திருவள்ளுவரின் திருக்குறள்

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.



அன்பினால் விரும்பி நாடமல் பொருளுக்காய் நாட்டம் கொள்ளும் ஆய்தொடியாரின் (விலைமாதரின்) இனிய சொற்கள் இழிவைத்தரும்.



அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்கு துன்பத்தைக் கொடுக்கும்.



அன்பால் நம்மை விரும்பாது, பொருள் பெறவே விரும்பும் பாலியல் தொழிலாளரின் இனிய சொற்கள் துன்பமே தரும்.



அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்.


Those that choice armlets wear who seek not thee with love,
But seek thy wealth, their pleasant words will ruin prove.


The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrow.



anpin vizhaiyaar poruLvizhaiyum aaidhotiyaar
insol izhukkuth tharum

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.



பயனை அறிந்து அதற்கேற்றார் போல் பழகும் பண்புடைய பண்பில்லா பெண்களை மேன்மை அறிந்து உறவாடமல் தவிர்க்க வேண்டும்.



கிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.



ஒருவனிடம் உள்ள செல்வத்தை அடையும்வரை நல்லவராய்ப் பேசும், பண்பு இல்லாத பாலியல் தொழிலாளரின் ஒழுக்கத்தை நன்கு எண்ணி, அவரைச் சேராது விடுக.



ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு பாகுமொழிபேசும் பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது.


Who weigh the gain, and utter virtuous words with vicious heart,
Weighing such women's worth, from their society depart.


One must ascertain the character of the ill-natured women who after ascertaining the wealth (of a man) speak (as if they were) good natured-ones, and avoid intercourse (with them).



payan-dhookkip paNpuraikkum paNpin makaLir
nayan-thookki naLLaa vidal

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று.



பணத்தையே குறிக்கொளாக கொண்ட பெண்களிடம் பொய்யாக உறவுக் கொள்வது எந்த உணர்வும் இல்லாத பிணத்தை தழுவுதல் போன்றது.



பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.



பொருளையே விரும்பும் பாலியல் தொழிலாளரின் போலித் தழுவல், இருட்டு அறையில் முன்பு அழியாத பிணத்தைத் தழுவுவது போலாம்.



விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும்.


As one in darkened room, some stranger corpse inarms,
Is he who seeks delight in mercenary women's charms!.


The false embraces of wealth-loving women are like (hired men) embracing a strange corpse in a dark room.



porutpeNtir poimmai muyakkam iruttaRaiyil
Edhil piNandhazheei atru

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.



பொருளை மட்டுமே பொருளாக கொள்பவரின் புலன்களை விரும்பமட்டார்கள் அருளாள் வரும் பொருளை தேர்ந்தெடுக்கும் அறிவுள்ளவர்கள்.



பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார்.



அருளோடுகூடப் பொருள்தேடும் அறிவினை உடையவர், வெறும் பொருளையே தேடும் பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.



அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள்.


Their worthless charms, whose only weal is wealth of gain,
From touch of these the wise, who seek the wealth of grace, abstain.


The wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth (and not pleasure) as (their) riches.



porutporuLaar punnalanh thoayaar arutporuL
aayum aRivi navar

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.



பொதுநலத்தாரின் புலன் இன்பத்தை விரும்பமாட்டார்கள் மனதின் நலத்தால் நல்லறிவு பெற்றவர்கள்.



இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.



இயல்பாகிய மதிநலத்தால் சிறந்த அறிவினை உடையவர், பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.



இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள் பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்.


From contact with their worthless charms, whose charms to all are free,
The men with sense of good and lofty wisdom blest will flee.


Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trffling delights of those whose favours are common (to all).



podhunhalaththaar punnalam thoayaar madhinhalaththin
maaNda aRivi navar

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.



தனது நலத்தை கவனித்து வாழ்பவர் நாடமாட்டார்கள் இடம் பார்த்து புலன் நலத்தை பறிப்பவர் தோள்.



அழகு முதலியவற்றால் செருக்கு கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொது மகளிரின் தோளை, தம் நல்லோழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.



தம் திறமையில் செருக்குக் கொண்டு, தம் உடல் அழகைப் பலருக்கும் தந்து பணம் பெற விரும்பும் பாலிய தொழிலாளரின் தோளை, அறிவினால் தம் புகழைப் பரப்ப விரும்பும் பெரியோர் தீண்டமாட்டார்.



புகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார்.


From touch of those who worthless charms, with wanton arts, display,
The men who would their own true good maintain will turn away.


Those who would spread (the fame of) their own goodness will not desire the shoulders of those who rejoice in their accomplishments and bestow their despicable favours (on all who pay).



thanhnhalam paarippaar thoayaar thakaiserukkip
punnalam paarippaar thoaL

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.



நிறைவான மனம் இல்லாதவரே நாடுவார் அடுத்தவர் மனதை கவனித்து புணர்பவர் தோள்.



நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர்.



பிறவற்றைப் பெறும் பொருட்டு மன ஆசை கொண்டு, அதற்காகவே உடம்பால் புணரும் பாலியல் தொழிலாளரின் தோளை மன அடக்கம் இல்லாதவரே தீண்டுவர்.



உள்ளத்தில் அன்பு இல்லாமல் தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும் நம்பிக் கிடப்பர்.


Who cherish alien thoughts while folding in their feigned embrace,
These none approach save those devoid of virtue's grace.


Those who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those who embrace (them) while their hearts covet other things.



niRainhenjam illavar thoaivaar piRanhenjiR
paeNip puNarpavar thoaL

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.



சீர்தூக்கி ஆராயும் அறிவற்றவர்களே தெய்வீகம் என்பார்கள் போலியான மகளிரின் உடல்உறவை.



வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.



வஞ்சிப்பதில் வல்ல பாலியல் தொழிலாளரின் தழுவலை, வஞ்சனையைக் கண்டு அறியும் அறிவற்றவர், காமம் ஊட்டி உயிர் கவரும் தெய்வத்தின் தாக்குதல் என்பர்.



வஞ்சக எண்ணங்கொண்ட பொதுமகள் ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட மோகினி மயக்கம் என்று கூறுவார்கள்.


As demoness who lures to ruin woman's treacherous love
To men devoid of wisdom's searching power will prove.


The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are (as ruinous as those of) the celestail female.



aayum aRivinar allaarkku aNangenpa
maaya makaLir muyakku

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.



வரைமுறை இல்லாத பட்டுப் போன்ற மகளிரின் மென்தோள் குற்றம் எது? என்று அறியாத புரிதல் அற்றவர்கள் முழ்கும் நரகம்.



ஒழுக்க வரையரை இல்லாத பொது மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.



வேறுபாடு கருதாது பொருள் தருவார் எவரையும் தழுவும் பாலியல் தொழிலாளரின் மெல்லிய தோள்கள், அறிவற்ற கீழ்மக்கள் புகுந்து மூழ்கும் நரகம் ஆகும்.



விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் நரகம் எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை.


The wanton's tender arm, with gleaming jewels decked,
Is hell, where sink degraded souls of men abject.


The delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant base



varaivilaa maaNizhaiyaar men-dhoaL puraiyilaap
pooriyarkaL aazhum aLaru

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.



இருமனம் என்ற அலைபாயும் மனம் கொண்ட பெண்கள், கள், சூதாட்டம் என அடிமைபட்ட திரு நீக்கப்பட்டவர்கள் தொடர்புக் கொள்வர்.



இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.



உள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பாலிய் தொழிலாளர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும்.



இருமனம் கொண்ட பொதுமகளிருடனும், மதுவுடனும், சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரைவிட்டு வாழ்வில் அமைய வேண்டிய சிறப்பு அகன்றுவிடும்.


Women of double minds, strong drink, and dice; to these giv'n o'er,
Are those on whom the light of Fortune shines no more.


Treacherous women, liquor, and gambling are the associates of such as have forsaken by Fortune.



irumanap peNtirum kaLLum kavaRum
thirunheekkap pattaar thotarpu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அன்புக்கு இணங்காமல் பொருளுக்கு இணங்கும் பெண்களின் ஆசை வார்த்தை அவமானத்தை தேடித்தரும். பிணத்துடன் உறவாடுவது போன்றது அவர்களுடன் உறவாடுவது. நல்லறிவு பெற்றவர்கள் பொதுமகளிரை நாடுவது இல்லை. வரைமுறை அற்ற பெண்கள் அறிவற்றவற்றவர்கள் மூழ்கும் நரகம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.