திருவள்ளுவரின் திருக்குறள்

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.



தகுந்த கருவியும், உகந்த நேரமும், செய்ய வேண்டிய செயலும், செயல்பட வேண்டிய முறையும் ஆள்வதே நிர்வாகம் என்ற அமைச்சு.



செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.



ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர்.



உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்.


A minister is he who grasps, with wisdom large,
Means, time, work's mode, and functions rare he must discharge.


The minister is one who can make an excellent choice of means, time, manner of execution, and the difficult undertaking (itself).



karuviyum kaalamum seykaiyum seyyum
aruvinaiyum maaNdadhu amaichchu

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.



அச்சமற்ற பார்வை, யாரும் சிறப்பாக இருக்க நினைத்து குடிகளை (குடும்ப நலம்) காத்தல், புதிய நிகழ்வுகளை கற்று அறிதல், நிர்வாகத்திறன், செயல்படுதல் என ஐந்துடன் ஆள்வதே நிர்வாகம் என்ற அமைச்சு.



அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும் முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப்பெற்றவன் அமைச்சன்.



செயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும் உடையவரே அமைச்சர்.



அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.


A minister must greatness own of guardian power, determined mind,
Learn'd wisdom, manly effort with the former five combined.


The minister is one who in addition to the aforesaid five things excels in the possession of firmness, protection of subjects, clearness by learning, and perseverance.



van-kaN kutikaaththal katraRidhal aaLvinaiyoadu
aindhutan maantadhu amaichchu

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.



தேவையற்றதை விலக்குவதும், தேவையானதை ஏற்ப்பதும், பிரிந்துப் போனவர்களை பொருத்தலும் வல்லமையுடன் செயல்படுவதே அமைச்சு.



பகைவர்ககு துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.



நாட்டிற்கு நெருக்கடி வரும்போது பகையானவரைப் பிரித்தல், தம்முடன் இருப்பவரைக் கொடையாலும் இன்சொல்லாலும் பிரியாமல் காத்தல், தேவைப்பட்டால் முன்னே நம்முடன் இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.



அமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் எனும் செயல்களில் காணப்படுவதாகும்.


A minister is he whose power can foes divide,
Attach more firmly friends, of severed ones can heal the breaches wide.


The minister is one who can effect discord (among foes), maintain the good-will of his friends and restore to friendship those who have seceded (from him).



piriththalum paenik koLalum pirindhaarp
poruththalum valla thamaichchu

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.



அறிந்துக் கொள்வதில் அக்கரையும், தேவையானதை தேர்ந்து செயல்படுத்துவதும், தீர்க்கமாக ஒன்றை சொல்லுவதும் வல்லமையுடன் செயல்படுவதே அமைச்சு.



(செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.



ஒரு செயலைப் பற்றி பலவகையிலும் ஆராய்ந்து அறிதல், வாய்ப்பு வரும்போது ஆராய்ந்தபடி செய்தல், நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.



ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈ.டுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்.


A minister has power to see the methods help afford,
To ponder long, then utter calm conclusive word.


The minister is one who is able to comprehend (the whole nature of an undertaking), execute it in the best manner possible, and offer assuring advice (in time of necessity).



theridhalum thaerndhu seyalum orudhalaiyaach
sollalum valladhu amaichchu

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.



நீதி மாறாது வாழும் நிலை அறிந்து, மேன்மையானவற்றை எடுத்துரைப்பவர் எப்பொழுதும், திறமைகளை அறிந்தவருக்கு மேலும் தேர்ச்சிப் பெற துணையாவார்.



அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.



அறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்.



அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும்.


The man who virtue knows, has use of wise and pleasant words.
With plans for every season apt, in counsel aid affords.


He is the best helper (of the king) who understanding the duties, of the latter, is by his special learning, able to tender the fullest advice, and at all times conversant with the best method (of performing actions).



aRanarindhu aandramaindha sollaanenhj Gnaandrunh
thiRanarindhaan thaerchchith thuNai

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.



நுட்பமான அறிவுடன், நூலின் அறிவும் உள்ளவருக்கு மேலான அறிவு என்று எதுவும் முன் நிற்க முடியாது.



இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன.



இயல்பான நுண்ணறிவோடு செயற்கை ஆகிய நூல் அறிவையும் உடைய அமைச்சருக்கு எதிராக, மிகுந்த நுட்பமான சூழ்ச்சிகள் என்று எவை நிற்கமுடியும்?.



நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது.


When native subtilty combines with sound scholastic lore,
'Tis subtilty surpassing all, which nothing stands before.


What (contrivances) are there so acute as to resist those who possess natural acuteness in addition to learning ?.



madhinhutpam nooloadu udaiyaarkku adhinhutpam
yaavuLa munnhiR pavai

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.



செயல்படும் தன்மையை முழுமையாக வரைமுறை செய்து அறிந்திருந்தாலும் இயற்கையை அறிந்து செயல்பட வேண்டும்.



நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும்.



பல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல் திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்க.



செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும்.


Though knowing all that books can teach, 'tis truest tact
To follow common sense of men in act.


Though you are acquainted with the (theoretical) methods (of performing an act), understand the ways of the world and act accordingly.



seyaRkai aRindhak kadaiththum ulakaththu
iyaRkai aRindhu seyal

அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.



அறிய வேண்டியதை அறிய முடியாதவனுக்கும் உறுதியுடன் எடுத்துரைப்பது உடன் இருப்பவரின் கடமை.



அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் க‌டமையாகும்.



அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம் கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர் கடமையாகும்.



சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்.


'Tis duty of the man in place aloud to say
The very truth, though unwise king may cast his words away.


Although the king be utterly ignorant, it is the duty of the minister to give (him) sound advice.



aRikondru aRiyaan eninum uRudhi
uzhaiyirundhaan kooRal kadan

பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.



மடத்தனமான ஆலோகர் அருகில் இருப்பது எதிரிகள் எழுபது கோடி இருப்பதுபோல் ஆகிவிடும்.



தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.



தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்.



தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்.


A minister who by king's side plots evil things
Worse woes than countless foemen brings.


Far better are seventy crores of enemies (for a king) than a minister at his side who intends (his) ruin.



pazhudheNNum mandhiriyin pakkadhadhuL thevvoar
ezhupadhu koadi uRum

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.



முறையான சுழ்நிலை அமைந்தாலும் சரியான முடிவுகளை எடுக்கமாட்டார் திறமை இல்லாதவர்.



(செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்.



செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.



முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்.


For gain of end desired just counsel nought avails
To minister, when tact in execution fails.


Those ministers who are destitute of (executive) ability will fail to carry out their projects, although they may have contrived aright.



muRaippatach soozhndhum mutivilavae seyvar
thiRappaatu ilaaa thavar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

கருவி காலம் செய்யவேண்டியது செய்யவேண்டிய விதம் என தீர்மானிப்பதே அமைச்சு என்ற நிர்வாகம். நற்பண்புகளுடன் தேவையை அறிந்து அதை ஊக்கிவித்து தீமை அழித்து யாவரையும் காக்கும்படி இருக்க வேண்டும். முட்டாள்களின் ஆலோசனை அழிவைத்தரும் என உணர்ந்து முறையான முடிவை எடுக்கவேண்டும். .


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.