல்லப்படும் ஒன்றை அறியாமலேயே இருந்தேன்.



நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை.


No sense of shame my gladdened mind shall prove,
When he returns my longing heart to bless with love.


I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me).



naanena ondroa ariyalam kaamaththaal
paeniyaar petpa seyin

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.



பலவிதமான மாயத்தை செய்யும் கள்வன் பணிவாக பேசியே வார்த்தை அன்றோ நம் பெண்மை உடைக்கும் படை.



நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலரடைய பணிவுடைய மொழி அன்றோ?.



என் மன அடக்கமாகிய கோட்டையை அழிக்கும் ஆயுதம், பல பொய்த் தொழிலும் வல்ல இந்த மனத்திருடனின் பணிவான சொற்கள் அன்றோ!.



நம்முடைய பெண்மை எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வராம் காதலரின் பணிவான பாகுமொழியன்றோ?.


The words of that deceiver, versed in every wily art,
Are instruments that break through every guard of woman's heart!.


Are not the enticing words of my trick-abounding roguish lover the weapon that breaks away my feminine firmness?.



panmaayak kalvan panimozhi androa-nam
penmai udaikkum padai

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.



புணரக் கூடாது என சென்றேன் ஆனால் மேய்ந்து கூடினேன் நெஞ்சம் கலக்க ஏங்கியதைக் கண்டு.



ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன்.



அவர் வந்தபோது ஊடல் கொள்ளலாம் என்று எண்ணி, அவர்முன் நில்லாது அப்பால் போனேன்; நான் போன போதும், என் நெஞ்சம் அடக்கம் இல்லாமல் அவரோடு கலக்கத் தொடங்குவதைக் கண்டு இனி அது முடியாது என்று அவரைத் தழுவினேன்.



ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்.


'I 'll shun his greeting'; saying thus with pride away I went:
I held him in my arms, for straight I felt my heart relent.


I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him!.



pulappal enachchendraen pullinaen nenjam
kalaththal uruvadhu kandu

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.



கொழுப்பை தீயில் இட்டது போல் உருகும் நெஞ்சினார்க்கு உண்டோ புணராமல் ஊடி நிற்போம் எனல்.



கொழுப்பைத் தீயில் இட்டால் போன்ற உருகும் நெஞ்சுடைய என்னைப் போன்றவர்க்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும் தன்மை உண்டோ?.



கொழுப்பைத் தீயிலே போட்டால் அது உருகுவது போலத் தம் காதலரைக் கண்டால் மன அடக்கம் இன்றி உருகும் நெஞ்சினையுடைய பெண்களுக்கு, அவர் கூடவும், நாம் ஊடவும் பின்பு ஏதும் தெரியாத நிலையிலேயே நிற்போம் என்ற நிலை உண்டாகுமோ?.



நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?.


'We 'll stand aloof and then embrace': is this for them to say,
Whose hearts are as the fat that in the blaze dissolves away?.


Is it possible for those whose hearts melt like fat in the fire to say they can feign a strong dislike and remain so?.



ninandheeyil ittanna nenjinaarkku undoa
punarndhoodi niRpaem enal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நிறையான நாணம் என்ற கதவு உடைபடும் காமம் கணிந்தால், காமம் கண்ணில் நிறைந்து இரவும் பகலுமாய் நெஞ்சை ஆள்கிறது. காமம் தும்மல் போல் தோன்றுவதால் மறைக்க இயலவில்லை. நிறையானவன் என்றே இருந்தேன் இறையான அவன் மேல் கொண்ட காமம் மறைக்கமுடியாமல் பலர் முன்னிலையில் வெளிப்படுகிறது. அவன்(இறை) என்னை மறந்து விலகினாலும் அவன் மேல் உள்ள காமத்தால் பெருந்தகமை இல்லாமல் போயிற்று. நம்மை காக்கும் இறை மேல் காமம் நாணம் என்ற ஒன்றை இல்லாமல் செய்திடும். பலவிதமான மாயத்தை செய்யும் கள்வனான இறைவன் பணிவாக பேசியே வார்த்தையாகிய நாதம் அன்றோ நம் பெண்மை என்ற அச்சம் உடைக்கும் படை. யோகம் என்ற புணர்தல் கூடாது என சென்றேன் ஆனால் மேய்ந்து கூடினேன் நெஞ்சம் கலக்க ஏங்கியதைக் கண்டு. கொழுப்பை தீயில் இட்டது போல் உருகும் நெஞ்சி உடைய பக்தனுக்கு உண்டோ புணராமல் ஊடி நிற்போம் எனல்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.