திருவள்ளுவரின் திருக்குறள்

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.



பார்த்து கேட்டு சுவைத்து நுகர்ந்து தொட்டு அறியும் ஐந்து பொறிகளும் ஒன்றாய் கூடி அனுபவித்தல் உன்னிடத்தில் உள்ளது.



கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.



விழியால் பார்த்து, செவியால்கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும்படும் இன்பம் ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு.



வளையல் அணிந்த இந்த வடிவழகியிடம்; கண்டு மகிழவும், கேட்டு மகிழவும், தொட்டு மகிழவும், முகர்ந்துண்டு மகிழவுமான ஐம்புல இன்பங்களும் நிறைந்துள்ளன.


All joys that senses five- sight, hearing, taste, smell, touch- can give,
In this resplendent armlets-bearing damsel live! .


The (simultaneous) enjoyment of the five senses of sight, hearing, taste, smell and touch can only be found with bright braceleted (women).



kaNdukaettu uNduyirththu utraRiyum aimpulanum
oNdhoti kaNNae uLa

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.



பிணிக்கு மருந்துகள் மாறுபட்டே இருக்கும் மெல்லியளாள் உண்டாக்கும் பிணிக்கு அவளே மருந்து.



நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.



நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து.



நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல உள்ளன; ஆனால் காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள்.


Disease and medicine antagonists we surely see;
This maid, to pain she gives, herself is remedy.


The remedy for a disease is always something different (from it); but for the disease caused by this jewelled maid, she is herself the cure.



piNikku marundhu piRaman aNiyizhai
thannhoaikkuth thaanae marundhu

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.



முழு ஓய்வுக்காய் மென்மையான தோள் உடையாளுடன் உறங்குவதைப் போன்ற இனிமையானது உண்டோ மாறுபட்டதைக் காண்பவர் உலகில்.



தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ?.



தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?.



தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?.


Than rest in her soft arms to whom the soul is giv'n,
Is any sweeter joy in his, the Lotus-eyed-one's heaven?


Can the lotus-eyed Vishnu's heaven be indeed as sweet to those who delight to sleep in the delicate arms of their beloved ?.



thaamveezhvaar mendroaL thuyilin inidhukol
thaamaraik kaNNaan ulagu

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.



விலகினால் அழிவும் நெருங்கினால் இதமான குளிர்ச்சியும் தரும் தீ ஒன்றை பெற்றுள்ளாள் இவள்.



நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.



தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?.



நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கினால் குளிரக் கூடியதுமான புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள்.


Withdraw, it burns; approach, it soothes the pain;
Whence did the maid this wondrous fire obtain?.


From whence has she got this fire that burns when I withdraw and cools when I approach ?.



neengin theRuu-um kuRukungaal thaNNaennum
theeyaaNdup petraaL ivaL

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.



வேண்டிய பொழுது இன்பம் தந்து உதவிடும் ஒன்றைப் போலவே மலர்க் கூந்தல் விளையாடுப் தோள்.



மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.



நாம் விரும்பும் பொருள்கள் விரும்பியபொழுது விரும்பியவாறே இன்பம் தருவது போல, பூச்சூடிய கூந்தலை உடைய இவள் தோள்கள் இவளுடன் எப்போது கூடினாலும் இன்பம் தருகின்றன.



விருப்பமான பொருள் ஒன்று, விரும்பிய பொழுதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த பூவையின் தோள்கள் இன்பம் வழங்குகின்றன.


In her embrace, whose locks with flowery wreaths are bound,
Each varied form of joy the soul can wish is found.


The shoulders of her whose locks are adorned with flowers delight me as if they were the very sweets I have desired (to get).



vaetta pozhudhin avaiyavai poalumae
thoattaar kadhuppinaaL thoaL

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.



ஒவ்வொரு பொழுதும் உயிர் வளர்க்கத் தீண்டுவதால் பேதைக்கு அமிழ்தைப் போன்ற இயல்புடைய தோள்.



பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.



இவளை அணைக்கும்போது எல்லாம் வாடிக் கிடந்த என் உயிர் தளிர்க்கும்படி என்னைத் தொடுவதால், இவளின் தோள்கள் அமிழ்தத்தில் செய்யப்பட்டவை போலும்.



இந்த இளமங்கையைத் தழுவும் போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கு இவளின் அழகிய தோள்கள் அமிழ்தத்தினால் ஆனவை என்பதுதான் காரணம் போலும்.


Ambrosia are the simple maiden's arms; when I attain
Their touch, my withered life puts forth its buds again!.


The shoulders of this fair one are made of ambrosia, for they revive me with pleasure every time I embrace them.



uRudhoaRu uyirdhaLirppath theeNdalaal paedhaikku
amizhdhin iyandrana thoaL

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.



