திருவள்ளுவரின் திருக்குறள்

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.



காதலரை இணைக்கும் தூதொடு வந்த கனவிற்கு என்ன செய்வேனோ எவ்வகையில் செய்வேனோ விருந்து.



( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?.



என் மன வேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர் அனுப்பிய தூதை என்னிடம் கொண்டு வந்த கனவிற்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன்?.



வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?.


It came and brought to me, that nightly vision rare,
A message from my love,- what feast shall I prepare?.


Where with shall I feast the dream which has brought me my dear one's messenger ?.



kaadhalar thoodhodu vandha kanavinukku
yaadhusey vaenkol virundhu

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.



மீன் போன்ற கண்கள் உறங்கும் நிலையில் காதலரை கலந்தால் உற்ற உண்மையை எப்படிச் சொல்லுவேன்.



கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.



கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.



நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்.


If my dark, carp-like eye will close in sleep, as I implore,
The tale of my long-suffering life I'll tell my loved one o'er.


If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord.



kayalunkan yaanirappath thunjir kalandhaarkku
uyalunmai saatruvaen man

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.



நிகழும் காலத்தில் நெருங்காதவரை கனவில் கண்டு உறவாடுவதால் இருக்கிறது என் உயிர்.



நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.



நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.



நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.


Him, who in waking hour no kindness shows,
In dreams I see; and so my lifetime goes!.


My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours.



nanavinaal nalkaa thavaraik kanavinaal
kaantalin unten uyir

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.



கனவில் கண்டு உறவாடி மகிழும் காமத்தால் நேரில் நாடாத அவரை நாட காரணமாய் இருக்கிறது.



நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.



நேரில் வந்து அன்பு செய்யாதவரை அவர் இருக்கும் இடம் போய் அவரைத் தேடிக்கொண்டு வந்து தருவதால் கனவில் எனக்கு இன்பம் உண்டாகிறது.



நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.


Some pleasure I enjoy when him who loves not me
In waking hours, the vision searches out and makes me see.


There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness.



kanavinaan undaakum kaamam nanavinaan
nalkaarai naatith thararku

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.



நேரில் கண்டு இருந்தது எப்படியோ கனவில் கண்ட பொழுதும் இருந்தது அதே இனிமை.



முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.



முன்பு அவரை நேரில் கண்டு அனுபவித்ததும் சரி, இப்போது கனவில் அவரைக் கண்டு அனுபவிப்பதும் இரண்டுமே எனக்கு இன்பந்தான்.



காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!.


As what I then beheld in waking hour was sweet,
So pleasant dreams in hour of sleep my spirit greet.


I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant.



nanavinaal kandadhooum aange kanavundhaan
kanda pozhudhae inidhu

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.



நேரில் நிகழ்வது என்று ஒன்றில்லை என்றால் கனவில் காதலர் நீங்காமல் இருப்பார் அன்றோ.



நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.



கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்.



நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே.


And if there were no waking hour, my love
In dreams would never from my side remove.


Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me.



nanavena ondrillai aayin kanavinaal
kaadhalar neengalar man

நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.



நேரில் நாடி வராத கொடியவர் கனவில் வந்து ஏன் என்னை வருந்தச் செய்வது.



நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?.



நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?.



நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?.


The cruel one, in waking hour, who all ungracious seems,
Why should he thus torment my soul in nightly dreams?.


The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?.



nanavinaal nalkaak kotiyaar kanavanaal
en-emmaip peezhip padhu

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.



உறங்கையில் உறவாடுபவராக இருப்பவர் விழித்தவுடன் நெஞ்சத்திலே நிறைந்து விடுகிறார் விரைந்து.



தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்.



என் நெஞ்சில் எப்போதும் வாழும் என்னவர் நான் உறங்கும் போது என் தோளின் மேல் கிடக்கிறார். விழித்துக் கொள்ளும் போதோ வேகமாக என் நெஞ்சிற்குள் நுழைந்து கொள்கிறார்.



தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்.


And when I sleep he holds my form embraced;
And when I wake to fill my heart makes haste!.


When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul.



thunjungaal thoalmelar aaki vizhikkungaal
nenjaththar aavar viraindhu

நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.



நேரில் நெருங்காதவரை நொந்துக் கொள்வார்கள் யார் எனப் பார்த்தால் அவர்கள் கனவிலும் காதலரை காணாதவர்கள்.



கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.



இன்னும் திருமணம் ஆகாத, ஆகிக் கணவனைப் பிரிந்து அறியாத இந்தப் பெண்கள், கனவில் காதலனைக் கண்டு அறியாதவர், ஆதலால், அவர்கள் அறிய நேரில் வந்து என்னிடம் அன்பு காட்டாத என்னவரை அன்பற்றவர் என்று ஏசுகின்றனர்.



கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்.


In dreams who ne'er their lover's form perceive,
For those in waking hours who show no love will grieve.


They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours.



nanavinaal nalkaarai noavar kanavinaal
kaadhalark kaanaa thavar

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.



நனவினால் நம்மை பிரிந்து இருப்பவர்கள் என்று சொல்கிறார்கள் கனவினால் உறவாடுவதை காணாத இவ்வூர் மக்கள்.



நனவில் நம்‌மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?.



என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று என்னவரை ஏசும் இவ்வூர்ப் பெண்கள், அவர் நாளும் என் கனவில் வருவதைக் கண்டு அறியாரோ?.



என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?.


They say, that he in waking hours has left me lone;
In dreams they surely see him not,- these people of the town.


The women of this place say he has forsaken me in my wakefulness. I think they have not seen him visit me in my dreams.



nanavinaal namneeththaar enpar kanavinaal
kaanaarkol ivvoo ravar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

காதலரை இணைக்க வந்த கனவை எப்படி கொண்டாடி மகிழ்வேன். மீன் போன்ற கண்கள் உறங்கும் தருணம் காதலரை கலந்தால் எப்படி உரைப்பேன். நேரில் நெருங்காத என் காதலர் கனவில் கலப்பதால் நிலைக்கிறது என் உயிர். கனவில் என் காமம் நிறைவாகிறது. நேரில் கண்ட சுகம் கனவு தருகிறது. நேரில் நடக்கவே நடக்காது என்றால் கனவில் நீங்காமல் இருக்கலாம். நேரில் வராத கொடிய காதலர் கனவில் வந்து பிழைக்கச் செய்கிறார். உறக்கத்தில் உறவாடி விழிப்பில் நெஞ்சம் நிறைகிறார். நேரில் நெருங்காதவரை நொந்துக் கொள்பவர்கள் கனவிலும் காணதவர்கள். நாங்கள் கூடவில்லை என நினைக்கும் இவ்வூர் மக்கள் கனவில் இணைவதை அறியாதவர்கள்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.