திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: புலவி / Pouting

புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.



தழுவாமல் இரு அவர் உடலை அவர் அடையும் துன்ப நோய் காணலாம் சிறிது.



( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.



நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்.



ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக.


Be still reserved, decline his profferred love;
A little while his sore distress we 'll prove.


Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not.



pullaa thiraaap pulaththai avar-urum
allalnoai kaankam siridhu

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.



உப்பைப் போல் பயன்படுத்த வேண்டும் பிணகுதலை அது சிறிதளவும் நீள விடக்கூடாது.



உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.



உணவின் அளவிற்கு ஏற்ப உப்பின் அளவு அமைவதை போல், கலவி இன்பத்திற்கு வேண்டும் அளவிற்கு ஏற்ப ஊடல் அமையட்டும்; அதை அளவு கடந்து கொஞ்சம் நீட்டினாலும், உப்பின் அளவைக் கூட்டுவது போல் ஆகும்.



ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல் ஓரளவுடன் இருக்க வேண்டும். அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும்.


A cool reserve is like the salt that seasons well the mess,
Too long maintained, 'tis like the salt's excess.


A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much.



uppamain thatraal pulavi adhusiridhu
mikkatraal neela vidal

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.



பிரிந்து இருந்தவரை வேதனை நோய் பற்றச் செய்வது தம்மை கூடியவரை கூடவிடாமல் செய்வது.



தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது.



தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக் கூடாமல் போவது, ஏற்கனவே துன்பப்பட்டவர்களுக்கு மேலும் அதிகத் துன்பத்தைக் கொடுத்தது போலாம்.



ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும்.


'Tis heaping griefs on those whose hearts are grieved;
To leave the grieving one without a fond embrace.


For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony.



alandhaarai allalnoai seydhatraal thammaip
pulandhaaraip pullaa vidal

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.



சிறுபிணக்கு கொண்டவரை உணராமல் இருப்பது வாடிய கொடியை வேருடன் அறுப்பது போன்றது.



பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.



தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.



ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்.


To use no kind conciliating art when lover grieves,
Is cutting out the root of tender winding plant that droops.


Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root.



ooti yavarai unaraamai vaatiya
valli mudhalarin thatru

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.



நலமானதை அணிகலன்களாக கொண்ட நல்லவர்க்கு மதிப்பானது பூ போன்ற கண்களை உடையவளின் அகத்தே ஊடல் கொள்வது.



நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்.



நல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு அழகு தருவது, பூப்போன்ற கண்ணை உடைய மனைவியின் மனத்தே நடக்கும் ஊடலின் மிகுதியே.



மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும்.


The Even to men of good and worthy mind, the petulance
Of wives with flowery eyes lacks not a lovely grace.


An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands.



nalaththakai nallavarkku aeer pulaththakai
pooanna kannaar akaththu

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.



துன்பமும் சிறு பிணக்கும் இல்லாதகாமம் பழமும் காயும் இல்லாமல் வளமற்றதாகி விடும்.



பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.



வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும் இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும் போல் ஆகிவிடும்.



பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்.


Love without hatred is ripened fruit;
Without some lesser strife, fruit immature.


Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit.



thuniyum pulaviyum illaayin kaamam
kaniyum karukkaayum atru

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.



சிறு பிணக்கால் துன்பம் உண்டு என்றால் அது கூடி மகழும் காலத்தை குறைத்து விடுமோ என்பதே.



கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.



இனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு.



கூடி மயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு.


A lovers' quarrel brings its pain, when mind afraid
Asks doubtful, 'Will reunion sweet be long delayed?'.


The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike.



oodalin untaangoar thunpam punarvadhu
needuva thandrukol endru

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.



வருத்தம் யாரால் உண்டானது என்று வருந்திட அறியா காதலரை மாற்றிட இல்லை வழி.



நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?.



இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன பயன்?.



நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்?.


What good can grieving do, when none who love
Are there to know the grief thy soul endures?.


What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?.



noadhal evanmatru nondhaarendru aqdhariyum
kaadhalar illaa vazhi

நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.



நீரும் நிழல் படும் இடத்தில் இனிதாக இருக்கும் .சிறு பிணக்கும் விருப்பமானவர் என்றால் இனிதாக இருக்கும்.



நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.



நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.



நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்.


Water is pleasant in the cooling shade;
So coolness for a time with those we love.


Like water in the shade, dislike is delicious only in those who love.



neerum nizhaladhu inidhae pulaviyum
veezhunar kannae inidhu

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.



ஊடலை மாற்றி கூட முயலாதவருடன் என்நெஞ்சம் கூடிடுவோம் என்பது அதன் அளவற்ற ஆசையே.



ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.



ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் ஆசையே.



ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்.


Of her who leaves me thus in variance languishing,
To think within my heart with love is fond desire.


It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike.



oodal unanga viduvaaroadu en-nenjam
kooduvaem enpadhu avaa


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

புணராது இருந்து அதன் வேதனை அறியலாம் சிறிது. உப்பு போல் அளவாக அனுமதிக்கலாம் பிணக்கை. பிணக்கு அளவுக்கு அதிகமானால் புணர்தல் நிகழாது. ஊடலை உணராமல் இருந்தால் வேறுடன் பிடிக்கிய செடி போல் ஆகிவிடும். அடுத்தவர் நலத்தை விரும்பும் மலர்ந்த கண் உடையவர் ஊடலை அகத்தே மட்டுமே வெளிப்பட்டு மறையும். பிரிவும் ஊடலும் இல்லாத காமம் காயும் கனியும் இல்லாததைப் போன்றது. ஊடலுக்கு தடுப்பாக அமைவது கூடுவது குறையும் என்ற நினைப்பு. வருத்தமடைய யார் காரணம் என்று அறியாம காதலரை மாற்றும் வழி இல்லை. நிழலில் இருக்கும் நீர் போல் விருப்பமானவர்களின் பிணக்கும் இருக்கும். ஊடலை மாற்ற அறியாதவரை கூடி மகிழ்வோம் என்பது அளவற்ற என் ஆசை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.