தன்னுடன் இருந்து தன் உழைப்பால் உண்டானதை பகிர்ந்து உண்ணும் மாபெரும் மகிழ்ச்சி பருவ பெண்ணின் முயக்கத்தில் இருக்கிறது.



அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுந்து கொடுத்து உண்டாற் போன்றது.



அழகிய மா நிறப் பெண்ணாகிய என் மனைவியிடம் கூடிப் பெறும் சுகம், தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் சுகம் போன்றது.



தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும் இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது.


As when one eats from household store, with kindly grace
Sharing his meal: such is this golden maid's embrace.


The embraces of a gold-complexioned beautiful female are as pleasant as to dwell in one's own house and live by one's own (earnings) after distributing (a portion of it in charity).



thammil irundhu thamadhupaaththu uNtatraal
ammaa arivai muyakku

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.



காதலில் வீழும் இருவர்க்கு இனிமையானது காற்றும் இடை புகாத முயக்கம்.



காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.



இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே.



காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.


Sweet is the strict embrace of those whom fond affection binds,
Where no dissevering breath of discord entrance finds.


To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze.



veezhum iruvarkku inidhae vaLiyidai
poazhap padaaa muyakku

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.



சிறிய பிணக்கு, தேவை உணர்தல், புணர்ந்து மகிழ்தல் இவைகள் காமத்துடன் கூடி இணைந்தவர் பெற்ற பயன்.



ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் பெற்ற பயன்களாகும்.



படுக்கைக்குப் போகுமுன் சிறு ஊடல் செய்தல், தவறு உணர்ந்து சமாதானம் ஆதல், அதன்பின் கூடல் இவை அல்லவா திருமணம் செய்து கொண்டவர் பெற்ற பயன்கள்!.



ஊடல் கொள்வதும், அதனால் விளையும் இன்பம் போதுமென உணர்ந்து அதற்கும் மேலான இன்பம் காணப் புணர்ந்து மயங்குவதும் காதல் வாழ்வினர் பெற்றிடும் பயன்களாகும்.


The jealous variance, the healing of the strife, reunion gained:
These are the fruits from wedded love obtained.


Love quarrel, reconciliation and intercourse - these are the advantages reaped by those who marry for lust.



oodal uNardhal puNardhal ivaikaamam
kootiyaar petra payan

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.



அறியும் தருணமெல்லாம் தன்னிடம் உள்ள அறியாமை கண்டறிவதைப் போல் காமத்துடன் உயந்தவளை அணுகும் தருணமெல்லாம் உணரப்படுகிறது.



செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது.



நூல்களாலும் நுண் அறிவாலும் அறிய அறிய முன்னைய நம் அறியாமை தெரிவதுபோல, நல்ல அணிகளை அணிந்திருக்கும் என் மனைவியுடன் கூடக் கூட அவள் மீது உள்ள என் காதற்சுவையும் புதிது புதிதாகத் தெரிகிறது.



மாம்பழ மேனியில் அழகிய அணிகலன்கள் பூண்ட மங்கையிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் ஏற்படும் காதலானது, இதுவரை அறியாதவற்றைப் புதிதுபுதிதாக அறிவதுபோல் இருக்கிறது.


The more men learn, the more their lack of learning they detect;
'Tis so when I approach the maid with gleaming jewels decked.


As (one's) ignorance is discovered the more one learns, so does repeated intercourse with a well-adorned female (only create a desire for more).



aRidhoaRu aRiyaamai kaNdatraal kaamam
seRidhoaRum saeyizhai maattu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

கண்டு கேட்டு சுவைத்து முகர்ந்து தொட்டு கூடி மகிழ்தல் பெண் இடத்தில் மொத்தமாக உள்ளது. நோய் உண்டாக்கிய ஒன்றுக்கு வேறு ஒன்றே மருந்து பெண் இவளோ நோய் செய்து மருந்தாகவும் இருக்கிறாள். பெண்ணுடன் உறங்குதை போல் இனிமையான ஒன்று மாறும் இவ்வுலகில் இல்லை. விலகிச் சென்றால் சுட்டெரிக்கும் புதிய நெருப்பு பெண். அவள் தோள் வேண்டிய பொழுது இன்பம் தரும் என்பதால் அமுதுக்கு ஒப்பானது. இளம் பெண்ணுடன் இணைதல் தன் உழைப்பால் உண்ணும் உணவு போன்றது. காற்றும் இடை புகாத முயக்கம், சிறு பிணக்கு இவை காமத்தின் பயன்கள். அறியாமை அறிந்து அழித்துக் கொள்ளும் பிள்ளை போல் காமத் தொடர்பு செம்மையாக்கும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.