திருவள்ளுவரின் திருக்குறள்

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.



போர்ப்படை, குடிமக்கள், உணவு, ஆலோசனை தரும் அமைச்சர்கள், நட்பு, அரண்மனை ஆகிய ஆறும் பெற்றவரே அரசருள் சிறந்தவர்.



படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.



வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.



ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்.


An army, people, wealth, a minister, friends, fort: six things-
Who owns them all, a lion lives amid the kings.


He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.



padaikuti koozh-amaichchu natparaN aaRum
utaiyaan arasaruL ERu

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.



அச்சம் கொல்லாமை, அடுத்தவருக்கு உதவுதல், அறிவுடன் இருத்தல், ஆர்வமுடன் செயல்படுதல் ஆகிய நான்கும் குறைவின்றி இருப்பதே அரசருக்கு இயல்பு.



அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.



அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் - இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும்.



துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்.


Courage, a liberal hand, wisdom, and energy: these four
Are qualities a king adorn for evermore.


Never to fail in these four things, fearlessness, liberality, wisdom, and energy, is the kingly character.



anjaamai eekai aRivookkam inhnhaankum
enjaamai vaendhark kiyalbu

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.



சோர்வு இல்லாது இருத்தல், கல்வி, துணிவுடன் செயல்படுதல் ஆகிய மூன்றும் நீங்காமல் இருக்க வேண்டும் நலத்தை ஆள்பவருக்கு.



காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.



செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.



காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.


A sleepless promptitude, knowledge, decision strong:
These three for aye to rulers of the land belong.


These three things, viz., vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of a country.



thoongaamai kalvi thuNivutaimai immoondrum
neengaa nilanaan pavarkku

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.



அறத்திற்கு இழக்கு இல்லாமல் அல்லாதவற்றை விளக்கி வீரத்திற்கு இழக்கு இல்லாமல் மனத்தோடு இருப்பதே அரசு.



ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.



தனக்குச் சொல்லப்பட்ட அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கி, வீரத்தில் தவறாமல் நின்று மானத்தைப் பெரிதாக மதிப்பதே அரசு.



அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்.


Kingship, in virtue failing not, all vice restrains,
In courage failing not, it honour's grace maintains.


He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice.



aRanizhukkaa thallavai neekki maRanizhukkaa
maanam udaiya tharasu

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.



எது எப்படி அமையவேண்டும் என்று இயற்றுவதும் அதற்க்கான பொருளை ஈட்டுவதும் அதை காப்பதும் மேலும் அதன் செயல்களை ஒழுங்குபட வகுப்பதும் சிறப்பாக செய்வது அரசு.



பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.



பொருள் வரும் வழிகளை உருவாக்குவது வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவது என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு.



முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.


A king is he who treasure gains, stores up, defends,
And duly for his kingdom's weal expends.


He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it.



iyatralum eettalunG kaaththalum kaaththa
vakuththalum valla tharasu

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.



பார்க்க எளிமையாய் எரிச்சல் ஊட்டும் வார்த்தைகள் தவிர்த்தவராய் இருக்கும் மன்னனின் ஆட்சி எல்லை விரிவடையும்.



காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.



நீதி வேண்டி வருபவர் காண்பதற்கு எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், ஆளுவோனின் ஆட்சிப் பரப்பு விரிவடையும். (அவர் கட்சி வெற்றி பெறும்தொகுதிகள் கூடும்).



காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.


Where king is easy of access, where no harsh word repels,
That land's high praises every subject swells.


The whole world will exalt the country of the king who is easy of access, and who is free from harsh language.



kaatchik keLiyan kadunjollan allanael
meekkooRum mannan nilam

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.



இனிமையான வார்த்தைகளுடன் உதவ வல்லமை படைத்தவருக்கு தனது வார்த்தைகள் படியே அமையும் உலகு.



இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.



இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய எல்லாவற்றையும் இவ்வுலகம் தரும்.



வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.


With pleasant speech, who gives and guards with powerful liberal hand,
He sees the world obedient all to his command.


The world will praise and submit itself to the mind of the king who is able to give with affability, and to protect all who come to him.



insolaal eeththaLikka vallaarkkuth thansolaal
thaan-kaN danaiththiv vulagu

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.



இது இப்படி இருக்க வேண்டும் என்று முறை செய்து அதை காப்பாற்றும் மன்னவன் மனிதர்களுக்கு இறையாக வைக்கப்படும்.



நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.



நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.



நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.


Who guards the realm and justice strict maintains,
That king as god o'er subject people reigns.


That king, will be esteemed a God among men, who performs his own duties, and protects (his subjects).



muRaiseydhu kaappaatrum mannavan makkatku
iRaiyendru vaikkap padum

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.



காதுகளும் கூசும் வார்த்தைகளை பொறுத்துக் கொள்ளும் பண்புடைய மன்னனின் ஆளுமையின் கிழ் தங்கும் உலகு.



குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.



இடித்துக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்புள்ள அரசின் குடைக் கீழ், இந்த உலகமே தங்கும்.



காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்.


The king of worth, who can words bitter to his ear endure,
Beneath the shadow of his power the world abides secure.


The whole world will dwell under the umbrella of the king, who can bear words that embitter the ear.



sevikaippach soRpoRukkum paNpudai vaendhan
kavikaikkeezhth thangum ulagu

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.



தானம் செய்தல், (இலவசமாக கொடுத்தல் - விலை இல்லாத பொருள்கள் கொடுத்தல்) அடுத்தவர் கருத்துக்கு வாய்ப்பு அளித்தால், சிறந்த அரசாட்சி, மக்களை காத்தல் இந்த நான்கும் உடையவரே ஆட்சியாளர்களில் வெளிச்சமானவர்கள்.



கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.



தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, எதிர் கட்சியினரிடமும் இனிதாய்ப்போசுவது, நீதி விளங்கும் ஆட்சி செய்வது, மக்களைப் பாதுகாப்பது இவை நான்கையும் உடையதே அரசுகளுக்கு விளக்குப் போன்றது.



நல்வாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்.


Gifts, grace, right sceptre, care of people's weal;
These four a light of dreaded kings reveal.


He is the light of kings who has there four things, beneficence, benevolence, rectitude, and care for his people.



kodaiyaLi sengoal kudiyoampal naankum
udaiyaanaam vaendhark koLi


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

ஆட்சி என்பது ஆற்றல் பொருந்தி இருக்க ஆறு அங்கங்கள் உடையதாக இருக்க வேண்டும். நன்கு திட்டம் செய்து யாவரும் நன்மை அடைய வழி அமைக்க செய்வதை இங்கே தெளிவு செய்கிறார் வள்ளுவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.