திருவள்ளுவரின் திருக்குறள்

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.



எந்தன் முன் நிற்காதீர், தோற்பீர். பலர் என்தன் முன் நின்று நடுகல்லாய் நின்றுவிட்டனர்.



பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர்.



பகைவர்கேள! என் அரசின் முன்னே போரிட நிற்காதீர்; உங்களைப் போலவே இதற்கு முன்பு பலர் நின்றனர்; எல்லாம் மறைந்து இப்போது நடுகல்லில் சிலையாக நிற்கின்றனர்.



போர்களத்து வீரன் ஒருவன், பகைவர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர் என முழங்குகிறான்.


Ye foes! stand not before my lord! for many a one
Who did my lord withstand, now stands in stone!.


O my foes, stand not before my leader; (for) many are those who did so but afterwards stood (in the shape of) statues.



ennaimun nillanmin thevvir palarennai
munnhindru kalnhin Ravar

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.



காட்டு முயலுக்கு எய்தும் அம்பை விட பிழைத்துவிடும் யானைமேல் எய்தல் இனிது.



காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.



காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது.



வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறிதப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது.


Who aims at elephant, though dart should fail, has greater praise.
Than he who woodland hare with winged arrow slays.


It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit hare in the forest.



kaana muyaleydha ampinil yaanai
pizhaiththavael Endhal inidhu

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.



சிறந்த ஆண்மை என்பது அடுத்தவர் துன்பம் துடைத்தல், அதிலும் பகைவருக்கு உதவுதல் மற்றுமோர் உயர்வு.



பகைவரை எதிர்த்து நிற்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர், ஒரு துன்பம் வந்த போது பகைவர்க்கும் உதவிச் செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.



பகைவர் மீது இரக்கம் காட்டாமல் இருப்பதை மிகுந்த ஆண்மை என்பர்; ஆனால், அந்தப் பகைவர்க்கு ஒரு தாழ்வு வரும்போது அவர் மீது இரக்கம் கொண்டு, அவர் தாழ்ச்சியைப் போக்க உதவுவது ஆளுமையை மேலும் சிறப்பிக்கும்.



பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும். அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும்.


Fierceness in hour of strife heroic greatness shows;
Its edge is kindness to our suffering foes.


The learned say that fierceness (incontest with a foe) is indeed great valour; but to become a benefactor in case of accident (to a foe) is the extreme (limit) of that valour.



paeraaNmai enpa thaRukaN-on Rutrakkaal
ooraaNmai matradhan eqku

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.



வீரன் தனது கையில் இருந்த வேலை யானைமேல் பாய்ச்சிய பின்பு அடுத்த வேல் தனது உடல் மேல் இருப்பதால் நகைத்துக் கொள்வான்.



கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.



தன்னை எதிர்த்து வந்த யானையின் மீது தன் கையிலிருந்த வேலை எறிந்து விட்டவன், அடுத்து வருகி்ன்ற யானை மீது எறிவதற்காகத் தன் மார்பில் பதிந்து நின்ற வேலைப் பறித்துக் கொண்டே மகிழ்வான்.



கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாய்ந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்.


At elephant he hurls the dart in hand; for weapon pressed,
He laughs and plucks the javelin from his wounded breast.


The hero who after casting the lance in his hand on an elephant, comes (in search of another) will pluck the one (that sticks) in his body and laugh (exultingly).



kaivael kaLitrotu poakki varupavan
meyvael paRiyaa nakum

விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.



கவனமாய் விரிந்த விழிகளின் இமைகள் தன்மீது எறிந்த வேல் கண்டும் ஒட்டாது திடமான மனிதற்கு.



பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.



பகைவரைச் சினந்து பார்க்கும் கண், அவர்கள் எறியும் வேலைப் பார்த்து மூடித் திறந்தாலும், சிறந்த வீரர்க்கு அதுவே புறங் கொடுத்தலாகும்.



களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும்.


To hero fearless must it not defeat appear,
If he but wink his eye when foemen hurls his spear.


