திருவள்ளுவரின் திருக்குறள்

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.



தீ மூட்டி குளிர்காயும் பொழுது எப்படி விலகாமல் சேராமல் பக்குவமாய் இருப்பர்களோ அப்படி மன்னனிடம் பழக வேண்டும்.



அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல இருக்க வேண்டும்.



மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும் இடைநிலை நின்று பழகுக.



முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள்.


Who warm them at the fire draw not too near, nor keep too much aloof;
Thus let them act who dwell beneath of warlike kings the palace-roof.


Ministers who serve under fickle-minded monarchs should, like those who warm themselves at the fire, be neither (too) far, nor (too) near.



akalaadhu aNukaadhu theekkaaivaar poalka
igalvaendharch saerndhozhuku vaar

மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்.



ஆட்சியாளர் அடைய விரும்புவதை குறுக்கிட்டு அடையாமல் விலகினால் ஆட்சியாளரால் நிலைத்த உயர்வு கிடைக்கும்.



அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.



ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவருக்கு ஆட்சியாளரால் நிலைத்த செல்வத்தைக் கொடுக்கும்.



மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தால் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும்.


To those who prize not state that kings are wont to prize,
The king himself abundant wealth supplies.


For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth.



mannar vizhaipa vizhaiyaamai mannaraal
manniya aakkanh tharum

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.



பாராட்டப் படுவதென்றால் அரிதானதை பாரட்ட வேண்டும். தவறிவிட்டால் அத்தகைய சூழல் கிடைப்பது யாருக்கும் அரிது.



(அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் அரியத் தவறுகள் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும், ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது.



ஆட்சியாளருடன் பழகுவோர் தம்மைக் காக்கக் கருதினால் மோசமான பிழைகள் தம் பங்கில் நேர்ந்து விடாமல் காக்க; பிழைகள் நேர்ந்துவிட்டதாக ஆட்சியாளர் சந்தேகப் பட்டுவிட்டால் அவரைத் தெளிவிப்பது எவர்க்கும் கடினம்.



தமக்கு மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள். பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும். அப்படி செய்துவிட்டால் அதன் பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல.


Who would walk warily, let him of greater faults beware;
To clear suspicions once aroused is an achievement rare.


Ministers who would save themselves should avoid (the commission of) serious errors for if the king's suspicion is once roused, no one can remove it.



poatrin ariyavai poatral kaduththapin
thaetrudhal yaarkkum aridhu

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.



சத்தமாக பேசுவதையும், சரிசமமாக சிரிப்பதையும் சிறந்த பெரியவர்களிடம் தவிர்க்க வேண்டும்.



வல்லமை அமைந்த பெரியாரிடத்தில் (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதல் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுகவேண்டும்.



மேன்மை மிக்க பெரியவர் அருகே இருக்கும்போது, பிறருடன் காதருகே மெல்லப் பேசுவதையும் அடுத்தவர் முகம் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரிப்பதையும் செய்யாது நடந்துகொள்க.



ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்.


All whispered words and interchange of smiles repress,
In presence of the men who kingly power possess.


While in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at others.



sevichchollum saerndha nakaiyum aviththozhukal
aandra periyaa rakaththu

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.



உயர்ந்தோர் எதைச் சொன்னாலும் தவிர்காமல், அதை தொடரச் சொல்லாமல், மற்ற ஒன்றை சொன்னாலும் விலகாமல் மறை போல் கேட்க வேண்டும்.



(அரசர் மறைபொருள் பேசும் போது) எப்பொருளையும் உற்றுக் கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.



ஆட்சியாளர் பிறருடன் ரகசியம் பேசம்போது காதுகொடுத்துக் கேட்காதே; என்ன பேச்சு என்று நீயாகக் கேளாதே; அதைப் பற்றி ஆட்சியாளரே சொன்னால் கேட்டுக் கொள்க.



பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது. அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும்.


Seek not, ask not, the secret of the king to hear;
But if he lets the matter forth, give ear!.


(When the king is engaged) in secret counsel (with others), ministers should neither over-hear anything whatever nor pry into it with inquisitive questions, but (wait to) listen when it is divulged (by the king himself).



epporuLum Oraar thotaraarmaR RapporuLai
vittakkaal kaetka maRai

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.



ஆட்சியாளரின் அகச்சூழலை குறிப்பறிந்து, தகுந்த நேரம் அறிந்து, வெறுக்காதபடி வேண்டியதை விரும்பும்படி சொல்லவேண்டும்.



அரசருடையக் குறிப்பை அறிந்து தக்கக் காலத்தை எதிர்நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறுச் சொல்ல வேண்டும்.



ஆட்சியாளருக்கு எதையேனும் சொல்ல விரும்பினால், ஆட்சியாளரின் அப்போதைய மனநிலையை அறிந்து தான் சொல்லக் கருதிய செய்திக்கு ஏற்ற சமயத்தையும் எண்ணி ஆட்சியாளருக்கு வெறுப்புத் தராததும், வேண்டியதும் ஆகிய காரியத்தை அவர் விரும்புமாறு சொல்லுக.



ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக்குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும்.


Knowing the signs, waiting for fitting time, with courteous care,
Things not displeasing, needful things, declare.


Knowing the (king's disposition and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable.



kuRippaRindhu kaalanG karudhi veRuppila
vaendupa vaetpach solal

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.



வேண்டியதை சொல்லி, செயல்பட தேவையற்றதை எதன்பொருட்டு கேட்டாலும் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.



அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும்.



ஆட்சியாளருக்குப் பயன்தரும் செய்திகளை அவர் கேட்காத போதும் சொல்லுக; பயன் தராத செய்திகளை எப்போதும் சொல்லாது விடுக.



விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.


Speak pleasant things, but never utter idle word;
Not though by monarch's ears with pleasure heard.


Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so).



vaetpana solli vinaiyila eGnGnaandrum
kaetpinum sollaa vidal

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.



ஆட்சியாளரை என்னைவிட இளையவர் என்றோ, உறவுக்காரர் என்றோ இகழ்வாக பார்க்காமல் அவர் இருப்பின் நிலைக்கு எற்ப மதிக்கப்படும்.



(அரசரை) எமக்கு இளையவர், எமக்கு இன்ன முறை உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.



ஆட்சியாளருடன் பழகும்போது இவர் என்னைக் காட்டிலும் வயதில் சிறியவர்; இவர் உறவால் எனக்கு இன்ன முறை வேண்டும் என்று எண்ணாமல், ஆட்சியாளர் இருக்கும் பதவியை எண்ணி அவருடன் பழகுக.



எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக்கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்.


Say not, 'He's young, my kinsman,' despising thus your king;
But reverence the glory kingly state doth bring.


Ministers should behave in accordance with the (Divine) light in the person of kings and not despise them saying, "He is our junior (in age) and connected with our family!".



iLaiyar inamuRaiyar endrikazhaar nindra
oLiyoadu ozhukap padum

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.



ஆட்சியாளர் ஏற்றுக்கொண்டர் என்பதற்காக ஏற்க முடியாததை செய்யமட்டார் தெளிந்த பார்வை உள்ளவர்.



அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர் யாம் அரசரால் விரும்பப்பட்டோம் என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.



சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் மிகவும் மரியாதைக்கு உரியவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.



ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுகொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்.


'We've gained his grace, boots nought what graceless acts we do',
So deem not sages who the changeless vision view.


Those whose judgement is firm will not do what is disagreeable (to the sovereign) saying (within themselves) "We are esteemed by the king".



koLappattaem endreNNik koLLaadha seyyaar
thuLakkatra kaatchi yavar

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.



நெடுங்கால நெருக்கம் என்று பண்பற்றதை செய்யும் உரிமை கொண்டாடுவது கேடு உண்டாக்கும்.



யாம் அரசர்க்கு பழைமையானவராய் உள்ளோம் எனக்கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத்தரும்.



ஆட்சியாளருடன் நமக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு என்று எண்ணித் தீய செயல்களைச் செய்யும் மனஉரிமை ஒருவருக்குக் கெடுதியையே தரும்.



நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாத செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும்.


Who think 'We're ancient friends' and do unseemly things;
To these familiarity sure ruin brings.


The (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity (with the king) will ensure his ruin.



pazhaiyam enakkarudhip paNpalla seyyum
kezhudhakaimai kaedu tharum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நெருப்பிடம் உள்ள நெருக்கமே ஆட்சிளார்களிடம் இருக்கவேண்டும். ஆட்சியாளர்கள் விரும்புவதை நமக்கு உரிமையாக்க வேண்டாம். அவரின் உறவை எண்ணி நெருக்கம் காட்ட வேண்டாம், இளையவர் என்று சொந்தம் பாராட்ட வேண்டாம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.