திருவள்ளுவரின் திருக்குறள்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.



செய்கிறோம் என்று அறியாமலேயே செய்த உதவியானது பூமியும் வானமும் வழங்குவதை விட மேலானது.



தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.



ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.



வாராது வந்த மாமணி ( என்பதுபோல், செய்யாமற் செய்த உதவி) என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா.


Assistance given by those who ne'er received our aid,
Is debt by gift of heaven and earth but poorly paid


(The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received



seiyaamal seydha udhavikku vaiyagamum
vaanakamum aatral aridhu

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.



சரியான நேரத்தில் செய்த உதவி சிறியதாக இருப்பினும் அதுவே உலகத்தி ன் மிக பெரியது.



உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.



நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.



தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.


A timely benefit, -though thing of little worth,
The gift itself, -in excellence transcends the earth


A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world



kaalaththi naaRseydha nanRi siRidheninum
Gnaalaththin maaNap peridhu

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.



பயன் கருதி செய்யாமல் செய்த உதவியை எண்ணிப் பார்பத்தின் நன்மை கடலை விட பெரியது.



இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.



இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.



என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.


Kindness shown by those who weigh not what the return may be:
When you ponder right its merit, 'Tis vaster than the sea


If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea



payan-thookkaar seydha udhavi nayan-thookkin
nanmai kadalin peridhu

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.



தினையளவு துணையாக நன்றி செய்தலும் பனையளவு துணையாக ஏற்பார்கள் நன்றியின் பயன் தெரிந்தவர்கள்.



ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.



தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.



ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்.


Each benefit to those of actions' fruit who rightly deem,
Though small as millet-seed, as palm-tree vast will seem


Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit



thinaiththuNai nandri seyinum panaiththuNaiyaak
koLvar Payan-theri vaar

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.



உதவுவது வரையறை செய்யாமல் உதவுவது, உதவியின் தன்மை செய்பவரின் நிலையை பொறுத்து அமைகிறது.



கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.



ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.



உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.


The kindly aid's extent is of its worth no measure true;
Its worth is as the worth of him to whom the act you do


The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measure



udhavi varaiththandru udhavi udhavi
seyappattaar saalpin varaiththu

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.



மறக்கவேண்டாம் மாசற்றவர்களின் உறவை துறக்க வேண்டாம் துன்பத்துடன் இருக்கையில் விலக நினைக்காதவர் நட்பை.



குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.



உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.



மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.


Kindness of men of stainless soul remember evermore
Forsake thou never friends who were thy stay in sorrow sore


Forsake not the friendship of those who have been your staff in adversity Forget not be benevolence of the blameless



maRavaRka maasatraar kaeNmai thuRavaRka
thunpaththuL thuppaayaar natpu

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.



தோன்றும் அடுத்த பிறப்புக்கும் எண்ணுவர் தனக்கு வந்த துன்பத்தை அழித்தவரின் நட்பை.



தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.



தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்.



ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.


Through all seven worlds, in seven-fold birth, Remains in mem'ry of the wise
Friendship of those who wiped on earth, The tears of sorrow from their eyes


(The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction



ezhumai ezhupiRappum uLLuvar thangaN
vizhumanh thutaiththavar natpu

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.



பெற்ற உதவியை மறப்பது பெருமையல்ல. நமக்கு செய்த தீங்கை உடனே மறப்பது நல்லது.



ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.



ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்.



ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.


'Tis never good to let the thought of good things done thee pass away;
Of things not good, 'tis good to rid thy memory that very day


It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted)



nandri maRappadhu nandrandru nandralladhu
andrae maRappadhu nandru

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.



கொல்வதை போன்ற துன்பம் செய்தாலும் அவர் செய்த நன்மை ஒன்றை நினைக்க துன்பம் மறையும்.



முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.



முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.



ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.


Effaced straightway is deadliest injury,
By thought of one kind act in days gone by


Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred



kondranna innaa seyinum avarseydha
ondru-nandru uLLak kedum

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.



எந்த உதவியை மறந்தவருக்கும் முக்தி உண்டு. முக்தி இல்லை தான் பெற்ற உதவியை மறந்தவருக்கு.



எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.



எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.



எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.


Who every good have killed, may yet destruction flee;
Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free


He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit



enhnhandri kondraarkkum uyvuNdaam uyvillai
seynhnhandri kondra makaRku


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உதவுகிறோம் என்ற நினைப்பு இல்லாமல் உதவுவதே ஆனந்தம். அது இந்த வானத்தையும், பூமியையும் வட மிகப் பெரியது. பிறர் நமக்கு செய்த துன்பத்தை விட நன்மை சிறிது செய்திருந்தாலும் அதை எண்ணிப் பார்பதே நமக்கு நல்லது. பெற்ற உதவியை மறப்பவர் உய்வு அடைய முடியாது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.