திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: அருளுடைமை / Compassion

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.



தெளிவு இல்லாதவன் உண்மை பொருள் கண்டு செயல்படுவதைப் போலவே அருள் இல்லாதவன் செய்யும் உதவியும் இருக்கும்.



அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.



மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.



அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்.


When souls unwise true wisdom's mystic vision see,
The 'graceless' man may work true works of charity.


If you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom.



theruLaadhaan meypporuL kaNtatraal thaerin
aruLaadhaan seyyum aRam


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அருள் என்ற செல்வமே செல்வம் பொருள் மூடர் இடத்திலும் இருக்கும். பிற உயிர்களை பேணி காக்கும் அருள் வேட்கை கொண்டவற்கு இருள் என்ற ஒன்று இல்லை. அவர்களுக்கு மேல் உலகம் என்ற இன்பமான வாழ்வு மலரும். அருள் அற்றவர் செய்யும் உதவி வீணான முயற்ச்சி. வலிமையானவர் முன் தன் நிலை எண்ணி உணர்ந்தவர் பிறரை ஏளனமாக பார்ப்பதில்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.