திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: அரண் / The Fortification

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.



வழிநடத்துபவருக்கு கோட்டையே சிறந்த பொருள். அச்சத்தை போற்றுபவருக்கும் அதுவே பொருள்.



(படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.



பிறர்மேல் படை எடுத்துச் செல்பவர்க்கும் சிறந்தது அரண்; பிறருக்குப் பயந்து உள்ளிருப்பவர்க்கும் அதுவே சிறந்தது.



பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும்.


fort is wealth to those who act against their foes;
Is wealth to them who, fearing, guard themselves from woes.


A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter.



aatru pavarkkum araNporuL anjiththaR
poatru pavarkkum poruL

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.



பாதுகாக்கப் பட்ட நீரும், வளமான மண்ணும், குளிர் நிறைந்த காடும் உள்ளடக்கியதே அரண்.



மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.



தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டு அரண் என இயற்கை அரண்களாகும்.



ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும்.


A fort is that which owns fount of waters crystal clear,
An open space, a hill, and shade of beauteous forest near.


A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forests.



maNinheerum maNNum malaiyum aNinhizhaR
kaadum udaiya tharaN

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.



உயர்வு, அகலம், திடம், அனைத்து தேவைகள பூர்த்தியாக்கும் அருமை, என நான்கும் அமையப்படுவதே அரண் என்று எடுத்துரைக்கும் அரணுக்கான நூல்.



உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.



பகைவர் ஏற முடியாத உயரம், காவலர் நிற்க இயங்க வசதியான அகலம், இடிக்கமுடியாத வலிமை, கடக்க முடியாத பொறிகளின் அருமை, இந்நான்கையும் மிகுதியாக உடைய கோட்டையையே செயற்கை அரண் என்று நூல்கள் கூறும்



உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும்.


Height, breadth, strength, difficult access:
Science declares a fort must these possess.


The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz., height, breadth, strength and inaccessibility.



uyarvakalam thiNmai arumai-inh naankin
amaivaraN endruraikkum nool

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.



சிறுமை ஏற்படும் காலத்தில் பாதுகாக்கும் பெரிய இடமாகவும், பகை கொண்டவர்களின் ஊக்கத்தை அழிப்பதாகவும் இருப்பதே அரண்.



காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்.



காவல் செய்யவேண்டிய இடம் சிறியதாயும், கோட்டையின் சுற்றுப் பெரியதாயும், சண்டையிட வரும் பகைவர்க்கு மலைப்பைத் தருவதாயும் அமைவது அரண்.



உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும்.


A fort must need but slight defence, yet ample be,
Defying all the foeman's energy.


A fort is that which has an extensive space within, but only small places to be guarded, and such as can destroy the courage of besieging foes.



siRukaappiR paeridaththa thaaki uRupagai
ookkam azhippa tharaN

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.



நீரால் செய்யப்பட்டாலும் அந்நீரை எளிதாக எற்காத கூழ் போல் தனது அகத்தே இருப்பவருக்கு எளிதாக இருப்பதே அரண்.



பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.



பலநாள் முற்றுகையிட்டாலும் பகைவரால் கைப்பற்ற முடியாதது ஆகி, உள்ளிருப்பார்க்கு வேண்டிய உணவையும் உடையதாய் உள்ளிருப்போர் போரிட வாய்ப்பாகவும் இருப்பதே அரண்.



முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும் படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும்.


Impregnable, containing ample stores of food,
A fort for those within, must be a warlike station good.


A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and affords a position of easy defence to its inmates.



koLaRkaridhaaik koNtakoozhth thaaki akaththaar
nilaikkeLidhaam neeradhu araN

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.



தேவைகளை தீர்க்கும் எல்லா பொருளும் உள்ளடக்கியதாகவும், நல்ல ஆட்களை கொண்டதாகவும் இருப்பது அரண்.



தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும்.



