திருவள்ளுவரின் திருக்குறள்

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.



நான் என்ற ஆணவத்தால் வரும் செருக்கும், ஒத்திசைவு கொள்ளாத சினமும், தாழ்வு மனம் கொண்ட சிறுமையும் இல்லாதவர்களின் வளர்ச்சி அகங்காரம் என்ற பெருமிதம் நீர்த்ததாய் இருக்கும்.



செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.



தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.



இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.


Who arrogance, and wrath, and littleness of low desire restrain,
To sure increase of lofty dignity attain.


Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.



serukkunj sinamum siRumaiyum illaar
perukkam perumidha neerththu

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.



ஆசைப்படுதலும், மதிக்க மறக்கும் மானமும், அர்த்தமற்ற மகிழ்வும் குற்றமாகும் உயர்நிலை அடைபவருக்கு.



பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.



நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது - இவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாம்.



மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.


A niggard hand, o'erweening self-regard, and mirth
Unseemly, bring disgrace to men of kingly brith.


Avarice, undignified pride, and low pleasures are faults in a king.



ivaRalum maaNpiRandha maanamum maaNaa
uvakaiyum Edham iRaikku

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.



தினையளவு தவறு நேர்ந்தாலும் பனையளவாகக் கருதுவார் பழிக்கு அஞ்சுபவர்.



பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.



பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.



பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.


Though small as millet-seed the fault men deem;
As palm tree vast to those who fear disgrace 'twill seem.


Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree.



thinaiththuNaiyaanG kutram varinum panaiththuNaiyaak
koLvar pazhinhaaNu vaar

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.



குற்றம் செய்வதை விடாமல் காக்கும் பொருளாக்கும் குற்றமே அழிவைத் தரும் பகை



குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.



அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.



குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.


Freedom from faults is wealth; watch heedfully
'Gainst these, for fault is fatal enmity.


Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy.



kutramae kaakka poruLaakak kutramae
atran tharooum pakai

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.



குற்றத்தால் துன்பம் வருமுன் தன்னை காத்துக் கொள்ள தவறியவரின் வாழ்க்கை தீயின் முன்னே வைத்த வைக்கோல் போலக் கெடும்.



குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.



தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்.



முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.


His joy who guards not 'gainst the coming evil day,
Like straw before the fire shall swift consume away.


The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire.



varumunnark kaavaadhaan vaazhkkai erimunnar
vaiththooRu poalak kedum

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.



தன்னிடம் உள்ள குறைகளை அழித்துப் பிறரது குறையை காணும் வழிகாட்டுபவருக்கு எந்த குறையும் இருக்காது.



முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.



படிக்காதவர் முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!.



முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?.


Faultless the king who first his own faults cures, and then
Permits himself to scan faults of other men.


What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others.



than-kutram neekkip piRarkutranG kaaNkiRpin
en-kutra maakum iRaikku

செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.



செய்யவேண்டுயதைச் செய்யத் தவறியவன் செல்வம் உயர்வு பல அடையாமல் கெடும்.



செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.



செல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும்.



நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்.


Who leaves undone what should be done, with niggard mind,
His wealth shall perish, leaving not a wrack behind.


The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue.



seyaRpaala seyyaa thivaRiyaan selvam
uyaRpaala thandrik kedum

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.



எனக்கு மட்டும் என்ற ஆசைப்படும் பற்று கொள்ளும் உள்ளம் என்ன உள்ளம் என்று எண்ணப்படும் ஒன்று.



பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.



செலவிட வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும்.



எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈ.யாமல் வாழ்வதுதான்.


The greed of soul that avarice men call,
When faults are summed, is worst of all.


Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone - greater than all).



patruLLam ennum ivaRanmai etruLLum
eNNap paduvadhon Randru

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.



தன்னைத் தானே எதன்பொருட்டும் வியப்பாக எண்ணாதே, நன்றிக் கெட்டச் செயல்களை எப்போதும் விரும்பாதே.



எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.



எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.



எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈ.டுபடக் கூடாது.


Never indulge in self-complaisant mood,
Nor deed desire that yields no gain of good.


Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things.



viyavaRka eGnGnaandrum thannai nayavaRka
nandri payavaa vinai

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.



காதலுடன் காதல் கொண்டு அறியாமையை உணர்ந்துக் கொண்டால் எதிர்க்கவேண்டியது இல்லை எதிரிகளின் நூலை. (அன்புள்ளம் கொண்டவன் உண்மையை உணர்த்து முட்டாள்தனமான நூல்களை மதிப்பிழக்கச் செய்கிறான்)



தன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.



தான் செய்ய எண்ணியவற்றைப் பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி காத்தால், அவனை அழிக்க எண்ணும் பகைவர் எண்ணம் பழுதுபடும்.



தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும்.


If, to your foes unknown, you cherish what you love,
Counsels of men who wish you harm will harmless prove.


If (a king) enjoys, privately the things which he desires, the designs of his enemies will be useless.



kaadhala kaadhal aRiyaamai uykkiRpin
Edhila Edhilaar nool


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நான் என்ற செருக்கும், சினமும், தாழ்வு மனப்பாண்மையும் இல்லாதவரின் வளர்ச்சி ஆணவம் இல்லாமல் இருக்கும். ஆசை, மதிக்காத மனக்கேட்ட செயல், உண்மையற்ற மகிழ்ச்சி உயர்வை தடுக்கும். சிறிய தவறையும் பெரிதாக பார்க்க வேண்டும். தன்னைத் தானே வியத்தல் குற்றமாகும். அறியாமையை அழிக்க காதல் கொண்டால் ஏதும் அற்ற நூலை தேவையற்றது என மாற்றிவிடலாம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.