திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: ஒற்றாடல் / Detectives

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.



நடப்புகளை அறிவதும், விளக்கம் தரும் நூல்களும் என இரண்டும் சிறந்த ஆட்சியாளருக்கு கண் போன்றது.



ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.



ஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதிநூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக.



நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.


These two: the code renowned and spies,
In these let king confide as eyes.


Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed.



otrum uraisaandra noolum ivaiyiraNdum
thetrenka mannavan kaN

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.



எல்லா தரப்பு மக்களுக்கும் எப்படியெல்லாம் ஆட்சி மாற்றங்களை நிகழ்த்துகிறது என்பதை எல்லா வகையிலும் சரியாக அறித்திருப்பது ஆடசியாளர்களின் தொழில்.



எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.



பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.



நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்.


Each day, of every subject every deed,
'Tis duty of the king to learn with speed.


It is the duty of a king to know quickly (by a spy) what all happens, daily, amongst all men.



ellaarkkum ellaam nikazhpavai eGnGnaandrum
vallaRidhal vaendhan thozhil

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.



ஆய்ந்து அறிபவரை அறிந்து நடப்புகளை தெரிந்துக் கொள்ளா ஆட்சியாளரின் வெற்றி நிலைத்த வெற்றியாய் இருக்காது.



ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழி வேறு இல்லை.



எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி, நிலைத்து வெற்றி பெற வேறொரு வழியே இல்லை.



நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை.


By spies who spies, not weighing things they bring,
Nothing can victory give to that unwary king.


There is no way for a king to obtain conquests, who knows not the advantage of discoveries made by a spy.



otrinaan otrip poruLdheriyaa mannavan
kotranG koLakkitandhadhu il

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.



செயல்படுபவர், தனக்கு உறவு முறைக் கொண்டவர், வேண்டதகாதவர் என்று பாகுபாடு அற்று அனைவரையும் ஆராய்வதே ஒற்று.



தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.



அரசுப் பணியாளர், ஆளும் கட்சி, அதன் எதிர்கட்சியினர், அயலவர் என்று அனைவரின் சொல், செயல் கொண்டு அவர்தம் மனக்கருத்தை அறிபவரே ஒற்றர்.



ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர், வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல் பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும்.


His officers, his friends, his enemies,
All these who watch are trusty spies.


He is a spy who watches all men, to wit, those who are in the king's employment, his relatives, and his enemies.



vinaiseyvaar thamsutram vaeNdaadhaar endraangu
anaivaraiyum aaraaivadhu otru

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.



கண்டுக்கொள்ள முடியாத உருவமுடன், எதைக்கண்டும் அஞ்சமல், எந்நிலையிலும் உள்ளதை சொல்லாமல், வல்லமையுடன் செயல்படுவதே ஒற்று.



ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவன்.



பிறர் சந்தேகப்படாத வேடத்‌தோடு சென்று, சந்தேகப்பட்டுச் சினந்தால் அஞ்சாது நின்று, சாமதானபேத தண்டம் என எந்த உபாயம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாத வல்லமை பெற்றவரே ஒற்றர்.



சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும்.


Of unsuspected mien and all-unfearing eyes,
Who let no secret out, are trusty spies.


A spy is one who is able to assume an appearance which may create no suspicion (in the minds of others), who fears no man's face, and who never reveals (his purpose).



kataaa uruvotu kaNNanjaadhu yaaNdum
ukaaamai valladhae otru

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.



எதன்மீதும் பற்று இல்லாத துறந்தவர்கள் போல் மாறி தன்னலம் மறந்து ஆராய்ந்து எத்துன்பம் செய்தாலும் சோர்வு இல்லாமல் செயல்படுவதே ஒற்று.



துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அறிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்து விடாதவரே ஒற்றர் ஆவர்.



செல்ல முடியாத இடங்களுக்கும் கூடத் துறவியர் வேடத்தில் சென்று, அறிய வேண்டுவற்றை அறிந்து, அங்கே பிடிபட்டால், பிடித்தவர் எத்தகைய துன்பம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாதவரே ஒற்றர்.



ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்.


As monk or devotee, through every hindrance making way,
A spy, whate'er men do, must watchful mind display.


He is a spy who, assuming the appearance of an ascetic, goes into (whatever place he wishes), examines into (all, that is needful), and never discovers himself, whatever may be done to him.



thuRandhaar pativaththa raaki iRandhaaraaindhu
enseyinum soarviladhu otru

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.



அறியமுடியாமல் மறைந்தவற்றை கேட்டு அறிந்து அப்படி அறிந்ததில் ஐயப்பாடு இல்லாமல் செயல்படுவதே ஒற்று.



மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.



ரகசியமாக நடந்த செயல்களையும் அவற்றைச் செய்தவர் வாயாலேயே கேட்டு அறியும் ஆற்றல் படைத்தவராய், கேட்டவற்றுள் எத்தகைய சந்தேகமும் இல்லாதவராய் இருப்பவரே ஒற்றர்.



மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்.


A spy must search each hidden matter out,
And full report must render, free from doubt.


A spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has known.



maRaindhavai kaetkavaR Raaki aRindhavai
aiyappaatu illadhae otru

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.



கண்காணித்து தந்த தகவல்களை மேலும் ஒரு கண்காணிப்பினால் கண்காணித்து அறிந்துக் கொள்ளவேண்டும்.



ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும்.



ஓர் ஒற்றர் கொண்டு வந்த செய்தியை இன்னும் ஓர் ஒற்றர் தரும் செய்தியோடு சரி பார்த்துக் கொள்க.



ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்.


Spying by spies, the things they tell
To test by other spies is well.


Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy.



otrotrith thandha poruLaiyum matrumoar
otrinaal otrik koLal

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.



கண்காணித்து தந்த தகவல்களை சரியாக உணரவேண்டும் என்றால் மேலும் மூன்று நபர்களின் தகவலுடன் ஒப்பிட்டு அறிந்துக் கொள்ளவேண்டும்.



ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள வேண்டும், அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.



ஒற்றரை இயக்கும்போது ஓர் ஒற்றரை இன்னுமோர் ஒற்றர் அறிந்துகொள்ளாதபடி இயக்குக; ஒரு காரியத்திற்கு மூவர் சொல்லும் ஒன்றுபோலவே இருந்தாலும் அதையும் ஆய்ந்து பிறகு ஏற்றுக்கொள்க.



ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம்.


One spy must not another see: contrive it so;
And things by three confirmed as truth you know.


Let a king employ spies so that one may have no knowledge of the other; and when the information of three agrees together, let him receive it.



otreR RuNaraamai aaLka udanmoovar
sotrokka thaeRap padum

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.



சிறப்பானது என்று கண்காணித்தலை பாராட்டுவது செய்யக்கூடாது. செய்தால் மறைப்பொருளை வெளிப்படுத்தியது போல் ஆகும்.



ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது, செய்தால் மறைபொருளைத்தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.



மறைவாக நிகழ்வனவற்றைஅறிந்து சொல்லும் ஒற்றருக்குப் பரிசு தருக; மறைவாகவே தருக; ஊர் அறியத் தருவது மறைவையும் ஒற்றரையும் தானே வெளிப்படுத்தியது போல் ஆகும்.



ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும்.


Reward not trusty spy in others' sight,
Or all the mystery will come to light.


Let not a king publicly confer on a spy any marks of his favour; if he does, he will divulge his own secret.



siRappaRiya otrin-kaN seyyaRka seyyin
puRappatuththaan aakum maRai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நடப்புகளை அறிந்து நூல்களில் தெளிவுபெற்று இருப்பதற்கே கண் உள்ளது. கண்காணிப்பதற்கும் இதுவே அவசியம். செயல்களில் மாற்றம் இல்லாதபடியும், அதே சமயத்தில் செயல்கள் தந்த மாற்றத்தை காண்காணிப்பதும் ஆட்சியாளர்களின் பணி. காண்காணிப்பை பலர் மூலம் உறுதி செய்வது நல்லது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.