திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: உழவு / Farming

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.



பல மாற்றங்களுடன் சுழலும் உலகம் உழவுத் தொழிலை பின்பற்றியே இருக்கும் ஆகையால் பல தொழில் பழகியும் உழவே தலைமையானது.



உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.



உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.



பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.


Howe'er they roam, the world must follow still the plougher's team;
Though toilsome, culture of the ground as noblest toil esteem.


Agriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer.



suzhandrum-Erp pinnadhu ulagam adhanaal
uzhandhum uzhavae thalai

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.



உழவுத் தொழில் செய்பவர்கள் உலக மக்களுக்கொல்லாம் அச்சாணி போன்றவர்கள் உழவு செய்யாத மற்ற எல்லாரையும் காக்கும் பணி செய்வதால்.



உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.



உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் பிற தொழிலைச் செய்யச் செல்வோர் எல்லாரையும், உழவர்களே தாங்குவதால் அவர்களே இந்த உலகத்தவர்க்கு அச்சாணி ஆவர்.



பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.


The ploughers are the linch-pin of the world; they bear
Them up who other works perform, too weak its toils to share.


Agriculturists are (as it were) the linch-pin of the world for they support all other workers who cannot till the soil.



uzhuvaar ulagaththaarkku aaNi-aq thaatraadhu
ezhuvaarai ellaam poRuththu

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.



உழவு செய்து வாழ்பவர்கள் மட்டுமே வாழ்பவர்கள் மற்றவர்கள் உழவர்களை தொழுது உண்டு பின் செல்பவர்கள்.



உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.



பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.



உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.


Who ploughing eat their food, they truly live:
The rest to others bend subservient, eating what they give.


They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life.



uzhudhuNdu vaazhvaarae vaazhvaarmaR Rellaam
thozhudhuNdu pinsel pavar

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.



பல அரசுகளின் ஆட்சிச் சிறப்புகளையும் தனது ஆட்சிச் சிறப்புக்கு உட்பட்டு இருப்பதைக் காண்பர் உழவுத் தொழில் செய்து வாழ்பவர்கள்.



நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.



உழுவதால் தானிய வளமும் அதனால் அருளும் உடைய உழவர்கள், தம் ஆட்சியாளர்களின் குடை நிழலை அயலக ஆட்சியாளரின் கீழ் வாழும் மக்களும் விரும்பும்படி செய்வர்.



பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.


O'er many a land they 'll see their monarch reign,
Whose fields are shaded by the waving grain.


The Patriotic farmers desire to bring all other states under the control of their own king.



palakudai neezhalum thangutaikkeezhk kaaNpar
alakutai neezha lavar

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.



பசி என்று இரவாமல் இரப்பார்க்கு கொடுப்பவர் சலிப்பின்றி உழைத்து உண்ணும் குளிர்ச்சியானவர்.



கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.



தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவர் பிறரிடம் பிச்சை கேட்கமாட்டார்; தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கவும் செய்வர்.



தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.


They nothing ask from others, but to askers give,
Who raise with their own hands the food on which they live.


Those whose nature is to live by manual labour will never beg but give something to those who beg.



iravaar irappaarkkondru eevar karavaadhu
kaiseydhooN maalai yavar

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.



உழவுத் தொழில் செய்யும் உன்னதமானவர்கள் கொடுக்க மறுத்தால் விருப்பத்தை விட்டோழித்தோம் என்கின்ற துறவு மேற்கொள்பவர்களின் நிலை குலைந்து போகும்.



உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.



உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தில் நிலைத்து நிற்க முடியாது.



எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்.


For those who 've left what all men love no place is found,
When they with folded hands remain who till the ground.


If the farmer's hands are slackened, even the ascetic state will fail.



uzhavinaar kaimmatangin illai vizhaivadhooum
vittaemen paarkkum nilai

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.



ஒரு பலம் புழுதி கசக்கி ஒன்றும் இல்லாதபடி உலர்த்த ஓரு பிடி எருவும் தேவையின்றி மண் பதப்பட்டு சிறப்புறும்.



ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்.



உழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம் புழுதி, 8.75 கிராம் புழுதி ஆகும்படி காய விட்டுப் பிறகு பயிர் செய்தால் ஒரு கைப்பிடி அளவு எருவும் இடாமலேயே கூட அந்தப் பயிர் அதிகம் விளையும்.



ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.


Reduce your soil to that dry state, When ounce is quarter-ounce's weight;
Without one handful of manure, Abundant crops you thus secure.


If the land is dried so as to reduce one ounce of earth to a quarter, it will grow plentifully even without a handful of manure.



thotippuzhudhi kaqsaa uNakkin pitiththeruvum
vaeNtaadhu saalap padum

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.



ஏர் செய்து அடுத்து அதைவிட நன்மை பயக்கும் எருவிட்டு விதைத்த பின் நீர்பய்ச்சி அடுத்து மேலும் நன்மையே தரும் பாதுகாத்தல் செய்ய வேண்டும்.



ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.



உழுவதைக் காட்டிலும் உரம் இடுவது நல்லது; நீர்ப் பாய்ச்சுவதைக் காட்டிலும் களை எடுத்தபிறகு பயிரைக் காவல் செய்வது நல்லது.



உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது.


To cast manure is better than to plough;
Weed well; to guard is more than watering now.


Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it).



Erinum nandraal eruvidudhal kattapin
neerinum nandradhan kaappu

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.



நிலக்கிழார் நிலத்தை சென்று கவனிக்கவில்லை என்றால் அவர் மனைவியைப் போலவே முரண்பட்டுப் போகும்.



நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்.



நிலத்திற்கு உரியவன் நாளும் நிலத்திற்குச் சென்று செய்ய வேண்டியதைச் செய்யாது சோம்பி இருந்தால், கடமை ஆற்றாத கணவனை முதலில் மனத்தால் வெறுத்துப் பின் அவனோடு ஊடி விடும் மனைவியைப் போல நிலமும் முதலில் வாடிப் பிறகு பலன் தராமல் போய்விடும்.



உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்.


When master from the field aloof hath stood;
Then land will sulk, like wife in angry mood.


If the owner does not (personally) attend to his cultivation, his land will behave like an angry wife and yield him no pleasure.



sellaan kizhavan iruppin nilampulandhu
illaaLin ooti vidum

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.



வழி ஏதும் இல்லை என்று அசைவின்றி சோம்பி இருப்பவரைக் கண்டு நிலம் என்ற நல்லாள் ஏளனம் செய்வாள்.



எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.



நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்.



வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.


The earth, that kindly dame, will laugh to see,
Men seated idle pleading poverty.


The maiden, Earth, will laugh at the sight of those who plead poverty and lead an idle life.



ilamendru asaii iruppaaraik kaaNin
nilamennum nallaaL nakum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பலவகை மாற்றங்களுடன் உலகம் சுற்றினாலும் உழவே தலைமையானது அதுவே உலக இயக்கத்திற்கு மூலமானது. உழவே உலகின் ஆணி எனவே அவரை தொழுது உண்பதே மற்றவர் பணி. பலகுடையும் பணியும் உழவே இல்லை என்றால் துறவியும் வீணே. ஏர் விடுதலை விட சிறந்தது எரு இடுதல், நீர் பாய்ச்சுவதை விட சிறந்தது பாதுகாப்பது. கவனியாத மனைவியின் ஊடல் போல் நிலமகளும் செய்வாள். சோம்பேறியை நிலமகள் கண்டு வெட்கப்படுவாள்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.