ஔவையாரின் ஞானக்குறள்

பால்: தன்பால்
அதிகாரம்: ஞான நிலை

தற்புருட மாமுகந் தன்னிற் றனியிருந்
துற்பன மஞ்சை யுரை.


தற்புருட மாமுகமேற் றாரகை தன்மேலே
நிற்பது பேரொளி நில்.


ஓதிய தற்புரு டத்தடி யொவ்வவே
பேதியா தோது பிணை.


கொழுந்து றுவன்னி கொழுவுற வொவ்வில்
எழுந்தா ரகையா மிது.


மறித்துக் கொளுவிடு வன்னி நடுவே
குறித்துக் கொளுஞ்சீயைக் கூட்டு.


காலுந் தலையு மறிந்து கலந்திடில்
சாலவும் நல்லது தான்.


பொன்னொடு வெள்ளியி ரண்டும் பொருந்திடில்
அன்னவன் றாளதுவே யாம்.


நின்ற வெழுத்துட னில்லா வெழுத்தினை
யொன்றுவிக் கிலொன் றேயுள.


பேசா வெழுத்துடன் பேசு மெழுத்துறில்
ஆசான் பரநந்தி யாம்.


அழியா வுயிரை யவனுடன் வைக்கில்
பழியான தொன்றில்லை பார்.



Meta Information:
ஞான நிலை , தன்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural