மண்டலங்கள் மூன்று மருவ வுடநிறுத்தி
அண்டரனை யர்ச்சிக்கு மாறு.
ஆசனத்தைக் கட்டி யரன்றன்னை யர்ச்சித்து
பூசனைசெய் துள்ளே புணர்.
உள்ளமே பீடமுணர்வே சிவலிங்கந்
தெள்ளிய ரர்ச்சிக்கு மாறு.
ஆதாரத் துள்ளே யறிந்து சிவனுருவைப்
பேதமற வர்ச்சிக்கு மாறு.
பூரித் திருந்து புணர்ந்து சிவனுருவைப்
பாரித்தங் கர்ச்சிக்கு மாறு.
விளக்குறு சிந்தையான் மெய்ப்பொருளைக் கண்டு
துளக்கற வர்ச்சிக்கு மாறு.
பிண்டதி னுள்ளே பேரா திறைவனைக்
கண்டுதா னர்ச்சிக்கு மாறு.
மந்திரங்க ளெல்லா மயங்காம லுண்ணினைந்து
முந்தரனை யர்ச்சிக்கு மாறு.
பேராக் கருத்தினாற் பிண்டத்தி னுண்ணினைந்
தாரா தனைசெய்யு மாறு.
உள்ளத்தி னுள்ளே யுறப்பார்த்தங் கொண்சுடரை
மெள்ளத்தா னர்ச்சிக்கு மாறு.
அர்ச்சனை, வீட்டு நெறிப்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural