திருவள்ளுவரின் திருக்குறள்

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.



நிலைத்த பொருளாக இல்லாததை யெல்லாம் நிலைக்கும் பொருள் என்று உணர்வது மாறுபாடுடைய சிறப்பற்ற பிறப்பு.



மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.



பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.



நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.


Of things devoid of truth as real things men deem;-
Cause of degraded birth the fond delusive dream!.


Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real.



poruLalla vatraip poruLendru uNarum
maruLaanaam maaNaap piRappu

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.



இருள் நீக்கப்பட்டு இன்பம் பயனாக அமையும் மாறும் தன்மையுள்ள யாவற்றையும் நீக்கி மாசற்றதை காட்சியாக கண்டவருக்கு.



மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.



மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்.



மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும்.


Darkness departs, and rapture springs to men who see,
The mystic vision pure, from all delusion free.


A clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven).



iruLnheengi inpam payakkum maruLnheengi
maasaRu kaatchi yavarkku

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.



சந்தேகம் அற்று தீர்க்கமாக அறிந்தவருக்கு பூமியிலும் வானம் நெருக்கம் கொண்டது.



ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.



சந்தேகத்திலிருந்து விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட, விரும்பும் வான உலகம் மிக அருகில் இருப்பதாகும்.



ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்.


When doubts disperse, and mists of error roll
Away, nearer is heav'n than earth to sage's soul.


Heaven is nearer than earth to those men of purified minds who are freed from from doubt.



aiyaththin neengith theLindhaarkku vaiyaththin
vaanam naNiya thudaiththu

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.



மெய்யுணர்வு இல்லாத மனிதர்களுக்கு சந்தேக உணர்வு கொண்ட கண்களால் பயன் இல்லை



மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.



மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.



உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.


Five-fold perception gained, what benefits accrue
To them whose spirits lack perception of the true?.


Even those who have all the knowledge which can be attained by the five senses, will derive no benefit from it, if they are without a knowledge of the true nature of things.



aiyuNarvu eydhiyak kaNNum payamindrae
meyyuNarvu illaa thavarkku

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.



எந்த பொருள் எந்த தன்மையுடையாதாக இருப்பினும் அந்த பொருளின் உண்மைத்தன்மையை அறிந்துக் கொள்வதே அறிவு.



எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும்.



எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.



வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்.


Whatever thing, of whatsoever kind it be,
'Tis wisdom's part in each the very thing to see.


(True) knowledge is the perception concerning every thing of whatever kind, that that thing is the true thing.



epporuL eththanmaith thaayinum apporuL
meypporuL kaaNpadhu aRivu

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.



கற்று இங்கே மெய்ப்பொருளைக் கண்டவர் முன்னேறுவர் மறந்தும் இங்கே வாராத வழியில்.



கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.



பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.



துறவற வாழ்வுக்குத் தகுதியுடையவராகச் செய்திடும் அனைத்தையும் கற்று, உண்மைப் பொருள் உணர்ந்து அதன்படி ஒழுகுபவர், மீண்டும் இல்லற வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள்.


Who learn, and here the knowledge of the true obtain,
Shall find the path that hither cometh not again.


They, who in this birth have learned to know the True Being, enter the road which returns not into this world.



katreeNdu meypporuL kaNdaar thalaippatuvar
matreeNdu vaaraa neRi

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.



உள்ளாத்தால் ஆராய்ந்து உள்ளதை உணர்ந்தால் ஒருபக்கமாய் பிளவுப் பட்டுள்ள பிறப்பு தேவைப்படாது.



ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.



பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் ‌திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.



உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள்.


The mind that knows with certitude what is, and ponders well,
Its thoughts on birth again to other life need not to dwell.


Let it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught) has known the True Being.



OrththuLLam uLLadhu uNarin orudhalaiyaap
paerththuLLa vaeNdaa piRappu

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.



பிறப்பு என்ற அறியாமை விலகிட சிறப்பு என்ற செழுமையான (உபதேசம்) பொருள் காண்பதே அறிவு.



பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.



பிறவி என்னும் அறியாமையிலிருந்து விலகப் பிறவாமை என்னும் செவ்விய பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.



அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்.


When folly, cause of births, departs; and soul can view
The truth of things, man's dignity- 'tis wisdom true.


True knowledge consists in the removal of ignorance; which is (the cause of) births, and the perception of the True Being who is (the bestower of) heaven.



piRappennum paedhaimai neengach siRappennum
semporuL kaaNpadhu aRivu

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.



சார்ந்து இருப்பதை உணர்ந்து சார்ந்து இல்லாதவாறு வாழ்ந்தால் மற்றவை அழிந்து சார்ந்து இருப்பதை தராது சார்ந்து இருக்கச் செய்யும் நோய்.



எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.



எல்லாப் பொருள்களுக்கும் இடமாகிய மெய்ப்பொருளை உணர்ந்து பற்றின்றி வாழ்ந்தால், பற்ற வரும் துன்பங்கள் ஒழுக்க உணர்வை அழி்த்துப் பற்ற மாட்டா.



துன்பங்கள் நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால், அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ள பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும்.


The true 'support' who knows- rejects 'supports' he sought before-
Sorrow that clings all destroys, shall cling to him no more.


He who so lives as to know Him who is the support of all things and abandon all desire, will be freed from the evils which would otherwise cleave to him and destroy (his efforts after absorption).



saarpuNarndhu saarpu kedaozhukin matrazhiththuch
saardharaa saardharu noai

காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.



ஆசைப்படுதல், அளவுக்கு அதிக கோபப்படுதல், எதன்மீதும் மயக்கம் அடைதல் இந்த மூன்றின் பெயர்களையும் அழித்தால் அழியும் நோய்.



விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.



விருப்பு, வெறுப்பு, மயக்கம் என்னும் இம்மூன்றன் பெயருங்கூட உள்ளத்திற்குள் இல்லாது போனால், அவற்றால் வரும் துன்பங்களும் இல்லாமல் போகும்.



விருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்.


When lust and wrath and error's triple tyranny is o'er,
Their very names for aye extinct, then pain shall be no more.


If the very names of these three things, desire, anger, and confusion of mind, be destroyed, then will also perish the evils (which flow from them).



kaamam vekuLi mayakkam ivmoondran
naamam kedakketum noai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உண்மை பொருள் எது என அறியாமல் உலகில் உள்ளவற்றை எல்லாம் பொருள் என எண்ணவதே இழிவானப் பிற்ப்பு. மாசு இல்லா காட்சியே இருளை நீக்கும். காட்சி அறியும் கண்களும் பயன் அற்றது உண்மை அறியாவிடின். மெய்பெபொருள் காணும் அறிவே அறிவு. பெயருக்கு கேடு உண்டாக்கும் காமம் வெகுளி மயக்கம் அழித்தால் நோய் இல்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.