திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: தூது / The Envoy

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.



அன்பை உடமையாகவும், சிறந்த குடும்பத்தை சேர்ந்தவராகவும், ஆட்சியாளரை மதிக்கும் பண்புள்ளவராகவும் இருப்பது தூது உரைப்பவர்களின் பண்பு.



அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.



நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்.



அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும்.


Benevolence high birth, the courtesy kings love:-
These qualities the envoy of a king approve.


The qualification of an ambassador are affection (for his relations) a fitting birth, and the possession of attributes pleasing to royalty.



anpudaimai aandra kutippiRaththal vaendhavaam
paNpudaimai thoodhuraippaan paNpu

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.



அன்பு, அறிவு, தேர்ந்தெடுத்த வார்த்தைகளை உரைக்கும் திறன், இவைகள் தூது உரைப்பார்க்கு முக்கியமான மூன்று.



அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.



அன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்க்கு இன்றியமையாதன.



தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை.


Love, knowledge, power of chosen words, three things,
Should he possess who speaks the words of kings.


Love (to his sovereign), knowledge (of his affairs), and a discriminating power of speech (before other sovereigns) are the three sine qua non qualifications of an ambassador.



anpaRivu aaraaindha solvanmai thoodhuraippaarkku
indri yamaiyaadha moondru

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.



நூல் படைப்பவர்களில் வல்லமையான நூல் படைக்க அவைகளை கற்று அறிய வேண்டும். அதுபோலவே, வேல் பாய்ச்சுபவர்களை கடந்து வெற்றிக்கான செயல்களை உரைப்பது பண்பு.



அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.



அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.



வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்.


Mighty in lore amongst the learned must he be,
Midst jav'lin-bearing kings who speaks the words of victory.


To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaks to lance-bearing kings on matters of triumph (to his own sovereign).



noolaaruL noolvallan aakudhal vaelaaruL
vendri vinaiyuraippaan paNpu

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.



அறிவு, உருவம், தேர்ந்த கல்வி, இம் மூன்றையும் செழுமையான அடைந்தவர் செல்லலாம் செயல்முடிக்க.



இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.



இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க.



தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.


Sense, goodly grace, and knowledge exquisite.
Who hath these three for envoy's task is fit.


He may go on a mission (to foreign rulers) who has combined in him all these three. viz., (natural) sense, an attractive bearing and well-tried learning.



aRivuru vaaraaindha kalvi-im moondran
seRivutaiyaan selka vinaikku

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.



தொகுத்துச் சொல்லித் தேவையற்றதை நீக்கி இன்புறும்படி எடுத்துரைத்து நன்றி பாரட்டும்படி நன்மை தரவல்லதாக அமைவதே தூது.



பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.



அடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், வெறுப்பு ஊட்டக் கூடியவற்றை விலக்கியும், இனிய சொற்களால் மனம் மகிழக் கூறியும், தம் சொந்த நாட்டிற்கு நன்மையைத் தேடி தரவேண்டியது தூதரின் பண்பாகும்.



சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத் தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும்.


In terms concise, avoiding wrathful speech, who utters pleasant word,
An envoy he who gains advantage for his lord.


He is an ambassador who (in the presence of foreign rulers) speaks briefly, avoids harshness, talks so as to make them smile, and thus brings good (to his own sovereign).



thokachchollith thoovaadha neekki nakachcholli
nandri payappadhaanh thoodhu

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.



கற்று அறிந்து காண்பதற்கு அஞ்சாமல் சொல்லவேண்டியதை சொல்லி தகுந்த நேரத்தில் சரியானதை அறிவதே தூது.



கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்க்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.



அனைத்து நூல்களையும் கற்றதோடு மட்டும் அல்லாமல், பகை அரசு மனங்கொள்ளுமாறு அவற்றைச் சொல்லவும், ஏற்காதவர் சினந்தால் அவர் பார்வைக்கு அஞ்சாமல், ஏற்பச் செய்யத் தக்க தந்திரவழியை அறிவதும் தூதரின் பண்பாகும்.



