திருவள்ளுவரின் திருக்குறள்

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.



பணிவு தெயவீகமானவர்களுடன் சேர்க்கும் பணிவற்ற தன்மை மீளமுடியாத இருட்டில் சேர்த்து விடும்.



அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.



அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.



அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.


Control of self does man conduct to bliss th' immortals share;
Indulgence leads to deepest night, and leaves him there


Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell)



adakkam amararuL uykkum adangaamai
aariruL uyththu vidum

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.



பொருளாக இல்லாத அடக்கத்தை பாதுகாக்க வேண்டும். அதன் பயனை விட சிறந்தது இல்லை உயிருக்கு.



அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.



அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.



மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும். அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை.


Guard thou as wealth the power of self-control;
Than this no greater gain to living soul


Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that



kaakka poruLaa adakkaththai aakkam
adhaninoounG killai uyirkku

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.



திறன் அறியப்பட்டு நன்மைகள் விளையும், அறிய வேண்டியதை அறிந்து செயல்பட்டு அடக்கமாக இருந்தால்.



அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.



அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.



அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்.


If versed in wisdom's lore by virtue's law you self restrain
Your self-repression known will yield you glory's gain


Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise



seRivaRindhu seermai payakkum aRivaRindhu
aatrin adangap peRin

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.



இருப்புத் தன்மையை மாற்றிக் கொள்ளாமல் அடக்கம் அடைந்தவரின் வெளிப்பாடுகள் மலையை விட பெரியது.



தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.



தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.



உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.


In his station, all unswerving, if man self subdue,
Greater he than mountain proudly rising to the view


More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself



nilaiyin thiriyaadhu adangiyaan thoatram
malaiyinum maaNap peridhu

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.



எல்லாருக்கும் நல்லது பணிதல், அப்படியானவர்களின் மனம் செல்வந்தருக்கும் செல்வம் தர வல்லது.



பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.



செருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்.



பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்.


To all humility is goodly grace; but chief to them
With fortune blessed, -'tis fortune's diadem


Humility is good in all; but especially in the rich it is (the excellence of) higher riches



ellaarkkum nandraam paNidhal avaruLLum
selvarkkae selvam thakaiththu

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து



ஒன்றில் மட்டும் ஆமைப் போல் ஐந்து புலன்களையும் அடக்க செய்தால் எழுந்து செயல்படும் பொழுதெல்லாம் காவலாக இருக்கும்.



ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.



ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் - அரணாக இருந்து உதவும்.



உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்.


Like tortoise, who the five restrains
In one, through seven world bliss obtains


Should one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove a safe-guard to him throughout the seven-fold births.



orumaiyuL aamaipoal aindhatakkal aatrin
ezhumaiyum Emaap pudaiththu

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.



எதைக் காக்காவிட்டாலும் நாவைக் காக்க வேண்டும், இல்லையென்றால் சோகத்தைக் காக்க நேரிடும் சொல் குற்றம் ஏற்பட்டு.



காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.



எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.



ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.


Whate'er they fail to guard, o'er lips men guard should keep;
If not, through fault of tongue, they bitter tears shall weep


Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue



yaakaavaa raayinum naakaakka kaavaakkaal
soakaappar sollizhukkup pattu

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.



ஒரே ஒரு தீமையான சொல் அதன் அர்த்தம் விளங்கும் பொழுது நன்மைகள் தாராது போகும்.



தீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.



தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.



ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.


Though some small gain of good it seem to bring,
The evil word is parent still of evil thing


If a man's speech be productive of a single evil, all the good by him will be turned into evil



ondraanunh theechchol porutpayan uNtaayin
nandraakaa thaaki vidum

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.



தீ பட்ட காயம் ஆறிப்போகும், நாவில் திட்டிய காயம் வடுவாக மாறும்.



தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.



ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.



நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.


In flesh by fire inflamed, nature may thoroughly heal the sore;
In soul by tongue inflamed, the ulcer healeth never more


The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal



theeyinaar suttapuN uLLaarum aaRaadhae
naavinaaR sutta vadu

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.



முடிவை முன்னிறுத்தி கற்று அடங்கி நடப்பவன் இடத்தில் அறமும் வழி பார்த்து நுழையும்.



சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.



கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.



கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்.


Who learns restraint, and guards his soul from wrath,
Virtue, a timely aid, attends his path


Virtue, seeking for an opportunity, will come into the path of that man who, possessed of learning and self-control, guards himself against anger



kadhangaaththuk katratangal aatruvaan sevvi
aRampaarkkum aatrin nuzhaindhu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

தெய்வீகமானவர்களுடன் சேர்க்கும் அடக்கத்தை அதன் செறிவு அறிந்து காக்க வேண்டும் அவர் மலையை விட பெரியவராய் கருதப்படுவார். வாய்ச்சொல் தவறிவிடாதபடி காப்பதே அவசியம் காரணம் தீ ஏற்படுத்தும் காயத்தைவிட பெரிய காயத்தை உண்டாக்கிவிடும். முழுமையாக கற்று அறிந்தவர் பணிதலுடன் வாழ்வார்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.