திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: நல்குரவு / Poverty

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.



இல்லாமையைவிட துன்பமானது என்ன என்றால் இல்லாமையில் இல்லாமையே துன்பமானது. (வறுமையை விட கொடியது வறுமையே).



வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.



இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.



வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.


You ask what sharper pain than poverty is known;
Nothing pains more than poverty, save poverty alone.


There is nothing that afflicts (one) like poverty.



inmaiyin innaadhadhu yaadhenin inmaiyin
inmaiyae innaa thadhu

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.



இல்லாமை என்ற ஒரு பாவி வருங்காலம் நிகழ்காலம் என்ற பேதமின்றி வரும்.



வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.



இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.



பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது.


Malefactor matchless! poverty destroys
This world's and the next world's joys.


When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss).



inmai enavoru paavi maRumaiyum
immaiyum indri varum

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.



சேர்த்து வைத்தப் பொருளும் திடமான ஆற்றலும் அழியும் இல்லாமை எற்படுத்தும் நல்குரவு என்ற நசை மொத்தமாக வந்தால்.



வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்.



இல்லாமை என்று சொல்லப்படும் மன ஆசை எவரிடம் இருக்கிறதோ, அவரின் பழம் குடும்பப் பெருமையையும் சிறந்த பாராட்டுக்களையும் அது மொத்தமாக அழித்து விடும்.



ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்.


Importunate desire, which poverty men name,
Destroys both old descent and goodly fame.


Hankering poverty destroys at once the greatness of (one's) ancient descent and (the dignity of one's) speech.



tholvaravum thoalum kedukkum thokaiyaaka
nalkuravu ennum nasai

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.



நிகரற்ற குடும்பத்தில் பிறந்தவரிடத்திலும் இல்லாமை வந்தால் வேதனையான வார்த்தையும் சோர்வும் உண்டாகும்.



வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.



நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான சொற்களைச் சொல்லும் தளர்ச்சியை உண்டாக்கி விடும்.



இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்.


From penury will spring, 'mid even those of noble race,
Oblivion that gives birth to words that bring disgrace.


Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words.



iRpiRandhaar kaNNaeyum inmai iLivandha
soRpiRaakkum soarvu tharum

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.



இல்லாமை என்ற வேதனையுள் பல வகைக் குறைபாடுகள் கொண்ட துன்பங்கள் கூடி விடும்.



வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.



இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும்.



வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்.


From poverty, that grievous woe,
Attendant sorrows plenteous grow.


The misery of poverty brings in its train many (more) miseries.



nalkuravu ennum idumpaiyuL palkuraith
thunpangaL sendru padum

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.



நல்லனவற்றை தெளிவாக பொருள்படும்படி நன்றாக உணர்ந்து சொன்னாலும் இல்லாமையில் இருப்பவர் சொல்லும் பொழுது அப்பொருள் முழுமை பெறாது.



நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.



நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.



அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்.


Though deepest sense, well understood, the poor man's words convey,
Their sense from memory of mankind will fade away.


The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression.



Narporul Nankunarndhu Sollinum Nalkoorndhaar
Sorporul Sorvu Patum

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.



அறமற்ற இல்லாமை அடைந்து விட்டால் ஈன்ற தாய் கூட அந்நியனாக பார்ப்பாள்.



அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.



நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.



வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்.


From indigence devoid of virtue's grace,
The mother e'en that bare, estranged, will turn her face.


He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother.



aRanjaaraa nalkuravu eendradhaa yaanum
piRanpoala noakkap padum

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.



இன்றும் வருமோ அந்தக் கொடுமை ? நெற்றுவரை கொலை செய்வதுப் போல் இருந்த வறுமை. (வறுமை வராதபடி வாழ்).



நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).



நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?.



கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.


And will it come today as yesterday,
The grief of want that eats my soul away?.


Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?.



indrum varuvadhu kolloa nerunhalum
kondradhu poalum nirappu

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.



நெருப்பில் தூங்குவது சாத்தியப்படலாம் நிறைவற்ற நிலையில் எவ்வகையிலும் கண்ணுறக்கம் கொள்வது கடினம்.



ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.



யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.



நெருப்புக்குள் படுத்துக் தூங்குவது கூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்.


Amid the flames sleep may men's eyelids close,
In poverty the eye knows no repose.


One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty.



neruppinuL thunjalum aagum nirappinuL
yaadhondrum kaNpaadu aridhu

துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.



தூய்மையை உரிமையாக பற்றாதவர்கள் முழுமையாக துறக்காமல் இருப்பதால் உப்புக்கும் காடிக்கும் எமனாகிவிடுகிறார்கள்.



நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.



உண்ண, உடுத்த ஏதம் இல்லாதவர் இல்லறத்தை முழுமையாகத் துறந்து விடாதிருப்பது, பிறர் வீட்டில் இருக்கும் உப்புக்கும் கஞ்சித் தண்ணீருக்கும் எமனாம்.



ஒழுங்குமறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத் துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு.


Unless the destitute will utterly themselves deny,
They cause their neighbour's salt and vinegar to die.


The destitute poor, who do not renounce their bodies, only consume their neighbour's salt and water.



thuppura villaar thuvarath thuRavaamai
uppiRkum kaatikkum kootru


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வறுமையை விட கொடியது வறுமையே இது இன்று நாளை என எப்பொழுதும் வரும் வந்தால் சேர்த்த பொருளும் திட சிந்தனையும் கெடும். நற்குடியில் பிறந்தவரும் தன்நிலை இழக்கச் செய்யும் நல்குரவு வந்தால் தாயும் அந்நியமாக போவாள். நெருப்பிலும் தூங்கலாம் வறுமையில் சாத்தியம் இல்லை எனஙே நல்குரவு வராதபடி காக்கவேண்டும். தூய்மையற்ற துறவி உப்புக்கும் காடிக்கும் வழியின்றியே துறவை மேற்கொள்கிறான்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.