திருவள்ளுவரின் திருக்குறள்

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.



பல மனிதர்கள் முன்னிலையில் பயனற்றதை பேசுபவரை அனைத்து மனிதர்களும் ஏளனம் செய்வார்கள்.



கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.



பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.



பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லாரும் இகழ்ந்துரைப்பார்கள்.


Words without sense, while chafe the wise,
Who babbles, him will all despise.


He who to the disgust of many speaks useless things will be despised by all.



pallaar muniyap payanila solluvaan
ellaarum eLLap padum

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.



பயனற்றதை பல மனிதர்கள் முன்னிலையில் சொல்வது நன்மை அற்றதை நண்பர்களுக்கு செய்வதை விட தீமையாமது.



பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.



ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.



பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.


Words without sense, where many wise men hear, to pour
Than deeds to friends ungracious done offendeth more.


To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends.



payanila pallaarmun sollal nayanila
nattaarkaN seydhaliR Reedhu

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.



நன்மை செய்பவன் இல்லை என்பதை பேசும் பொழுது பயனற்றதை விரிவாக பேசுவதே உரைத்துவிடும்.



ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.



பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.



பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.


Diffusive speech of useless words proclaims
A man who never righteous wisdom gains.


That conversation in which a man utters forth useless things will say of him "he is without virtue".



nayanilan enpadhu sollum payanila
paarith thuraikkum urai

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.



நேர்மையற்றவை நன்மை தருவதை நீக்கிவிடும். பயன் தராது பண்பற்ற சொல் பலர் இடத்தை அடைத்தும்.



பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.



பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.



பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.


Unmeaning, worthless words, said to the multitude,
To none delight afford, and sever men from good.


The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue, remove him from goodness.



nayansaaraa nanmaiyin neekkum payansaaraap
paNpilsol pallaa rakaththu

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.



சீரும் சிறப்பும் விலகும் பயனற்ற நீர்த்து போனாவர்கள் இடத்தில் சொன்னால்.



பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.



இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.



நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.


Gone are both fame and boasted excellence,
When men of worth speak of words devoid of sense.


If the good speak vain words their eminence and excellence will leave them.



seermai siRappotu neengum payanila
neermai yudaiyaar solin

பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.



பயன் அற்ற பேச்சை பாராட்டுபவனை குழந்தை என்பதா?. குழந்தை போன்ற பதர் என்பதா?



பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.



பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.



பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.


Who makes display of idle words' inanity,
Call him not man, -chaff of humanity!.


Call not him a man who parades forth his empty words. Call him the chaff of men.



payanilsol paaraattu vaanai makan-enal
makkat padhati yenal

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.



நளினமற்று சொன்னாலும் சொல்லலாம் உதாரனமாக இருப்போர் பயனற்றதை சொல்லாததே நன்று.



சான்றோர் நயனில்லாதவற்றைச் சொல்லினுஞ் சொல்லுக, அமையும்; பயனில்லாதவற்றைச் சொல்லாமை நன்று. இது சான்றோர்க்கு ஆகாதென்றது.



நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.



பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது


Let those who list speak things that no delight afford,
'Tis good for men of worth to speak no idle word.


Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things.



nayanila sollinunhj cholluka saandroar
payanila sollaamai nandru

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.



அரிதான பயனை ஆராயும் அறிவுள்ளவர்கள் சொல்லமாட்டார்கள் பெரிய பயனை விளைவிக்காத சொல்லை.



அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.



அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.



அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.


The wise who weigh the worth of every utterance,
Speak none but words of deep significance.


The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them.



arumpayan aayum aRivinaar sollaar
perumpayan illaadha sol

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.



பொருள் அழிந்ததை மறந்தும் சொல்லமாட்டார்கள் அறியாமை அழிந்த மாசற்ற காட்சி போன்றவர்.



மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.



மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.



மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.


The men of vision pure, from wildering folly free,
Not e'en in thoughtless hour, speak words of vanity.


Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not.



poruLdheerndha pochchaandhunhj sollaar maruLdheerndha
maasaRu kaatchi yavar

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.



சொல்லவேண்டும் சொல்லுவதால் பயன் உண்டாகும்படி. சொல்லக்கூடாது சொல்லுவதால் பயன் உண்டாகாத சொல்லை.



சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.



சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.



பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.


If speak you will, speak words that fruit afford,
If speak you will, speak never fruitless word.


Speak what is useful, and speak not useless words.



solluka solliR payanutaiya sollaRka
solliR payanilaach sol


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

ஏளனத்திற்கு உரிமை கொண்டாடும் பயனற்றதை பேசுபவன் மக்கள் என்பதில்லை பதர் என்றே கொள்ளலாம், பயன் தராதவற்றை பெரியவர்கள் எப்பொழுதும் உரைப்பதில்லை. ஐயமற அறிந்தவர்கள் தேவையற்றதை சொல்லுவதில்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.