திருவள்ளுவரின் திருக்குறள்

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.



வழி பாரத்து செயல் இழந்த கண்ணும் அவர் சென்ற நாட்களை எண்ணியதால் தேய்ந்த விரலும் என வேதனையானது.



என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.



அவர் என்னைப் பிரிந்து போன நாள்களைச் சுவரில் குறித்துத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன; அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளி இழந்து, நுண்ணியவற்றைக் காணும் திறனில் குறைந்து விட்டன.



வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.


By My eyes have lost their brightness, sight is dimmed; my fingers worn,
With nothing on the wall the days since I was left forlorn.


My finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail.



vaalatrup purkendra kannum avarsendra
naalotrith thaeyndha viral

இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.



சிறுபிள்ளை போல் இன்று மறந்திருத்தாலும் என் தோள் மேல் உள்ள அழகு நீர்த்து அழிகின்றது.



தோழி! காதலரின் பிரிவால்துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்து விட்டால், அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும்.



ஒளிரும் நகை அணிந்தவனே! என் காதலரை நான் இன்று மறந்தால் என்னைவிட்டு அழகு மிகுதியும் நீங்க, என் தோளும் வளையல்களை இழக்கும்.



காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி.


O thou with gleaming jewels decked, could I forget for this one day,
Henceforth these bracelets from my arms will slip, my beauty worn away.


O you bright-jewelled maid, if I forget (him) today, my shoulders will lose their beauty even in the other life and make my bracelets loose.



ilangizhaai indru marappin-en thoalmael
kalangazhiyum kaarikai neeththu

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.



உறுதியான நெஞ்சை துணையாகச் சென்றார் என்றாலும் வருவார் என விருப்பமுடன் இன்னும் உளேன்.



வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேன்.



என்னுடன் இன்பம் நுகர்வதை விரும்பாமல், நான் துணையாவதையும் வெறுத்துத் தன் ஊக்கத்தையே துணையாக எண்ணி, வெற்றி பெறுவதையே விரும்பி என்னைப் பிரிந்தவர், அவற்றை இகழ்ந்து என்னிடம் திரும்ப வருவதை நான் விரும்புவதால் இவ்வளவு காலமும் இருக்கிறேன்.



ஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன்.


On victory intent, His mind sole company he went;
And I yet life sustain! And long to see his face again!.


still live by longing for the arrival of him who has gone out of love for victory and with valour as his guide.



Urannasaii Ullam Thunaiyaakach Chendraar
Varalnasaii Innum Ulen

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.



காமத்துடன் கூடியவர் பிரிந்தார் அவரது வரவை எண்ணி கொம்பை பற்றும் கொடி அதன் அளவை மீறியதுப் போல் அளவைக் கடக்கிறது என் நெஞ்சு.



முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகை‌யைநினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.



என்னைப் பிரிந்து போனவர் மிகுந்த காதலுடன் என்னிடம் வருவதை எண்ணி, என் நெஞ்சு வருத்தத்தை விட்டுவிட்டு மகிழ்ச்சியில் கிளை பரப்பி மேலே வளர்கிறது.



காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது.


'He comes again, who left my side, and I shall taste love's joy,'-
My heart with rapture swells, when thoughts like these my mind employ.


My heart is rid of its sorrow and swells with rapture to think of my absent lover returning with his love.



kootiya kaamam pirindhaar varavullik
koaduko daerumen nenju

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.



காணும் பொழுதே காமத்துடன் கனை தொடுப்பவரை கண்ணாரக் கண்டபின் நீங்கிவிடும் எனது மெல்லிய தோளில் தோன்றிய பசப்பு.



என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.



என் கண்கள் முழுக்க என் கணவரை நான் காண்பேனாகுக; அவரைக் கண்டபின் என் மெல்லிய தோளின் வாடிய நிறம் தானாக நீங்கும்.



கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்.


O let me see my spouse again and sate these longing eyes!
That instant from my wasted frame all pallor flies.


May I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders.



kaankaman konkanaik kannaarak kandapin
neengum-en men-dhoal pasappu

வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.



அவசியம் வருவார் அவதியுறச் செய்தவர் ஒருநாள். அன்று பருகுவேன் பிரிதலால் உண்டான நோய் எல்லாம் கெட.



என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.



என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்ப நோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.



என்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும். வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன்.


O let my spouse but come again to me one day!
I'll drink that nectar: wasting grief shall flee away.


May my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow.



varukaman kon-kan oru-naal parukuvan
paidhalnhoi ellaam keda

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.



தழுவிக் கொள்வேன் ஊடுதலும் செய்வேனோ கூடி மகிழ்வேன் கண் போல் உறவு கொண்ட வீரனை.



