திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: பொச்சாவாமை / Unforgetfulness

இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.



அழிந்துவிடும் வெகுளியைவிடத் தீமையானது சிறந்த உவகையால் கிடைக்கும் மகிழ்ச்சியின் பொருட்டு சோர்ந்து செயல்கள் சரிவர செய்யாதது.



பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.



மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.



அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது.


'Tis greater ill, it rapture of o'erweening gladness to the soul
Bring self-forgetfulness than if transcendent wrath control.


More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy.



iRandha vekuLiyin theedhae siRandha
uvakai makizhchchiyiR soarvu

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.



மறதி புகழை அழிக்கும், அறிவு சார்ந்த செயலை தொடரும் துன்பம் அழிப்பதைப் போன்று.



நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.



நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும்.



நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்.


Perpetual, poverty is death to wisdom of the wise;
When man forgets himself his glory dies!.


Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge.



pochchaappuk kollum pukazhai aRivinai
nichcha nirappukkon Raangu

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.



மறதி உள்ளவருக்கு புகழ் இல்லை, அது உலகத்தின் அனைத்து துறை எழுத்தாளர்களின் முடிவு.



மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.



மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும்.



மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.


'To self-oblivious men no praise'; this rule
Decisive wisdom sums of every school.


Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.



pochchaappaark killai pukazhmai adhu-ulakaththu
eppaalnhoo loarkkum thuNivu

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.



அச்சம் உள்ளவருக்கு பாதுகாப்பு அரண் இல்லை அதுபோலவே இல்லை மறதி உள்ளவருக்கு நன்மை. * உலகமே பாதுக்காப்பு அரணாக நினைப்பவர் அச்சம் தவிர்க்கிறார், நினைவாற்றால் உள்ளவர் நன்மை அடைகிறார்.*



உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.



மனத்துள் பயம் உள்ளவர்க்கு எத்தகைய பாதுகாப்பாலும் பயன் இல்லை. அதுபோலவே மறதி உடையவர்க்கும் பாதுகாப்பால் பயன் இல்லை.



பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை. அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனுமில்லை.


'To cowards is no fort's defence'; e'en so
The self-oblivious men no blessing know.


Just as the coward has no defence (by whatever fortifications ha may be surrounded), so the thoughtless has no good (whatever advantages he may possess).



achcha mudaiyaarkku araNillai aangillai
pochchaap pudaiyaarkku nanku

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.



முன்னமே ஆய்ந்து காக்க வேண்டியதைக் காக்காமல் செயல்பட்டவருக்கு தனது பிழையால் எதிர்க்காலம் ஏற்றம் அற்றதாய் அமையும்.



வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.



துன்பங்கள் வரும் முன்பே அவற்றைத் தடுக்காமல் மறந்திருந்தவன், பின் அவை வந்தபோது தடுக்க முடியாமல் தன் பிழையை எண்ணி வருந்துவான்.



முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்.


To him who nought foresees, recks not of anything,
The after woe shall sure repentance bring.


The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault.



munnuRak kaavaadhu izhukkiyaan thanpizhai
pinnooRu iRangi vidum

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.



நினைவை இழக்காமை யார் இடத்தில் என்றும் வழுக்காமல் இருக்கிறதோ அதற்க்கு ஒப்பானது இல்லை.



யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.



எவரிடத்திலேனும் எப்போதும் விடாமல் மறதி இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப் போன்ற நன்மை வேறு இல்லை.



ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது.


Towards all unswerving, ever watchfulness of soul retain,
Where this is found there is no greater gain.


There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; and towards all persons.



izhukkaamai yaarmaattum endrum vazhukkaamai
vaayin adhuvoppadhu il

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.



முடியாத செயல் என்று எதுவும் இல்லை மறதியற்ற நிலை என்ற கருவியை போற்றி செயல்பட்டால்.



மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.



மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.



மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.


Though things are arduous deemed, there's nought may not be won,
When work with mind's unslumbering energy and thought is done.


There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour.



ariya-endru aakaadha illaipoch saavaak
karuviyaal poatrich seyin

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.



சிறப்பானவற்றை விரும்பிச் செய்திட வேண்டும் மறுத்து ஏளனம் செய்தவருக்கு அடுத்தது உயர்வு இல்லை.



சான்றோர் புகழ்ந்து சொல்லியச் செயல்களைப் போற்றிச் செய்யவேண்டும், அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழுப் பிறப்பிலும் நன்மை இல்லை.



உயர்ந்தோர் புகழ்ந்து சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்க மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.



புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும். அப்படிச் செய்யாமல் புறக்கணிக்கப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை.


Let things that merit praise thy watchful soul employ;
Who these despise attain through sevenfold births no joy.


Let (a man) observe and do these things which have been praised (by the wise); if he neglects and fails to perform them, for him there will be no (happiness) throughout the seven births.



pukazhndhavai poatrich seyalveNdum seyyaadhu
ikazhndhaarkku ezhumaiyum il

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.



அவமதித்து அழிந்தவரை எண்ணிக்கொள்ள வேண்டும் நாம் நமது மகிழ்வால் மறதி அடையும் பொழுது.



தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும்.



தம் மகிழ்ச்சியில் மனவலிமை பெறும்பொழுது எல்லாம் முற்காலத்தில் மகிழ்ச்சியால் மறதி கொண்டு அழிந்தவர்களை நினைவிற் கொள்க.



மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.


Think on the men whom scornful mind hath brought to nought,
When exultation overwhelms thy wildered thought.


Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy.



ikazhchchiyin kettaarai uLLuka thaandham
makizhchchiyin maindhuRum poazhdhu

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.



எண்ணியதை அடைவது எளிது அதற்க்கு நாம் எண்ணியதை எண்ணியபடியே இருக்கச் செய்யவேண்டும்.



ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.



நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது.



கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்.


'Tis easy what thou hast in mind to gain,
If what thou hast in mind thy mind retain.


It is easy for (one) to obtain whatever he may think of, if he can again think of it.



uLLiyadhu eydhal eLidhuman matrundhaan
uLLiyadhu uLLap peRin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வெற்றியின் பெருமிதம் தரும் மறதி கோபத்தின் விளைவைவிட மோசமானதாக இருக்கும். மறதியற்ற தன்மையே அரன் போல் நம்மை காக்கும். இகழ்ந்து பேசி கேட்டவர்கள் உண்டு என்பதை மறக்க வேண்டாம். நினைத்தபடி அடைவது எளிது நினைத்தபடியை நினைவு கூறும் ஆற்றல் இருந்தால்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.