Is it not a defeat to the valiant to wink and destroy their ferocious look when a lance in cast at them (by their foe) ?.



vizhiththakaN vaelkoNa teRiya azhiththimaippin
ottandroa van-ka Navarkku

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.



வெற்றித் தழும்பு ஏற்படாத நாட்களை வீணாக கழித்த நட்களாக கணக்கிடுவார்கள் வீரர்கள்.



வீரன் தன் கழிந்த நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன் படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்.



ஒரு வீரன் தன் கடந்த நாள்களை எண்ணி எடுத்து, அவற்றுள் முகத்திலும் மார்பிலும் போரின்போது புண்படாத நாள்களைப் பயனில்லாமல் கழிந்த நாள்களாகக் கருதுவான்.



ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்த நாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான்.


The heroes, counting up their days, set down as vain
Each day when they no glorious wound sustain.


The hero will reckon among wasted days all those on which he had not received severe wounds.



vizhuppuN pataadhanhaal ellaam vazhukkinuL
vaikkumdhan naaLai eduththu

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.



பரவும் புகழுக்காக உயிரையும் துறப்பவர்கள், காலின் அணிகலன்களை விலக்கிய நடனப்பெண் போன்றவர்கள்.



பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.



தம்முடன் சொர்க்கத்திற்கு வராது பூமியில் மட்டு் நிலைத்து நிற்கும் புகழை விரும்பி, உயிரையும் விரும்பாத வீரர், தம் கால்களில் வீரக்கழலைக் கட்டுவது அவர்க்கு அழகே.



சூழ்ந்து பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும்.


Who seek for world-wide fame, regardless of their life,
The glorious clasp adorns, sign of heroic strife.


The fastening of ankle-ring by those who disire a world-wide renown and not (the safety of) their lives is like adorning (themselves).



suzhalum isaivaendi vaendaa uyiraar
kazhalyaappuk kaarikai neerththu

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.



தேவை என்றால் உயிருக்கு அஞ்சாத மறவர் தன் அரசன் தடுத்தாலும் சீர் குறைவது இல்லை.



போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.



போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார்.



தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்.


Fearless they rush where'er 'the tide of battle rolls';
The king's reproof damps not the ardour of their eager souls.


The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting).



uRinuyir anjaa maRavar iRaivan
seRinum seerkundral ilar

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.



சவாலை சாதிக்க தயங்கம் இல்லாமல் சாகக்கூடியவரை யார் பிழைத்தார் என்று தண்டிப்பது.



தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்.



தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்?.



சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது.


Who says they err, and visits them scorn,
Who die and faithful guard the vow they've sworn?.


Who would reproach with failure those who seal their oath with their death ?.



izhaiththadhu ikavaamaich chaavaarai yaarae
pizhaiththadhu oRukkiR pavar

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.



காப்பவர் கண்களில் நீர்மல்கச் செய்யும் மரணம் கண்டதால் அத்தகைய மரணம் இரந்தாவது பெறும் தகுதியுடையதாகிறது.



தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.



வீரர்களின் வீரச்செயலை எல்லாம் எண்ணிப் பார்க்கும் கண்களோடு ஆட்சியாளர் நிற்க, அந்தப்போரில் சாகும் வாய்ப்பைப் பெற்றவரின் சாவு, பிறரிடம் கேட்டுப் பெறத்தக்க சிறப்பினை உடையது.



தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு.


If monarch's eyes o'erflow with tears for hero slain,
Who would not beg such boon of glorious death to gain?.


If (heroes) can so die as to fill with tears the eyes of their rulers, such a death deserves to be obtained even by begging.



purandhaarkaN nheermalkach chaakiRpin saakkaadu
irandhukoaL thakkadhu udaiththu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

என் முன் நிற்காதே தோல்வி அடைவாய் என்ற செருக்குடைய படைவீரன் காட்டு முயலுக்கு அம்பு ஏய்துவதிலும் கொல்லமுடிய யானை மீது ஏய்தவே முற்படுவான். மரணமும் மதிப்பு மிகுந்தது என உணர்ந்தவனே எல்லாரலும் மதிக்கப்படுவான்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.