என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ?.



கண்போல் சிறந்த என் துணைவர் வந்தால் அவர் நெடுநாள் பிரிந்திருந்ததற்காக ஊடுவேனா? அவர் பிரிவைத் தாங்க முடியாமல் அவரைத் தழுவுவேனா? அல்லது இரண்டு செயல்களையும் கலந்து செய்வேனா?.



கண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல், கொள்வேனோ? அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ? அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த இன்பத்தை நினைக்கும்போது.


On the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to do both?.


This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.



pulappaen-kol pulluvaen kolloa kalappaenkol
kan-anna kaelir viran

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.



செயலில் ஈடுபட்டு வெற்றி பெறட்டும் நம் வேந்தன் ஆதலால் மாலை விட்டில் உண்டாகும் விருந்து.



அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அனறு வரும் மாலைப் பொழுதிற்கு விருந்து செய்வோம்.



அரசு போர் செய்து வெற்றி பெறட்டும்; நானும் மனைவியோடு கூடி மாலைப்பொழுதில் விருந்து உண்பேனாகுக.



தலைவன், தான் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெறுவானாக; அவன் வென்றால் என் மனைவியுடன் எனக்கு மாலைப்பொழுதில் இன்ப விருந்துதான்.


O would my king would fight, o'ercome, devide the spoil;
At home, to-night, the banquet spread should crown the toil.


Let the king fight and gain (victories); (but) let me be united to my wife and feast the evening.



vinaikalandhu vendreeka vaendhan manaikalandhu
maalai ayarkam virundhu

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.



ஒரு நாள் எழு நாட்கள் போல் செல்லும் தூரம் சென்றவர் வருகின்ற நாளை கணக்கு வைத்து ஏங்குபவர்க்கு.



தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல ( நெடிதாக) கழியும்.



தொலைதூரம் சென்று தன் கணவன் வரும் நாளை எண்ணி வருந்தும் பெண்களுக்கு ஒருநாள் பலநாள் போல நெடிதாகத் தோன்றும்.



நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும்.


One day will seem like seven to those who watch and yearn
For that glad day when wanderers from afar return.


To those who suffer waiting for the day of return of their distant lovers one day is as long as seven days.



orunaal ezhunaalpoal sellumsaen sendraar
varunaal-vaiththu aengu pavarkku

பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.



பெற வேண்டியதை எல்லாம் பெறப்படுவதால் என்ன பயன் இப்பொழுது இன்றி உள்ளம் உடைந்துவிட்டது என்றால்.



துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப்‌ பெறுவதனால் என்ன? பெற்றக்கால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும் என்ன?.



என் பிரிவைத் தாங்காமல் உள்ளம் உடைய, அவளுக்கு ஒன்று ஆகிவிட்டால் அதன் பிறகு அவள் என்னைப் பெறுவதால் ஆவது என்ன? பெற்றால்தான் என்ன? உடம்போடு கலந்தால்தான் என்ன? ஒரு பயனும் இல்லை.



துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போயிவிடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடுவதினாலோ, என்ன பயன்?.


What's my return, the meeting hour, the wished-for greeting worth,
If she heart-broken lie, with all her life poured forth?.


After (my wife) has died of a broken heart, what good will there be if she is to receive me, has received me, or has even embraced me?.



perin-ennaam petrakkaal ennaam urinennaam
ullam udaindhukkak kaal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

மங்கிய வாள் போல் ஒளி இழந்தன கண்கள் மெலிந்து போயின கைகள் நாம் பிரிந்த நாட்களை எண்ணி. தோள்களும் இளைத்து இளம்பிள்ளை தோள் போல் ஆனது. உள்ளத்து உறுதியை துணையாக கொண்டவர் என்பதால் வரவுக்காக காத்திருக்கிறேன். படர்ந்த கொடி கொம்பை மீறுவது போல் காமம் எல்லை கடக்கிறது அவரது வருகையை எண்ணி. வருகையை கண்டபின் தோளில் படந்த பசலையும் மனதின் நோயும் மறைந்துவிடும். தழுவிக் கொண்டு ஊடுதல் செய்து கூடி மகிழ்வேன் கண் போன்ற என் காதலனை. வேலை முடிந்த வருவார் என மாலை விருந்துடன் காத்திருக்கிறேன். ஒருநாள் ஏழு நாட்கள் போல் கடக்கும் பிரிந்தவர் வரவுக்கு காத்திருப்பவற்கு. எல்லாம் இருந்தும் பயன் இல்லை இப்பொழுது உள்ளம் விரும்பும் ஒன்று கிடைக்கவில்லை என்றால்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.