திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: வெகுளாமை / Restraining Anger

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கா லென்



செல்லத்தகுந்த இடத்தில் காப்பவரே சினத்தை காப்பவர் செல்லத்தகாத இடத்தில் அடக்கினாலும் அடக்காவிட்டாலும் என்ன?



பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?.



எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?.



தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?.


Where thou hast power thy angry will to work, thy wrath restrain;
Where power is none, what matter if thou check or give it rein?.


He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?.



sellitaththuk kaappaan sinangaappaan allitaththuk
kaakkin-en kaavaakkaa laen

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.



செல்லத்தகாத இடத்தில் சினம் தீமையானது செல்லத் தகுந்த இடத்திலும் அதைவிட தீமையானது இல்லை.



பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.



பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.



வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.


Where power is none to wreak thy wrath, wrath importent is ill;
Where thou hast power thy will to work, 'tis greater, evil still.


Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.



sellaa idaththuch sinandheedhu sellitaththum
iladhanin theeya piRa

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.



மறுத்துவிட வேண்டும் கோபத்தை யாராக இருப்பினும் தீமை பிறப்பது அதனால் வரும்.



யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.



தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.



யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.


If any rouse thy wrath, the trespass straight forget;
For wrath an endless train of evils will beget.


Forget anger towards every one, as fountains of evil spring from it.



maRaththal vekuLiyai yaarmaattum theeya
piRaththal adhanaan varum

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.



இன்பத்தையும் கொண்டாட்டத்தையும் கொன்றுவிடும் சினத்தை விட வேறு பகையும் உண்டோ



முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?.



முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?.



சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.


Wrath robs the face of smiles, the heart of joy,
What other foe to man works such annoy?.


Is there a greater enemy than anger, which kills both laughter and joy ?.



nakaiyum uvakaiyum kollum sinaththin
pakaiyum uLavoe piRa

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.



தன்னை தானே காத்துக்கொள்ள சினம் வராமல் காக்க வேண்டும் இல்லையென்றால் தன்னையே கொன்றுவிடும் சினம்.



ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.



தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.



ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.


If thou would'st guard thyself, guard against wrath alway;
'Gainst wrath who guards not, him his wrath shall slay.


If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him.



thannaiththaan kaakkin sinangaakka kaavaakkaal
thannaiyae kollunhj sinam

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.



சினம் என்ற தன்னை சேர்ந்தவரை அழிப்பது இனம் என்ற பெரிய கடலையே வற்ற செய்துவிடும் .



சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.



சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும்.



சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.


Wrath, the fire that slayeth whose draweth near,
Will burn the helpful 'raft' of kindred dear.


The fire of anger will burn up even the pleasant raft of friendship.



sinamennum saerndhaaraik kolli inamennum
Emap punaiyaich sudum

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.



சினத்தை சிறந்ததாக எண்ணி போற்றுபவர் அடையும் கெடுதல் பூமியை கையால் அடித்து வலியால் துடிப்பதைப் போன்றது.



நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.



நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.



நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.


The hand that smites the earth unfailing feels the sting;
So perish they who nurse their wrath as noble thing.


Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail.



sinaththaip porulendru koNtavan kaedu
nilaththaRaindhaan kaipizhaiyaa thatru

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.



மலர் பறித்து வீசுவதைப் போல் துன்பம் செய்தாலும் இணக்கம் கொள்ள வந்தால் சினம் அன்றி சேர்த்துக்கொள்வது நன்று.



பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.



பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது.



தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.


Though men should work thee woe, like touch of tongues of fire.
'Tis well if thou canst save thy soul from burning ire.


Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger.



iNareri thoaivanna innaa seyinum
puNarin vekuLaamai nandru

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.



நினைத்ததை எல்லாம் உடனே அடையும் உள்ளத்தில் சினம் இருந்தால் எப்படி சாத்தியமாகும்?



ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.



உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.



உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.


If man his soul preserve from wrathful fires,
He gains with that whate'er his soul desires.


If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.



uLLiya thellaam udaneydhum uLLaththaal
uLLaan vekuLi enin

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.



மரணித்தவர் (சினம் கொண்டவர்) மரணித்தவருக்கு ஒப்பானவர் சினத்தை விட்டோழித்தவர் துறவிக்கும் துனையாகிறார்.



சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.



பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே.



எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.


Men of surpassing wrath are like the men who've passed away;
Who wrath renounce, equals of all-renouncing sages they.


Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).



iRandhaar iRandhaar anaiyar sinaththaith
thuRandhaar thuRandhaar thuNai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

சினம் செல்லுபடி ஆகாத இடத்தில் காப்பது பயன் அற்றது. சினம் தீமை பயப்பதால் அதை மறத்தல் வேண்டும். மகிழ்வையும் கொண்டாட்டத்தையும் அழிக்கும் பகைவனாக சினம் இருக்கிறது. தனக்கும் தன் இனத்திற்கும் எதிரியாக இருக்கும் சினத்தை தவிர்போம். உள்ளதை அடையும் ஆற்றலை இழக்கச் செய்யும் சினம். சினத்தை துறந்தவர் துறவிக்கும் மேலானவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.