திருவள்ளுவரின் திருக்குறள்

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.



இருக்கசெய்து இல்வாழ்வது, விருந்து கொடுப்பது போன்றவைகள் விவசாயம் செய்பவர்களின் பொருட்டே வந்தது.



வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.



வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.



இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.


All household cares and course of daily life have this in view
Guests to receive with courtesy, and kindly acts to do


The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality



irundhoampi ilvaazhva thellaam virundhoampi
vaeLaaNmai seydhaR poruttu

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.



விருந்தாளி வெளியே இருக்க சாகா மருந்தாக இருப்பினும் தான் மட்டும் உண்ணுவது இல்லை.



விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.



விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்று.



விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.


Though food of immortality should crown the board,
Feasting alone, the guests without unfed, is thing abhorred


It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality



virundhu puRaththadhaath thaanuNdal saavaa
marundheninum VaeNtaRpaaR Randru

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.



ஒவ்வொரு காலையும் விருந்தை எதிர்பார்ப்பவர் வாழ்கை பருவகால மாற்றத்தால் பாதிப்பது இல்லை.



தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.



நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.



விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.


Each day he tends the coming guest with kindly care;
Painless, unfailing plenty shall his household share


The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty



varuvirundhu vaikalum Ompuvaan vaazhkkai
paruvandhu paazhpatudhal indru

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.



உள்ளே இருந்து எதையும் செய்யவிடாமல் தடுக்கும் சோம்பல் முகமலர்ச்சியுடன் விருந்தை கவனிப்பவர்களை அணுகாது.



நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.



இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.



மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.


With smiling face he entertains each virtuous guest,
'Fortune' with gladsome mind shall in his dwelling rest


Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests



aganamarndhu seyyaaL URaiyum mukanamarndhu
nalvirundhu Ompuvaan il

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.



விதை இட வேண்டுமோ விருந்து படைத்து இன்பமுடன் மிச்சத்தை விரும்பும் மனிதர் நிலத்தில்.



விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?.



விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?.



விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?.


Who first regales his guest, and then himself supplies,
O'er all his fields, unsown, shall plenteous harvests rise


Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ?



viththum italveNdum kolloa virundhoampi
michchil misaivaan pulam

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.



செல்லும் விருந்தினரை வழி அனுப்பி வரும் விருந்துக்கு எதிர்பார்பவரை தெய்வீகமானவர்கள் ஆசீர்வதிப்பார்கள்.



வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.



வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.



வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.


The guest arrived he tends, the coming guest expects to see;
To those in heavenly homes that dwell a welcome guest is he


He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven



selvirundhu Ompi varuvirundhu paarththiruppaan
nalvarundhu vaanath thavarkku

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.



தன்னை விட தனக்கு துணை ஒன்று இல்லை. விருந்தின் பயன் வேள்வி பயன் போல் துணையாக இருக்கும்.



விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.



விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.



விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.


To reckon up the fruit of kindly deeds were all in vain;
Their worth is as the worth of guests you entertain


The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure



inaiththuNaith thenpadhon Rillai virundhin
thuNaiththunai vaeLvip payan

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.



போதனையால் பற்றை விட்டோம் என்பார்கள் விருந்து படைக்கும் வேள்வி செய்ய முற்படாதர்வர்கள்.



விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்.



விருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர்.



செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்.


With pain they guard their stores, yet 'All forlorn are we,' they'll cry,
Who cherish not their guests, nor kindly help supply


Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, "we have laboured and laid up wealth and are now without support."



parindhoampip patratraem enpar virundhoampi
vaeLvi thalaippataa thaar

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.



அடைந்தவைகளில் விருந்து உபசரிப்பதைபோல் இல்லை. சிறுபுத்தி உள்ளவர்களிடம் உபசரிக்காதா மடத்தனம் உண்டு.



செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.



செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.



விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.


To turn from guests is penury, though worldly goods abound;
'Tis senseless folly, only with the senseless found


That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth It is the property of the stupid



udaimaiyuL inmai virundhoampal Ompaa
madamai matavaarkaN uNdu

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.



முகர்ந்தாலே வாடும் அனிச்ச மலர்போல் முகத்தை திரித்து உபசரித்தாள் வீணாகி விடும் விருந்து.



அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.



தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.



அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.


The flower of 'Anicha' withers away, If you do but its fragrance inhale;
If the face of the host cold welcome convey, The guest's heart within him will fail


As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away



moappak kuzhaiyum anichcham mukandhirindhu
noakkak kuzhaiyum virundhu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

விவசாயத்தை தொழிலாக கொண்டதால் விருந்து என்பது தோன்றியது. உயிர் காக்கும் மருத்தாக இருப்பினும் விருந்துடன் பகிர்ந்து கொள்வதே சிறப்பானது. விருந்தை எதிர்பார்ப்பவர் வறுமைக்கு ஆட்படமாட்டார். வேள்வியை விட சிறந்த விருந்தோம்பல் மென்மையானது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.