திருவள்ளுவரின் திருக்குறள்

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.



அடுத்தவர் பொருளையே பயன்படுத்திக் கொள்ளும் அறியாமை அறிவினால் நேர்மையின் பொருள் அறிந்தவரிடத்தில் இல்லை.



பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.



இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.



பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.


Who laws of virtue and possession's rights have known,
Indulge no foolish love of her by right another's own


The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property



piranporuLaaL pettozhukum paedhaimai gnaalaththu
aRamporuL kaNtaarkaN il

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.



அறம் கடந்து இருப்பவர்களை காட்டிலும் பிறரை சார்ந்து நிற்கும் அறிவிலிகள் இல்லை.



அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.



பாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை.



பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்.


No fools, of all that stand from virtue's pale shut out,
Like those who longing lurk their neighbour's gate without


Among all those who stand on the outside of virtue, there are no greater fools than those who stand outside their neighbour's door



aRan-kadai nindraaruL ellaam piran-kadai
nindraarin paedhaiyaar il

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார்.



ஏசப்படவேண்டியவர் வேறு ஒருவர் இல்லை நன்கு அறிந்தவருக்கு தீமை செய்து பழுகுபவரைத் தவிர.



ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.



தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்.



நம்பி பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈ.டுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.


They're numbered with the dead, e'en while they live, -how otherwise?
With wife of sure confiding friend who evil things devise


Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who undoubtingly confide in them



viLindhaarin vaeRallar mandra theLindhaaril
theemai purindhozhuku vaar

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.



எத்தனை துணைகளை பெற்றிருந்தால் என்ன, தினையளவு தேர முடியாது அடுத்தவர் பொருள் மேல் பற்றுகொண்டால்.



தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?.



அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?.



பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.


How great soe'er they be, what gain have they of life,
Who, not a whit reflecting, seek a neighbour's wife


However great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another ?



enaiththuNaiyar aayinum ennaam thinaiththuNaiyum
thaeraan piRanil pukal

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.



எளிதாக இருக்கிறது என்று இல்லத்தை துறப்பவன் எய்தும் ஒன்று அழியாது இருக்கும் பழி மட்டுமே.



இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.



அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.



எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.


'Mere triflel' saying thus, invades the home, so he ensures
A gain of guilt that deathless aye endures


He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever



eLidhena illiRappaan eydhumenhj gnaandrum
viLiyaadhu niRkum pazhi

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.



பகை பாவம் பயம் பழி என்ற நான்கும் பிரியாமல் இருக்கும் இல்லறத்தை துறந்தவன் இடத்தில்.



பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.



அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.



பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.


Who home ivades, from him pass nevermore,
Hatred and sin, fear, foul disgrace; these four


Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour's wife



pakaipaavam achcham pazhiyena naankum
ikavaavaam illirappaan kaN

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.



உண்மையான குடும்பத்தான் என்பவன் பிறருக்கு உரிமையான பெண்ணை நாடதவனாக இருப்பான்.



அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே.



அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்.



பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்.


Who sees the wife, another's own, with no desiring eye
In sure domestic bliss he dwelleth ever virtuously


He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder



aRaniyalaan ilvaazhvaan enpaan piRaniyalaaL
peNmai nayavaa thavan

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.



அடுத்த வீட்டை ஆராயாத ஆண்மையே முன்மாதிரியாக வாழும் மனிதர்க்கு அறமும் நல்ல ஒழுக்கமும் ஆகும்.



பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.



அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்.



வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்.


Manly excellence, that looks not on another's wife,
Is not virtue merely, 'tis full 'propriety' of life


That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great



piRanmanai noakkaadha paeraaNmai saandrorkku
aRanondroa aandra vozhukku

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.



நலமுடன் இருக்க உரியவர் யாரென்றால் தங்கும் உடல் நீரை அடுத்தவருக்கு உரிமையானவளின் தோல் தொட்டு தரதாவர்.



கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.



அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே.



பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்.


Who 're good indeed, on earth begirt by ocean's gruesome tide?
The men who touch not her that is another's bride.


Is it asked, "who are those who shall obtain good in this world surrounded by the terror-producing sea ?" Those who touch not the shoulder of her who belongs to another.



nalakkuriyaar yaarenin naama-neer vaippin
piRarkkuriyaaL thoaLdhoayaa thaar

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.



அறமாக வரையறுத்தவைக்கு எதிராக செய்தாலும் பிறருக்ககா வரையறுக்கப் பட்டவளின் பெண்மையை நாடாததே நன்று.



ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.



அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது.



பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்.


Though virtue's bounds he pass, and evil deeds hath wrought;
At least, 'tis good if neighbour's wife he covet not.


Though a man perform no virtuous deeds and commit (every) vice, it will be well if he desire not the womanhood of her who is within the limit (of the house) of another.



aRanvaraiyaan alla seyinum piranvaraiyaaL
peNmai nayavaamai nandru


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அடுத்தவரின் பொருள்களை பயன்படுத்திக் கொள்வது அறம் என்றால் என்ன என்று அறிந்தவர்கள் செய்வதில்லை. பகை பாவம் பழி பயமற்றவர் இல்லறத்தார் ஆவர். அவர் அடுத்தவர் குடும்ப வாழ்வை சிதைக்க காரணமாக இருக்க மாட்டார்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.