ஔவையாரின் ஞானக்குறள்

தோன்றிய தெல்லாந் தொடக்கறுத்துத் தூய்வெளியாய்த்
தோன்றியக்காற் றூய வொளி.


தெளிவாய தேச விளக்கொளியைக் காணில்
வெளியாய வீடதுவே யாம்.


மின்போ லுருவ விளக்கொளிபோல் மேற்காணில்
முன்போல மூலம் புகும்.


பளிங்கு வலம்புரி பானிகர்த்த தாகில்
துளங்கொளியாந் தூய நெறி.


சங்கு நிறம்போற் றவள வொளிகாணில்
அங்கையி னெல்லியே யாகும்.


துளங்கிய தூண்டா விளக்கொளி காணில்
விளங்கிய வீடாம் விரைந்து.


மின்மினி போன்ற விளக்காகத் தான்தோன்றில்
அன்னப் பறவையே யாம்.


உள்ளொளி தோன்றி லுணரி லருளொளி
அவ்வொளி யாதி யொளி.


பரந்த விசும்பிற் பரந்தவொளி காணில்
பரம்பரமே யாய வொளி.


ஆதி யொளியாகி யாள்வானுந் தானாகி
ஆதி யவனுருவு மாம்.



Meta Information:
தூயவொளி காண்டல், திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural