திருவள்ளுவரின் திருக்குறள்

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.



அரியது என்று செயல்பட அச்சம் அடைவது கூடாது. முயற்சி செய்வதே பெருமையானது.



இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.



நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.



நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.


Say not, 'Tis hard', in weak, desponding hour,
For strenuous effort gives prevailing power.


Yield not to the feebleness which says, "this is too difficult to be done"; labour will give the greatness (of mind) which is necessary (to do it).



arumai udaiththendru asaavaamai vaeNdum
perumai muyaRchi tharum

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.



செயல்படும் நேரம் செயல் சிதைய செய்வதும் முழுமை பெறாமல் விட்டுவிடுவதுமாய் இருப்பவரை உலகம் ஏற்பது இல்லை.



தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.



ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்.



எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்.


In action be thou, 'ware of act's defeat;
The world leaves those who work leave incomplete!.


Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work.



vinaikkaN vinaiketal Ompal vinaikkuRai
theerndhaarin theerndhandru ulagu

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.



ஊக்கம் என்ற உயர்பண்பின் வெளிப்பாடே அடுத்தவருக்கு உதவிடும் மகிழ்வை தருகிறது.



பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.



முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.



பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக் கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்.


In strenuous effort doth reside
The power of helping others: noble pride!.


The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts.



thaaLaaNmai ennum thakaimaikkaN thangitrae
vaeLaaNmai ennunhj serukku

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.



ஊக்கம் இல்லாதவர் உதவுதல், வீரம் இல்லாதவர் கையில் இருக்கும் கத்தி போல் பயனற்றுப் போகும்.



முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக இருத்தல், பேடி தன் கையில் வாளை எடுத்தும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.



முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும்.



ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.


Beneficent intent in men by whom no strenuous work is wrought,
Like battle-axe in sexless being's hand availeth nought.


The liberality of him, who does not labour, will fail, like the manliness of a hermaphrodite, who has a sword in its hand.



thaaLaaNmai illaadhaan vaeLaaNmai paetikai
vaaLaaNmai poalak kedum

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.



இன்பத்தை இலக்காக எண்ணாமல் செயலைச் செய்ய முற்படுபவர் தனது உறவுகளுக்கு துன்பம் துடைத்துக் காக்கும் தூண் போன்றவர்.



தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்க்கொண்டச் செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.



இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரத்தின் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான்.



தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்.


Whose heart delighteth not in pleasure, but in action finds delight,
He wipes away his kinsmen's grief and stands the pillar of their might.


He who desires not pleasure, but desires labour, will be a pillar to sustain his relations, wiping away their sorrows.



inpam vizhaiyaan vinaivizhaivaan than-kaeLir
thunpam thutaiththoondrum thooN

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.



முயற்சி (ஆர்வமுடன் செயல்பட துணிவது) நற்செயல்களை உருவாக்கும். முயற்சி அற்று இருப்பது வறுமையை ஏற்றுக்கொள்ளும்.



முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.



முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.



முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.


Effort brings fortune's sure increase,
Its absence brings to nothingness.


Labour will produce wealth; idleness will bring poverty.



muyaRchi thiruvinai aakkum muyatrinmai
inmai pukuththi vidum

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.



முயற்சி அற்றவர் இடத்தில் மூதேவி இருக்கிறாள். முயற்சி உள்ளவரிடம் கலைமகள் தங்குகிறாள். ஆர்வமற்றவருக்கு மூளை செல்கள் பலமற்று திறமைகள் குறைகிறது. ஆகவே அதை மூதேவி (முடக்கப்பட்ட மூளை) என்றும். ஆர்வமுடன் செயல்பட மூளை செல்கள் மேலும் விரிகிறது. எனவே ஆயிரம் தாமரை மலரில் ஆற்றல் வளர்கிறது.



ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.



சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.



திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்.


In sluggishness is seen misfortune's lurid form, the wise declare;
Where man unslothful toils, she of the lotus flower is there!.


They say that the black Mudevi (the goddess of adversity) dwells with laziness, and the Latchmi (the goddess of prosperity) dwells with the labour of the industrious.



matiyuLaaL maamukati enpa matiyilaan
thaaLuLaan thaamaraiyi naaL

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.



புலன் இல்லாமல் இருப்பது எந்த மனிதருக்கும் பழிக்கும் ஒன்றாக இருக்காது. செய்யவேண்டியதை செய்யாமல் இருந்தால் பழிக்கப்படும்.



நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.



உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.



விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.


'Tis no reproach unpropitious fate should ban;
But not to do man's work is foul disgrace to man!.


Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace.



poRiyinmai yaarkkum pazhiyandru aRivaRindhu
aaLvinai inmai pazhi

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.



வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வீக நிலை அடைந்தவரால் முடியாத செயல்களையும் தனது உடல் வருத்தி செய்யும் முயற்சியால் சாதிக்க முடியும்.



ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.



விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.



கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.


Though fate-divine should make your labour vain;
Effort its labour's sure reward will gain.


Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward.



theyvaththaan aakaa theninum muyaRchidhan
meyvaruththak kooli tharum

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.



தலைவிதியையும் தனக்கு சாதகமாக பார்ப்பார் சோர்வின்றி தளராது பெருமுயற்சி செய்பவர்.



சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும்.



மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.



ஊழ் என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள். சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்.


Who strive with undismayed, unfaltering mind,
At length shall leave opposing fate behind.


They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back.



oozhaiyum uppakkam kaaNpar ulaivindrith
thaazhaadhu uGnatru pavar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

செயல்பட ஆர்வமாக இருப்பதே எல்லா வெற்றிக்கும் ஆதாரம். எனவே முழுமை அடையும் வரை செயல்பட துணிய வேண்டும். ஐம்பொறியில் சில இல்லாது போனாலும் பழியாகாது ஆள்வினை இல்லாது இருப்பதே பழி. வாழ்வாங்கு வாழ்பவரை கடந்து வாழ உடல் வருத்த உழைத்தால் முடியும். தலைவிதியையும் மாற்றும் வல்லதை உழைப்பிற்கு உண்டு.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.