திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: மடியின்மை / Unsluggishness

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.



உள்ளது சிறத்தல் என்ற வாழ்வுக்கான குறைவற்ற விளக்கம் சோர்வு என்ற அதிபயங்கரத்தால் அழிந்துவிடும்.



ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.



ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.



பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்.


Of household dignity the lustre beaming bright,
Flickers and dies when sluggish foulness dims its light.


By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished.



kutiyennum kundraa viLakkam matiyennum
maasoora maaindhu kedum

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.



ஊக்கமின்மையை ஊக்கப்படுத்தாமல் கடைபிடிக்க வேண்டும் சிறந்த வாழ்வை சிறப்பான வாழ்வாக வாழ வேண்டுபவர்.



தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.



தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாக எண்ணி முயற்சி செய்க.



குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.


Let indolence, the death of effort, die,
If you'd uphold your household's dignity.


Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct.



matiyai matiyaa ozhukal kutiyaik
kutiyaaka vaeNdu pavar

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.



சோம்பிச் சோம்பலை உரிமையாகக் கொண்ட அறிவற்றவர் தான் பிறந்த குடும்பம் தனக்கு முன்னமே அழிவதைக் காண்பார்.



அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்.



விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்.



அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.


Who fosters indolence within his breast, the silly elf!
The house from which he springs shall perish ere himself.


The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead.



matimatik koNdozhukum paedhai piRandha
kutimatiyum thanninum mundhu

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.



உள்ளது சிறத்தல் என்ற வாழ்வு அழிந்து குற்றங்கள் பெருகும் சோம்பலால் கவரப்பட்டு உலகில் இருப்பவர்களுக்கு.



சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.



சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும்.



சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்.


His family decays, and faults unheeded thrive,
Who, sunk in sloth, for noble objects doth not strive.


Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions.



kutimatindhu kutram perukum matimatindhu
maaNda uGnatri lavarkku

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.



நீண்ட அழுகை, மறந்துவிடுவது, சோம்பல், அதிகபட்ச உறக்கம் இவை நான்கும் அழிவை விரும்புபவர்களின் ஆயதங்கள்.



காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.



காலம் தாழ்த்தி செய்வது, மறதி, சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி ஏறும் சிறு படகாகும்.



காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!.


Delay, oblivion, sloth, and sleep: these four
Are pleasure-boat to bear the doomed to ruin's shore.


Procrastination, forgetfulness, idleness, and sleep, these four things, form the vessel which is desired by those destined to destruction.



netunheer maRavi matidhuyil naankum
ketunheeraar kaamak kalan

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.



ஆற்றலுடையவர் உறவு இருந்தாலும் சோம்பலுடையவர் நற்பயன் அடைவது கடினம்.



நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.



நிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்திருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது.



தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்.


Though lords of earth unearned possessions gain,
The slothful ones no yield of good obtain.


It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it.



patiyutaiyaar patramaindhak kaNNum matiyutaiyaar
maaNpayan eydhal aridhu

இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.



சறுக்கி விழுந்து ஏளனச் சொல் கேட்பார் சோம்பலாய் இருந்து மாண்டவர் போல் உலகில் இருப்பவர்.



சோம்பலை விரும்பி மேற்க் கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.



சோம்பலில் வீழ்வதால் சிறந்த முயற்சி செய்யாதவர், நண்பர்களால் முதலில் இடித்துச் சொல்லப்பட்டு, பின்பு அவர் இழந்து பேசும் சொல்லையும் கேட்பர்.



முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.


Who hug their sloth, nor noble works attempt,
Shall bear reproofs and words of just contempt.


Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subject themselves to rebukes and reproaches.



idipurindhu eLLunhjsol kaetpar matipurindhu
maaNda uGnatri lavar

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.



சோம்பல் உள்ளது சிறக்கும் வாழ்வில் தங்கி தனது பகைவருக்கு அடிமையாக மாற்றிவிடும்.



சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.



குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்.



பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.


If sloth a dwelling find mid noble family,
Bondsmen to them that hate them shall they be.


If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies.



matimai kutimaikkaN thangindhan onnaarkku
atimai pukuththi vidum

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.



உள்ளது சிறக்கும் வாழ்வில் ஏற்பட்ட தவறுகள் ஒருவர் தனது சோம்பலை மாற்றுவதால் தீர்க்கப் படும்.



ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.



ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும்.



தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்.


Who changes slothful habits saves
Himself from all that household rule depraves.


When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear.



kutiyaaNmai yuLvandha kutram oruvan
matiyaaNmai maatrak kedum

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.



சோம்பல் அற்ற மன்னவன் அடையும் நற்பயன்கள் போலவே ஒப்ப முயற்சியுடைவருக்கும் கிடைக்கும்.



அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.



தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.



சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.


The king whose life from sluggishness is rid,
Shall rule o'er all by foot of mighty god bestrid.


The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by him who measured (the worlds) with His foot.



matiyilaa mannavan eydhum atiyaLandhaant
Thaaaya thellaam orungu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வளர்ச்சிக்கான வாழ்தல் சோர்வால் தடைபடும். சோர்வை சோர்வின்றி நிக்க வேண்டும் அப்படி செய்யாதவர் அறிவற்றவரே. அழுகை, மறதி, சோம்பல், தூக்கம் இதை விரும்புபவர் வளர்ச்சியை காண முடியாது. சோம்பல் அற்றவர் வாழ்வு மன்னன் வாழ்வு போல் இருக்கும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.