உள்ளிருப்போர்க்குத் தேவையான பொருள் எல்லாம் இருப்பதாய், வெளியே இருந்து அழிக்க முயலும் பகைவரை வெல்ல உதவும் வீரரைப் பெற்றதாய் இருப்பதே அரண்.



போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும், களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும்.


A fort, with all munitions amply stored,
In time of need should good reserves afford.


A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes).



ellaap poruLum udaiththaai idaththudhavum
nallaaL udaiyadhu araN

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.



முழுவதையும் வளைத்தோ, முழுவதையும் வளைக்காமல் அறிந்தோ, சுழ்ச்சியால் பிரிவுபடுத்தியோ கைப்பற்ற கடினமாக இருப்பது அரண்.



முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.



முழுவதுமாகச் சூழ்ந்து கொண்டாலும் சூழாமல் வலு இழந்த இடத்தில் நெருங்கிப் போரிட்டாலும் உள்ளிருப்போரில் சிலரை ஐந்தாம் படை ஆக்கினாலும், பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதே அரண்.



முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்.


A fort should be impregnable to foes who gird it round,
Or aim there darts from far, or mine beneath the ground.


A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it.



mutriyum mutraa theRindhum aRaippatuththum
patraR kariyadhu araN

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.



முழுமையான பலன் தந்து, அண்டிய யாவருக்கும் அடைக்கலம் தந்து, கைப்பற்றயவரை வெற்றிக்கொள்வது அரண்.



முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும்.



கோட்டைக்குள் இருப்போர் தாம் இருக்கும். இடத்தை விட்டுவிடாமல் நின்று படைமிகுதியால் சூழ்ந்து கொண்ட பகைவரையும் பொருது, வெல்வதே அரண்.



முற்றுகையிடும் வலிமைமிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும்.


Howe'er the circling foe may strive access to win,
A fort should give the victory to those who guard within.


That is a fort whose inmates are able to overcome without losing their ground, even abler men who have besieged it.



mutraatri mutri yavaraiyum patraatrip
patriyaar velvadhu araN

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.



கைப்பற்ற முனையும் மாற்றாரை வாசலிலே அழித்து, செயல்படுதலில் வெற்றியே இலக்காக கொண்டு ஆள்வது அரண்.



போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.



போர் தொடங்கிய உடனே பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால் சிறந்த விளங்குவதே அரண்.



போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்ளே இருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்.


At outset of the strife a fort should foes dismay;
And greatness gain by deeds in every glorious day.


A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield.



munaimukaththu maatralar saaya vinaimukaththu
veeReydhi maaNda tharaN

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.



எவ்வளவு சிறப்புப் பெற்றதாக இருப்பினும் செயல் திறன் இல்லாதவர் இடத்தில் பயன் அற்றதாகும் அரண்.



எத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை.



எத்தனை சிறப்புகளை உடையது என்றாலும் வெல்லும் பகை அறிந்து செயல்படும் திறம் இல்லாதவர் இருந்தால், அரண் இருந்தும் இல்லாததே ஆகும்.



கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது.


Howe'er majestic castled walls may rise,
To craven souls no fortress strength supplies.


Although a fort may possess all (the above-said) excellence, it is, as it were without these, if its inmates possess not the excellence of action.



enaimaatchith thaakiyak kaNNum vinaimaatchi
illaarkaN illadhu araN


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

ஆள்பவருக்கும் அஞ்சுபவருக்கும் அவசியமான அரண். நன்நீரும் வளமான மண்ணும் நிழல்நிறை காடும் மலையும் அடக்கியதாக இருக்கும். பகைவரை தடுக்கவும் உள்ளவரை பாதுகாக்கவும் வல்லமை கொண்டதாக இருக்கவேண்டும். எவ்வளவு சிறப்பு பெற்ற அரணாக இருப்பினும் செயல்திறன் அற்ற ஆட்சியாளர் அமைந்தால் அரண் பயனற்றதாகிவிடும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.