திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: அழுக்காறாமை / Not Envying

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.



ஒழுக்கம் மாறாது இருக்க ஒருவர் தன் மனதில் பொறாமை அற்ற இயல்பை பெறவேண்டும்.



ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.



உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க.



மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.


As 'strict decorum's' laws, that all men bind,
Let each regard unenvying grace of mind.


Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct.



ozhukkaaRaak koLka oruvan-than nenjaththu
azhukkaaRu ilaadha iyalpu

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.



விரும்ப வேண்டியதில் நிகரானது இல்லை யாரிடத்திலும் பொறாமைபெறா நிலையை பெற்றால்.



யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.



எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை.



யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை.


If man can learn to envy none on earth,
'Tis richest gift, -beyond compare its worth.


Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others



vizhuppaetrin aqdhoppadhu illaiyaar maattum
azhukkaatrin anmai peRin

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.



அறச் செயல்கள் தேவையற்றது என்பவர்கள் பிறச் செயல்களையும் செய்யாமல் அழுக்கற்றுப் போவார்கள்.



தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.



பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்.



அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.


Nor wealth nor virtue does that man desire 'tis plain,
Whom others' wealth delights not, feeling envious pain.


Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said "he neither desires virtue not wealth".



aRanaakkam vaeNtaadhaan enpaan piRanaakkam
paeNaadhu azhukkaRup paan

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.



அழுக்கு மனதுடன் (பொறாமை) தேவையற்றதை செய்யமாட்டார்கள் இழிவான குணத்தால் ஏற்படும் துன்பத்தை அறிந்து.



பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத‌ை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.



பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்.



தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈ.டுபடமாட்டார்கள்.


The wise through envy break not virtue's laws,
Knowing ill-deeds of foul disgrace the cause.


(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds.



azhukkaatrin allavai seyyaar izhukkaatrin
Edham padupaakku aRindhu

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.



அழுக்கு மனம்(பொறாமை) உடையவர்கள் அதைசார்ந்து இருக்கமாட்டார்கள் வழக்காக மாறும் துன்பம் அது என்பதால்.



பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.



பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்.



பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.


Envy they have within! Enough to seat their fate!
Though foemen fail, envy can ruin consummate..


To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction.



azhukkaaRu udaiyaarkku adhusaalum onnaar
vazhukkaayum kaeteen padhu

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.



கொடுப்பதை பொறாமையால் தடுப்பவன் உறவுகளும், உடுப்பதும் உண்ணுவதும் இல்லாமல் கேட்டு போகும்.



பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.



பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலையும்.



உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்.


Who scans good gifts to others given with envious eye,
His kin, with none to clothe or feed them, surely die.


He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment.



koduppadhu azhukkaRuppaan sutram utuppadhooum
uNpadhooum indrik kedum

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.



ஆர்வமுடன் அழுக்கு மனம் (பொறாமை) உடையவனை செயல்களின் நாயாகி தன் ஆற்றலை காட்டி விடும்.



பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.



பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.



செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.


From envious man good fortune's goddess turns away,
Grudging him good, and points him out misfortune's prey.


Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister.



avviththu azhukkaaRu udaiyaanaich cheyyavaL
thavvaiyaik kaatti vidum

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.



அழுக்கு மனம்(பொறாமை) என்ற பாவச்செயல் திருவை தீய வழியில் தள்ளி விடும்.



பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.



பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்.



பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்.


Envy, embodied ill, incomparable bane,
Good fortune slays, and soul consigns to fiery pain.


Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come).



azhukkaaRu enaoru paavi thiruchchetruth
theeyuzhi uyththu vidum

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.



அழுக்கான நெஞ்சம் கொண்டவரின் செயல்களும், செம்மையானவரின் அழிவும் நினைக்கப் படும்.



பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.



பொறாமை கொண்ட மனத்தவனின் உயர்வும், அது இல்லாத நல்லவனின் தாழ்வும் பற்றி ஆராய்க.



பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்.


To men of envious heart, when comes increase of joy,
Or loss to blameless men, the 'why' will thoughtful hearts employ.


The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered.



avviya nenjaththaan aakkamum sevviyaan
kaedum ninaikkap padum

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.



அழுக்கு மனம் அற்றவரை உலகம் அகற்றிவிடுவது இல்லை,அழுக்கு மனம் உள்ளவர் எவ்வளவு அடைந்தாலும் நிறைவடைவது இல்லை.



பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.



பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை.



பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை.


No envious men to large and full felicity attain;
No men from envy free have failed a sure increase to gain.


Never have the envious become great; never have those who are free from envy been without greatness.



azhukkatru akandraarum illai aqdhuillaar
perukkaththil theerndhaarum il


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பொறாமை இல்லாதவரே ஒழுக்கமானவர், பகைவர் தரும் அழிவைவிட பொறாமை தந்துவிடும். பொறமையுள்ளவர் பிறவி மூப்பே. பொருள்களினால் நிறைவோ அடையமாட்டார்கள்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.