திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கல்லாமை / Ignorance

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.



அரங்கம் இல்லாமல் வட்டாட்டம் ஆடுவதைப் போன்றதே நிறைந்த நூல்கள் இல்லாமல் கூட்டத்தைக் கூட்டுவது



அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.



அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்.



நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.


Like those at draughts would play without the chequered square,
Men void of ample lore would counsels of the learned share.


To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares.



arangindri vattaati yatrae nirampiya
noolindrik koatti koLal

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.



கல்வி அறிவு இல்லாதவர் கருத்து சொல்ல ஆசைப்படுவது மார்பழுகு இல்லாதவள் பெண்மைக்கான ஆசைக்கொள்வதைப் போன்றது



எண் (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.



படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்.



கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.


Like those who doat on hoyden's undeveloped charms are they,
Of learning void, who eagerly their power of words display.


The desire of the unlearned to speak (in an assembly), is like a woman without breasts desiring (the enjoyment of ) woman-hood.



kallaadhaan soRkaa muRudhal mulaiyiraNdum
illaadhaaL peNkaamuR Ratru

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.



கல்வி அறிவு இல்லாதவர்களும் மிகவும் சிறந்தவர்கள் கல்வி அறிவு பெற்றவர் முன் பேசாது இருந்துவிட்டால்



கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.



கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.



கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.


The blockheads, too, may men of worth appear,
If they can keep from speaking where the learned hear!.


The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned.



kallaa thavarum naninhallar katraarmun
sollaa thirukkap peRin

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.



கல்வி அறிவு இல்லாதவர்களின் வரையறை கழிக்க முடியாத நல்லதாக இருப்பினும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் அறிவுடையவர்கள்



கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.



படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.



கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.


From blockheads' lips, when words of wisdom glibly flow,
The wise receive them not, though good they seem to show.


Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge.



kallaadhaan otpam kazhiyanhan Raayinum
koLLaar aRivudai yaar

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.



கல்லாத ஒருவர் ஆர்வப்பட்டு முன்னின்று பேசினால் கேட்பவர்களுக்கு சோர்வு ஏற்படும்



கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்.



படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.



கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.


As worthless shows the worth of man unlearned,
When council meets, by words he speaks discerned.


The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of the learned).



kallaa oruvan thakaimai thalaippeydhu
sollaatach soarvu padum

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.



இருக்கிறார் என்ற அளவுடையார் அன்றி பயன்படாத களர் நிலத்தை போன்றவரே கல்லாதவர்



கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.



படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.



கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.


'They are': so much is true of men untaught;
But, like a barren field, they yield us nought!.


The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist.



uLarennum maaththiraiyar allaal payavaak
kaLaranaiyar kallaa thavar

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.



நுட்பமுடன் ஆராயும் ஆற்றல் இல்லாதவர்களின் அழகு மண்ணால் செய்யப்படும் பொம்மை போன்றது.



நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.



நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்.



அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.


Who lack the power of subtle, large, and penetrating sense,
Like puppet, decked with ornaments of clay, their beauty's vain pretence.


The beauty and goodness of one who is destitute of knowledge by the study of great and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen doll.



nuNmaaN nuzhaipulam illaan ezhilnhalam
maNmaaN punaipaavai yatru

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.



நல்லவருக்கு ஏற்பட்ட வறுமையை விட கொடியது கல்லாதவருக்கு ஏற்பட்ட உயர்வு



கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.



படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.



முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.


To men unlearned, from fortune's favour greater-evil springs
Than poverty to men of goodly wisdom brings.


Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned.



nallaarkaN patta vaRumaiyin innaadhae
kallaarkaN patta thiru

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.



சமூக அமைப்பில் மேல் பிறந்த கல்லாதவர் கிழ் பிறந்த கற்றார் முன் ஏதும் அற்றவரே



கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.



படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.



கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.


Lower are men unlearned, though noble be their race,
Than low-born men adorned with learning's grace.


The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.



maeRpiRandhaa Raayinum kallaadhaar keezhppiRandhum
katraar anaiththilar paadu

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.



விலங்குகளுடன் மக்கள் இருப்பதைப் போன்றது இலக்கை விளக்கும் நூல்களை கற்றவருடன் மற்றவர்கள்.



அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.



விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிறந்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர் அவ்வளவு வேறுபட்டவர்.



மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு.


Learning's irradiating grace who gain,
Others excel, as men the bestial train.


As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works.



vilangotu makkaL anaiyar ilangunhool
katraaroadu Enai yavar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பல நூல்களை படிக்காமல் அரங்கம் ஏறுவது கட்டம் இல்லாமல் பகடை ஆடுவது போன்றது. படிக்காதவன் பேச முனைவது முலையில்லா பெண் காமுறுவதைப் போன்றது. எனவே கல்லாதவரின் சொல்லை கேட்க வேண்டாம் அது சோர்வை தரும், வறுமை தரும் துன்பத்தை விட அதிக துன்பம் தரும். சமூக ஏற்றத்தாழ்வு ஒழிக்கும் ஆற்றல் கல்விக்கு உண்டு. கல்லாதவர் உயர்குலப் பிறப்பு என்றாலும் அவர் தாழ்ந்தவரே. கல்லாதவர் விலங்குகளுக்கு ஒப்பானவர்களே.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.