கற்றறிவாளனாகவும், பகைவரின் கனல்கக்கும் பார்வைக்கு அஞ்சாதவனாகவும், உள்ளத்தில் பதியுமாறு உரைப்பவனாகவும், உரிய நேரத்தில் உணரவேண்டியதை உணர்ந்து கொள்பவனாகவும் இருப்பவனே சிறந்த தூதனாவான்.


An envoy meet is he, well-learned, of fearless eye
Who speaks right home, prepared for each emergency.


He is an ambassador who having studied (politics) talks impressively, is not afraid of angry looks, and knows (to employ) the art suited to the time.



katrukkaN anjaan selachchollik kaalaththaal
thakkadhu aRivadhaam thoodhu

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.



ஆற்றவேண்டிய கடமை அறிந்து, தகுந்த காலத்தை கருத்தில் கொண்டு, இடத்தை அறிந்து, சிந்தித்து எடுத்துரைப்பதே தூதின் தலைமையானது.



தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.



தம் நாட்டிற்காக அடுத்த அரசிடம் தாம் ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, சொல்ல வேண்டியதை முன்னதாகவே மனத்துள் திட்டமிட்டு, ஏற்ற நேரம் பார்த்துக் கடமையைச் செய்வதற்குப் பொருத்தமான இடத்தையும் கண்டு சொல்பவனே தூதருள் தலைமையானவன்.



ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான்.


He is the best who knows what's due, the time considered well,
The place selects, then ponders long ere he his errand tell.


He is chief (among ambassadors) who understands the proper decorum (before foreign princes), seeks the (proper) occasion, knows the (most suitable) place, and delivers his message after (due) consideration.



katanaRindhu kaalanG karudhi idanaRindhu
eNNi uraippaan thalai

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.



தேவையற்றதை நாடாத தூய்மை, நன்மைக்கு துணையாதல், அச்சமற்ற துணிவு இம்மூன்றின் உண்மைத் தன்மையுடன் இருப்பதே தூதுரைப்பவர் பண்பு.



தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.



பணத்தின் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை இல்லாமல் இருக்கும் நேர்மை, அடுத்த அரசின் அமைச்சர்களின் துணை, நல்லனவே எண்ணிச் செய்யும் துணிவு இம் மூன்றையும் உண்மையாகவே பெற்றிருப்பதே கூறியது கூறும் தூதரின் பண்பு.



துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்.


Integrity, resources, soul determined, truthfulness.
Who rightly speaks his message must these marks possess.


The qualifications of him who faithfully delivers his (sovereign's) message are purity, the support (of foreign ministers), and boldness, with truthfulness in addition to the (aforesaid) three.



thooimai thuNaimai thuNivudaimai immoondrin
vaaimai vazhiyuraippaan paNpu

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்க ணவன்



தவிர்க வேண்டியதை அரசுக்கு எடுத்துரைப்பான் வலிக்காமல் சோர்வற்ற வார்த்தை பயன்படுத்தும் திடமானவன்.



குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.



தம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.



ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்.


His faltering lips must utter no unworthy thing,
Who stands, with steady eye, to speak the mandates of his king.


He alone is fit to communicate (his sovereign's) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter).



vitumaatram vaendharkku uraippaan vadumaatram
vaaisaeraa van-ka Navan

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.



இயற்கையின் இறுதிப் பயன் உடனே கிடைப்பினும் எந்தக்குறையும் இல்லாமல் தன் மன்னனின் நிலையை உறுதிப்பட உரைப்பதே தூது.



தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.



தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.



தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான்.


Death to the faithful one his embassy may bring;
To envoy gains assured advantage for his king.


He is the ambassador who fearlessly seeks his sovereign's good though it should cost him his life (to deliver his message).



iRudhi payappinum enjaadhu iRaivaRku
uRudhi payappadhaam thoodhu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அன்பு நற்குடி மன்னரை மதித்தல் என உள்ளவரே தூதிற்கு சரியானவர். தொகுத்து தேவையானதை மட்டும் தெளிவாக நூல் எழத வல்லவர் போலும் சிறந்த வேல் வீச்சு போலும் தூது இருக்க வேண்டும். மரணம் வரும் என்றாலும் அஞ்சாமல் மன்னவனுக்கு உண்மை உரைக்கவேண்டும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.