திருவள்ளுவரின் திருக்குறள்

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.



அறம் எனப்படும் வாழும் முறை அறிந்து முன் அனுபவம் பெற்ற சிறந்த அறிவுடையாரின் உறவை அவரின் திறன் அறிந்து விரும்பி ஏற்க வேண்டும்.



அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.



அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக.



அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.


As friends the men who virtue know, and riper wisdom share,
Their worth weighed well, the king should choose with care.


Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledge.



aRanaRindhu mooththa aRivutaiyaar kaeNmai
thiRanaRindhu thaerndhu koLal

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.



வந்த துன்பம் விலக்கி அழிவை வருமுன் காக்கும் பெருமைப் பெற்றவரை விரும்பி ஏற்க வேண்டும்



எண் வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.



வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை, அவருக்கு வேண்டியதைச் செய்து, துணையாகப் பெறுக.



வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.


Cherish the all-accomplished men as friends,
Whose skill the present ill removes, from coming ill defends.


Let (a king) procure and kindly care for men who can overcome difficulties when they occur, and guard against them before they happen.



utranhoai neekki uRaaamai muRkaakkum
petriyaarp paeNik koLal

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.



அரிதானவைகளில் அரிதானது பெரியவர்களை மதித்துக் காத்து உறவுக் கொண்டாடுவது.



பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.



துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.



பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்.


To cherish men of mighty soul, and make them all their own,
Of kingly treasures rare, as rarest gift is known.


To cherish great men and make them his own, is the most difficult of all difficult things.



ariyavatru Lellaam aridhae periyaaraip
paeNith thamaraak koLal

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.



தன்னை விட பெரியவர்களின் உறவுப் பாராட்டி வாழ்வது வலிமையானவைகளில் எல்லாம் முதன்மையானது.



தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.



அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்.



அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.


To live with men of greatness that their own excels,
As cherished friends, is greatest power that with a monarch dwells.


So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest.



thammiR periyaar thamaraa ozhukudhal
vanmaiyu Lellaanh thalai

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.



விரும்பத்தகவரின் கண்ணாக வாழ விரும்பும் மன்னவன் விரும்பத்தக்கவரை அருகில் வைத்துகொள்ள வேண்டும்.



தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.



தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக் கொள்க.



கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும்.


The king, since counsellors are monarch's eyes,
Should counsellors select with counsel wise.


As a king must use his ministers as eyes (in managing his kingdom), let him well examine their character and qualifications before he engages them.



soozhvaarkaN Naaka ozhukalaan mannavan
soozhvaaraik soozhndhu koLal

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.



தகுதியுள்ளவர் கூட்டத்தோடு இணைந்து ஒழுக வல்லவர் இடத்தில் பகைவர் செயல் செயல்படுவது இல்லை.



தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.



தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.



அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது.


The king, who knows to live with worthy men allied,
Has nought to fear from any foeman's pride.


There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy men.



thakkaa rinaththanaaith thaanozhuka vallaanaich
setraar seyakkitandha thil

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.



அறியாமையை அழுத்தமாய் அழிப்பவரை துணையாக கொண்டவரை யாரும் கெடுக்கும் நோக்கில் அணுகமுடியாது.



கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.



தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்?.



இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?.


What power can work his fall, who faithful ministers
Employs, that thunder out reproaches when he errs.


Who are great enough to destroy him who has servants that have power to rebuke him ?.



itikkunh thuNaiyaarai yaaLvarai yaarae
kedukkunh thakaimai yavar

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.



அறியாமையை அழிப்பவர் இல்லாத பாதுகாப்பற்ற மன்னன் ஆட்சி அழிப்பார் இன்றியே அழியும்.



கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.



தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.



குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.


The king with none to censure him, bereft of safeguards all,
Though none his ruin work, shall surely ruined fall.


The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him.



itippaarai illaadha Emaraa mannan
ketuppaa rilaanunG kedum

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.



முதாலாகும் உழைப்பு இல்லாதவர்க்கு இல்லை ஊதியமாகும் கூலி. மதில் போல் காக்கும் சான்றோர் இல்லாதவர்க்கு இல்லை சிறந்த நிலை.



முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.



முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை.



கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்.


Who owns no principal, can have no gain of usury;
Who lacks support of friends, knows no stability.


The There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to those who are without the support of adherents.



mudhalilaark oodhiya millai madhalaiyaanhj
saarpilaark killai nilai

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.



பல நபர்கள் பகை கொள்ள பற்றுகொள்வதை விட தீமையானது நல்லவர்கள் தொடர்பை விடுவது.



நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.



துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும்.



நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.


Than hate of many foes incurred, works greater woe
Ten-fold, of worthy men the friendship to forego.


It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many.



pallaar pakaikoLaliR paththatuththa theemaiththae
nallaar thodarkai vidal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அறம் அறிந்த அநுபவம் பெற்ற அறிவாளியை, தன் நோய் போக்கி அடுத்தவர் நோய் போக்க வல்லவரை நட்பு பாராட்டும் திறன் அறிந்து நட்பாக்கிக் கொள்ளவேண்டும். அவர்களை தவறை தண்டிக்கும் இடிப்பாரையாகவும் தகுந்தபடி பாதுகாக்கும் மதிலாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். பகை வளர்க்கும் பலர் உறவை நாடுவதைவிட நல்லார் தொடர்பை கைவிடாமல் இருப்பதே நல்லது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.