திருவள்ளுவரின் திருக்குறள்

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.



பகை என்ற பண்பில்லாததை ஒருவர் விளையாட்டாகவும் விரும்பக் கூடாது.



பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.



பகை எனப்படும் பண்பற்ற ஒன்று, விளையாட்டிலும் கூட் விரும்பத்தக்கது அன்று.



பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக்கூடாது.


For Hate, that ill-conditioned thing not e'en in jest.
Let any evil longing rule your breast.


The evil of hatred is not of a nature to be desired by one even in sport.



pakaiennum paNpi ladhanai oruvan
nakaiyaeyum vaendaRpaatru andru

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.



கொலைக் கருவி கொண்டு வாழ்பவரை பகைத்துக் கொண்டாலும், சொல் கொண்டு வாழ்பவரை பகைக்க வேண்டாம்.



வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது.



வில்லை ஆயுதமாகக் கொண்ட வீரரோடு பகை கொண்டாலும், சொல்லை ஆயுதமாகக் கொண்ட எழுத்தாளரோடு பகை கொள்ள வேண்டா.



படைக்கலன்களை உடைய வீரர்களிடம் கூடப் பகை கொள்ளலாம். ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை கொள்ளக் கூடாது.


Although you hate incur of those whose ploughs are bows,
Make not the men whose ploughs are words your foes!.


Though you may incur the hatred of warriors whose ploughs are bows, incur not that of ministers whose ploughs are words.



villaer uzhavar pakaikoLinum koLLaRka
sollaer uzhavar pagai

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.



தனி மனிதனாய் பலரைப் பகைத்துக் கொள்பவர் இகழ்வானவர்களை விட ஏழை.



தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.



தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன்.



தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்.


Than men of mind diseased, a wretch more utterly forlorn,
Is he who stands alone, object of many foeman's scorn.


He who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men.



EmuR Ravarinum Ezhai thamiyanaaip
pallaar pakaikoL pavan

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.



பகைவரையும் நட்பாக கொண்டு பழகும் பண்புடையாளரின் மதிப்பு மிகுந்த செயலால் உலகம் நிலைக்கிறது.



பகையையும் நட்பாக செய்து கொண்டு நடக்கும், பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.



பகையையும் நட்பாக மாற்றி, அவருடன் இணைந்து வாழும் குணம் உடைய ஆட்சியாளரின் பெருமைக்குள் இவ்வுலகம் அடங்கும்.



பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும்.


The world secure on his dexterity depends,
Whose worthy rule can change his foes to friends.


The world abides in the greatness of that good-natured man who behaves so as to turn hatred into friendship.



pakainhatpaak koNtozhukum paNpudai yaaLan
thakaimaikkaN thangitru ulaku

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.



தனக்கு துணை இல்லாமல் பகை கொண்டவர்கள் இரண்டாக இருந்தால் அதில் ஒன்றை இனிய துணையாக ஏற்கவேண்டும்.



தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.



தமக்கோ உதவும் நண்பர் இல்லை; தம்மைப் பகைப்பவரோ இருவர்; அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும் இருவருள் ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க.



தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.


Without ally, who fights with twofold enemy o'ermatched,
Must render one of these a friend attached.


He who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help (to himself).



than-thuNai indraal pakaiyiraNdaal thaanoruvan
in-thuNaiyaak koLkavatrin ondru

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.



தெளிந்த அறிவு பெற்றாலும் தெளிந்த அறிவு பெறாவிட்டாலும் அழிவு ஏற்படும் காலத்தில் தெளியாதவனை நெருங்காமல் விட வேண்டும்.



இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும்.



ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக.



பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகை கொண்டு இருப்பதே நலமாகும்.


Whether you trust or not, in time of sore distress,
Questions of diff'rence or agreement cease to press.


Though (one's foe is) aware or not of one's misfortune one should act so as neither to join nor separate (from him).



ThaeRinum thaeRaa vitinum azhivin-kaN
thaeRaan pakaaan vidal

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.



வருந்த வேண்டாம் வருந்தம் என்ன என்று அறியாதவர்களை நினைத்து. விரும்ப வேண்டாம் பகைவர்களின் மென்மையான இடத்தை.



துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது.



நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா.



தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது. தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது.


To those who know them not, complain not of your woes;
Nor to your foeman's eyes infirmities disclose.


Relate not your suffering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes.



noavaRka nondhadhu aRiyaarkku maevaRka
menmai pakaivar agaththu

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.



எப்படி என்ற வகை அறிந்து, தகுதிகளை அறிந்து, தன்னை காக்க அறிந்தால், அழியும் பகைவருக்கு ஏற்பட்ட கர்வம்.



செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்.



ஒரு செ‌யலைச் செய்ய வேண்டிய முறையை அறிந்து, நம்மைப் பலப்படுத்துவதுடன் ரகசியங்களையும் நாம் காத்துக் கொண்டால், பகைவர் தங்கள் மனத்துள் நம்மை எதிர்க்க எண்ணிய ‌செருக்கு அழியும்.



வழிவகை உணர்ந்து, தன்னையும் வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம் தானாகவே ஒடுங்கி விடும்.


Know thou the way, then do thy part, thyself defend;
Thus shall the pride of those that hate thee have an end.


The joy of one's foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistance.



vakaiyaRindhu thaRseydhu thaRkaappa maayum
pakaivarkaN patta serukku

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.



இளசாக இருக்கும் முள் மரத்தை அழிக்க வேண்டும், தவறினால் தேவையற்றதை விலக்கும் பொழுது இயலாது போகும். (பகையை வளரவிடக்கூடாது.)



முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும்.



நம்மை அழி்க்க எண்ணும் முள் மரத்தை அது வளரும்போதே அழி்த்து விடுக; வளர்ந்து விட்டால் அழிக்க எண்ணுபவரின் கையை அது அழிக்கும்.



முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது போல, பகையையும், அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திட வேண்டும்.


Destroy the thorn, while tender point can work thee no offence;
Matured by time, 'twill pierce the hand that plucks it thence.


A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller.



iLaidhaaka muLmaram kolka kaLaiyunhar
kaikollum kaazhththa idaththu

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.



உயிரோடு இருப்பவர் எல்லாம் உண்மையாக வாழ்பவர் இல்லை வெளிப்படையாக குற்றம் செய்பவரின் பெருமையை அழிக்கவில்லை என்றால்



பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.



நம்மைப் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர், மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்பவர்.



பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கிற காரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாது.


But breathe upon them, and they surely die,
Who fail to tame the pride of angry enemy.


Those who do not destroy the pride of those who hate (them) will certainly not exist even to breathe.



uyirppa uLarallar mandra seyirppavar
semmal sidhaikkalaa thaar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பண்பற்ற பகை விரும்ப வேண்டாம். கொலைக் கருவி கொண்டவனின் பகைவிட சொல் கொண்டவன் பகை வலிமையானது. எல்லாரையும் பகைத்துக் கொள்பவனே ஏழை. பகைவரை நட்பாக கருதும் பண்பே முதன்மையானது. தெளிவற்றவன் நட்பு நல்லதல்ல. தன்னை காத்துக் கொள்ளவதும் பகையுணர்வை வளரவிடாமல் அழிப்பதும் அவசியமானது. குற்றம் செய்பவரின் செறுக்கை அழிக்காதவர் உண்மையாக வாழ்பவர் இல்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.