திருவள்ளுவரின் திருக்குறள்

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.



கண்ணே நீ வருந்துவது எப்படி ? மாறாத நோயை தானாகவே கண்டு தனக்குள்ளே வருந்துகிறாய்.



தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?.



தணியாத காதல் துன்பத்தை நான் அறிந்ததே இந்தக் கண்கள் எனக்கு அவரைக் காட்டியதால்தானே? இப்போது அவரைக் காட்டு என என்னிடம் அழுவது எதற்கு?.



கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?.


They showed me him, and then my endless pain
I saw: why then should weeping eyes complain?.


As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him).



kaNdhaam kaluzhva thevan-koloa thandaanhoi
thaamkaatta yaamkan dadhu

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.



தெரிந்து உணராமல் பார்வையால் விழுங்கிய கண் கருணையின்றி அவசரமாய் அல்லல்படுவது ஏன்.



ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?.



வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது நம்மால் வந்தது; நாம்தாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் துன்பப்படுகின்றனவே எதற்காக?.



விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால் தான் என அறியாமல் தவிப்பது ஏன்?.


How glancing eyes, that rash unweeting looked that day,
With sorrow measureless are wasting now away!.


The dyed eyes that (then) looked without foresight, why should they now endure sorrow, without feeling sharply (their own fault).



therindhunaraa noakkiya un-kan parindhunaraap
paidhal uzhappadhu evan

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.



வேண்டும் என்று தானாகவே விரும்பிப் பார்த்து விலகவும் செய்கிறது இது நகைப்புக்கு உரியது.



அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.



அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.



தாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள், இன்று தாமாகவே அழுகின்றன. இது நகைக்கத்தக்க ஒன்றாகும்.


The eyes that threw such eager glances round erewhile
Are weeping now. Such folly surely claims a smile!.


They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at ?.



kadhumenath thaanoakkith thaamae kaluzhum
ithunakath thakka thudaiththu

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.



சொல்லமுடியா நீர் வற்றிய கண் விடைபெறமுடியா பிறவி நோயை என்கண் நிலை நிறுத்திக் கொண்டது.



என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன.



மை தீட்டப்பட்ட இந்தக் கண்கள் நான் தப்பிக்கவும், வாழவும் முடியாத காதல் துன்பத்தை எனக்குத் தந்துவிட்டுத் தாமும் அழ முடியாமல் நீர் வற்றிப் போய்விட்டன.



தப்பிப் பிழைக்க முடியாத, தீராத காதல் நோயை எனக்குத் தருவதற்குக் காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப் போய்விட்டன.


Those eyes have wept till all the fount of tears is dry,
That brought upon me pain that knows no remedy.


These painted eyes have caused me a lasting mortal disease; and now they can weep no more, the tears having dried up.



peyalaatraa neerulandha un-kan uyalaatraa
uyvilnhoi en-kan niruththu

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.



உறக்கம் கொள்ள உடன்படாது இருக்கிறது கடலைவிட பெரிய காம நோயை உண்டாக்கிய என் கண்.



அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.



கடலைவிடப் பெரிதாகும் காதல் துன்பத்தை எனக்குத் தந்த கண்கள், தாமும் தூங்காமல், துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.



கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றன.


The eye that wrought me more than sea could hold of woes,
Is suffering pangs that banish all repose.


Mine eyes have caused me a lust that is greater than the sea and (they themselves) endure the torture of sleeplessness.



patalaatraa paidhal uzhakkum katalaatraak
kaamanoi seydha-en kan

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.



இனிது இனிது எனக்கு இந்த நோய் செய்த கண் தானும் அதில் சிக்கிக் கொண்டது.



எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!.



எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது.



ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே!.


Oho! how sweet a thing to see! the eye
That wrought this pain, in the same gulf doth lie.


The eyes that have given me this disease have themselves been seized with this (suffering). Oh! I am much delighted.



ohoh inidhae emakkinnoi seydhakan
thaa-am itharpat tadhu

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.



அழுது அழுது கண்ணிர் வற்றியது மகிழ்ந்து மகிழ்ந்து விரும்பி அவரைக் கண்ட கண்.



அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.



விரும்பி மகிழ்ந்து விடாமல் அன்று அவரைக் கண்ட கண்களின் உள் இருக்கும் கண்ணீர் எல்லாம் இன்று வருந்தி வருந்தி வற்றிப் போகட்டும்!.



அன்று, இழைந்து குழைந்து ஆசையுடன் அவரைக் கண்ட கண்களே! இன்று பிரிந்து சென்றுள்ள அவரை நினைத்துக் தூங்காமலும், துளிக் கண்ணீரும் அற்றுப்போகும் நிலையிலும் துன்பப்படுங்கள்.


Aching, aching, let those exhaust their stream,
That melting, melting, that day gazed on him.


The eyes that became tender and gazed intently on him, may they suffer so much as to dry up the fountain of their tears.



uzhandhuzhan thulneer aruka vizhaindhizhaindhu
vaenti avarkkanda kan

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.



உறவு பேணாமல் விலகி ஒருவர் இருக்கின்றார் என்றால் மற்றவர்கள் காணாதபடி அமைதியாக இருக்கவில்லையே கண்.



உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.



உள்ளத்தால் என்னை விரும்பாமல் வாயால் மட்டுமே விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால், அவரைக் காண முடியாமல் என் கண்கள் தூங்காமல் இருக்கின்றன.!.



என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றனர்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!.


Who loved me once, onloving now doth here remain;
Not seeing him, my eye no rest can gain.


He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes suffer from not seeing him.



paenaadhu pettaar ularmanno matravark
kaanaadhu amaivila kan

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.



வரவில்லை என்றாலும் தூங்குவது இல்லை வந்தாலும் தூங்குவது இல்லை அன்பால் இணைந்தவர் கண்.



காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கி‌டையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.



அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி் தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்களுக்குத் தூங்க முடியாத துன்பந்தான்.



இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்துவிட்டாலும் பிறகு தூங்குவதில்லை. இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத் தானே இருக்க முடியும்.


When he comes not, all slumber flies; no sleep when he is there;
Thus every way my eyes have troubles hard to bear.


When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony.



vaaraakkaal thunjaa varindhunjaa aayidai
aaragnar utrana kan

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.



மறைத்து வைத்தல் ஊரார்க்கு அரியதாக இருக்கிறது என்றால் என்னைப் போன்ற வெளிப்படையாய் பறைசாற்றும் கண் பெற்றதே காரணம்.



அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.



அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை அறிந்து கொள்வது இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது.



காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது, யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்ல.


It is not hard for all the town the knowledge to obtain,
When eyes, as mine, like beaten tambours, make the mystery plain.


It is not difficult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drums.



maraiperal ooraarkku aridhandraal empoal
araiparai kannaar agaththu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

கண் தானாகவே தனக்கு காம நோய் உண்டாக்குகிறது. தெளிவாய் உணராமலேயே கண்டு அல்லல் படுகிறது. வேண்டும் என்று விரும்பி பார்த்து விலகி தவிக்கும் கண்ணின் செயல் நகைப்புக்குரியது. நீர் வடிந்து உலர்ந்த கண் நித்தியத்தை அடையும் காமநோய் கடவுள் மேல் வந்தால், பால் பற்றி வந்தால் பிறவித் தொடர் வரும். பிறவிக் கடல் கடக்கும் வேட்கையால் என் கண் இரவிலும் உறங்க மறுக்கிறது. இனிமையிலும் இனிமை இந் நோய் செய்த கண் இதனுடன் உட்படுவதால். அழுது அழுது கண்ணிர் வற்றினாலும் அவரை கண்டதால் மகிழ்வாய் இருக்கிறது. உறவு பாராட்டாமல் இருக்கவும் செய்யும் இம்மனிதர் இடத்தில் என் கண் அவரை காட்டிவிட்டது. விலகி நின்றாலும் கூடி மகிழ்ந்தாலும் உறக்கம் இல்லை இந்த கண்களுக்கு. மறைத்து வைப்பது ஊரார்க்கு அரிதாக இருக்க காரணம் என்னை போல் வெளிப்படுத்தும் கண் இருப்பதே.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.