திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: பெருமை / Greatness

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.



என்றும் பணிவுடன் இருப்பதே பெருமை. சிறுமையே தன்னை தானே வியந்து தேவையற்றதை அணிந்துக் கொள்ளும்.



பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.



பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.



பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.


Greatness humbly bends, but littleness always
Spreads out its plumes, and loads itself with praise.


The great will always humble himself; but the mean will exalt himself in self-admiration.



paNiyumaam endrum perumai siRumai
aNiyumaam thannai viyandhu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

எண்ணமற்ற வெறுமையுடன் இருப்பதே மனிதனுக்கு பெருமை. உயிர்களிடத்தில் இருக்கும் வேறுபட்ட செயல்பாடுகளே பெருமை. மேலாக செயல்பட வாய்ப்பு இருந்தும் அப்படி இல்லாதவர் கீழானவரே. தன்னை தானே கேட்டு நடப்பவரே கற்புடை பெண் போன்றவர், தேவையற்றதை மறைத்து ஆற்றக்கூடியதை ஆற்றி பெருமிதம் இல்லாமல் பணிவுடன் இருப்பதே பெருமை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.