திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கொல்லாமை / Not killing

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.



அறமான செயல் என்னவென்றால் அழிக்காமை வேண்டுவது. மற்ற செயல் எல்லாவற்றையும் தரும்.



அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.



அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.



எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.


What is the work of virtue? 'Not to kill';
For 'killing' leads to every work of ill.


Never to destroy life is the sum of all virtuous conduct. The destruction of life leads to every evil.



aRavinai yaadhenin kollaamai koaRal
piRavinai ellaanh tharum

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.



பகிர்ந்து உண்ணுவதும் பல உயிர்களை காப்பதும் படித்தவர் சிறப்பித்து தந்த எல்லாவற்றிலும் முதன்மையானது.



கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.



இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.



இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈ.டானது வேறு எதுவுமே இல்லை.


Let those that need partake your meal; guard every-thing that lives;
This the chief and sum of lore that hoarded wisdom gives.


The chief of all (the virtues) which authors have summed up, is the partaking of food that has been shared with others, and the preservation of the mainfold life of other creatures.



pakuththuNdu palluyir Ompudhal nooloar
thokuththavatruL ellaanh thalai

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.



ஒரே நல்லது கொல்லாமை மற்றப்படி அதற்க்கு பின்னே உள்ள பொய்யாமை நன்று.



இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.



உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.



அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன.


Alone, first of goods things, is 'not to slay';
The second is, no untrue word to say.


Not to destroy life is an incomparably (great) good next to it in goodness ranks freedom from falsehood.



ondraaka nalladhu kollaamai matradhan
pinsaarap poiyaamai nandru

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.



நல்வழி என்பது எது என்றால் எந்த ஒன்றையும் கொல்லாமை வேண்டும் என்ற ஒழுக்கம்.



நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.



நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.



எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.


You ask, What is the good and perfect way?
'Tis path of him who studies nought to slay.


Good path is that which considers how it may avoid killing any creature.



nallaaRu enappatuvadhu yaadhenin yaadhondrum
kollaamai soozhum neRi

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.



தனது நிலைக்கு பயந்து துறவுக் கொள்பவர்களை காட்டிலும் கொலைக்கு பயந்து கொல்லாமை மேற்கொள்பவரே தலைச் சிறந்தவர்.



வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.



வாழ்க்கை நிலைக்கு அஞ்சி மனத் துறவு கொண்டவருள் எல்லாம் கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவன் உயர்ந்தவன் ஆவான்.



உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும்விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார்.


Of those who 'being' dread, and all renounce, the chief are they,
Who dreading crime of slaughter, study nought to slay.


Of all those who, fearing the permanence of earthly births, have abandoned desire, he is the chief who, fearing (the guilt of) murder, considers how he may avoid the destruction of life.



nilaianji neeththaaruL ellaam kolaianjik
kollaamai soozhvaan thalai

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.



கொல்லாமை கடைபிடித்து நடப்பவரின் வாழும் நாட்களை அழிக்க வராது உயிரை எடுக்கும் எமன்.



கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.



கொலை செய்யாமல் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று குறுக்கிடாது.



கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.


Ev'n death that life devours, their happy days shall spare,
Who law, 'Thou shall not kill', uphold with reverent care.


Yama, the destroyer of life, will not attack the life of him, who acts under the determination of never destroying life.



kollaamai maeRkoN dozhukuvaan vaazhnhaaLmael
sellaadhu uyiruNNunG kootru

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.



தனது உயிர் போய்விடும் என்றாலும் செய்யக்கூடாது தன்னை போன்ற அடுத்தவரின் இன்பமான உயிரை போக்கும் காரியத்தை.



தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.



தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா.



தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.


Though thine own life for that spared life the price must pay,
Take not from aught that lives gift of sweet life away.


Let no one do that which would destroy the life of another, although he should by so doing, lose his own life.



thannuyir neeppinum seyyaRka thaanpiRidhu
innuyir neekkum vinai

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.



நல்லதாக மாறும் காரியம் பெரியது ஆகும் என்றாலும் உதரணமாக விளங்கும் மனிதர்களுக்குக் கொன்றுதான் ஆகவேண்டும் என்பது கடைசியே.



கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.



வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.



பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்.


Though great the gain of good should seem, the wise
Will any gain by staughter won despise.


The advantage which might flow from destroying life in sacrifice, is dishonourable to the wise (who renounced the world), even although it should be said to be productive of great good.



nandraakum aakkam peridheninum saandroarkkuk
kondraakum aakkanG kadai

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.



கொலையை தொழிலாக செய்யும் மானிடப் பதர்கள் சிறுமையை அறிந்தவர் உள்ளத்தில் கீழான இடம் பெறுவர்.



கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.



கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார்.



பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும்.


Whose trade is 'killing', always vile they show,
To minds of them who what is vileness know.


Men who destroy life are base men, in the estimation of those who know the nature of meanness.



kolaivinaiya raakiya maakkaL pulaivinaiyar
punmai therivaa rakaththu

உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்



உயிரை உடம்பிலிருந்து நிக்கியவர் (கொலைசெய்தவர்கள்) எனப்படுவர்கள் செயல்படும் உடம்பில் செல்லாத தீய வாழ்க்கை வாழ்வார்கள்.



நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.



நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.



வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்.


Who lead a loathed life in bodies sorely pained,
Are men, the wise declare, by guilt of slaughter stained.


(The wise) will say that men of diseased bodies, who live in degradation and in poverty, are those who separated the life from the body of animals (in a former birth).



uyirutampin neekkiyaa renpa seyirudambin
sellaaththee vaazhkkai yavar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அறமான செயல் என்பது அழிக்காமல் இருப்பதே இதனால் மற்ற அறச்செயல்கள் தானாக வரம்படும். எல்லா உயிர்களுடன் பகுத்து உண்பதே நூல் தரும் கருத்துக்களில் எல்லாம் தலைச் சிறந்தது. தேவையின்றி அழிப்பவன் தலை இல்லாத முண்டம் போன்றவன்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.