திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கூடாநட்பு / Unreal Friendship

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.



அதிகபட்ச நட்பாக நடந்து தனக்குள் பகை எண்ணுபவரை சிரித்த முகத்துடனே நட்பினை விலக்கிட வழி செய்ய வேண்டும்.



புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பு சாகுமாறு நடக்க வேண்டும்.



வெளியில் நண்பராய்ப் பெரிதுபடக் காட்டி, மனத்தே நம்மை இகழ்ந்து மகிழ்பவரை நாமும் வெளியில் அவரைச் சிரிக்க வைத்து, மனத்தே அம்மகிழ்ச்சி அழியும்படி போலி நண்பராகலாம்.



வெளித்தோற்றத்திற்கு நண்பரைப்போல் நகைமுகம் காட்டி மகிழ்ந்து, உள்ளுக்குள் பகையுணர்வுடன் இகழ்பவரின் நட்பை, நலிவடையுமாறு செய்திட நாமும் அதே முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.


'Tis just, when men make much of you, and then despise,
To make them smile, and slap in friendship's guise.


It is the duty of kings to affect great love but make it die (inwardly); as regard those foes who shew them great friendship but despise them (in their heart).



mikachcheydhu thammeLLu vaarai nakachcheydhu
natpinuL saappullaR paatru


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நேர்மையற்ற மனிடப் பதர்களின் நட்பு நல்லதல்ல. பகை உணர்வு வந்தால் பல நூல்களாலும் பக்குவம் பெறமுடியாது. போலியாக சிரிப்பதும் அழுவதும் மனிட பதர்களின் பண்பு இவர்களிடம் கவனமாக விலக வேண்டும். பகைவரின் நட்பு கட்டாயம் ஏற்கவேண்டிய சுழலில் மனதளவில் விலகி ஒதுக்க வேண்டும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.