குதம்பைச் சித்தர்



பங்கொடு பங்கில்லாப் பாழ்வெளி கண்டோர்க்கு
லங்கோ டேதுக்கடி குதம்பாய்
லங்கோ டேதுக்கடி?


தேடிய செம்பொன்னும் செத்தபோ துன்னோடு
நாடி வருவதுண்டோ? குதம்பாய்
நாடி வருவதுண்டோ?


போம்போது தேடும் பொருளில் அணுவேனும்
சாம்போது தான்வருமோ? குதம்பாய்
சாம்போது தான்வருமோ?


காசினிமுற்றாயுன் கைவச மாயினும்
தூசேனும் பின்வருமோ? குதம்பாய்
தூசேனும் பின்வருமோ?


உற்றார் உறவின ஊரார் பிறந்தவர்
பெற்றார்துணை யாவரோ? குதம்பாய்
பெற்றார்துணை யாவரோ?


மெய்ப்பணி கொள்ளாத மேதினி மாந்தர்க்குப்
பொய்ப்பணி ஏதுக்கடி? குதம்பாய்
பொய்ப்பணி ஏதுக்கடி?


விண்ணாசை தன்னை விரும்பாத மக்கட்கு
மண்ணாசை ஏதுக்கடி? குதம்பாய்
மண்ணாசை ஏதுக்கடி?


சேனைகள் பூந்தேர் திரண்ட மனுத்திரள்
யானையும் நில்லாதடி! குதம்பாய்
யானையும் நில்லாதடி!


செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம்
தங்காது அழியுமடி! குதம்பாய்
தங்காது அழியுமடி!


கூடங்கள் மாடங்கள் கோபுர மாபுரம்
கூடவே வாராதடி! கும்பாய்
கூடவே வாராதடி!


நல்வினை தீவினை நாடிப் புரிந்தோர்பால்
செல்வன் நிச்சயமே குதம்பாய்
செல்வன நிச்சயமே.


செய்தவம் செய்கொலை செய்தர்மம் தன்னொடும்
எய்த வருவனவே குதம்பாய்
எய்த வருவனவே.


முத்தி அளித்திடு மூர்த்தியைப் போற்றிசெய
பத்தியும் பின்வருமே குதம்பாய்
பத்தியும் பின்வருமே.


இச்சைப் பிறப்பினை எய்விக்கு என்றது
நிச்சய மாகுமடி குதம்பாய்
நிச்சய மாகுமடி.


வல்லமை யாகவே வாஞ்சை ஒழித்திட்டால்
நல்ல துறவாமடி குதம்பாய்
நல்ல துறவாமடி.


ஆசை அறுத்தோர்க்கே ஆனந்தம் உண்டென்ற
ஓசையைக் கேட்டிலையோ குதம்பாய்
ஓசையைக் கேட்டிலையோ?


தேக்கிய ஆசையைச் சீயென்று ஒறுத்தோரே
பாக்கிய வான்களடி குதம்பாய்
பாக்கிய வான்களடி.


இன்பங்கள் எய்திட விச்சை உறாதார்க்குத்
துன்பங்கள் உண்டாமடி குதம்பாய்
துன்பங்கள் உண்டாமடி.


துறவிகள் ஆளாசை துறந்து விடுவரேல்
பிறவிகள் இல்லையடி குதம்பாய்
பிறவிகள் இல்லையடி.


கொல்லா விரதம் குளிர்பசி நீக்குதல்
நல்ல விரதமடி குதம்பாய்
நல்ல விரதமடி.


தவநிலை ஒன்றனைச் சாராத மாந்தர்கள்
அவநிலை யாவாரடி குதம்பாய்
அவநிலை யாவாரடி.


தவமதை எந்நாளுஞ் சாதிக்க வல்லார்க்குச்
சிவமது கைவசமே குதம்பாய்
சிவமது கைவசமே.


காமனை வென்று கடுந்தவஞ் செய்வோர்க்கு
ஏமன் பயப்படுவான் குதம்பாய்
ஏமன் பயப்படுவான்.


யோகந் தான்வேண்டி உறுதிகொள் யோகிக்கு
மோகந்தான் இல்லையடி குதம்பாய்
மோகந்தான் இல்லையடி.


காலங்கள் கண்டு கடிந்த துறவோர்க்குக்
கோலங்கள் உண்டாமடி குதம்பாய்
கோலங்கள் உண்டாமடி.


ஐம்புலன் வென்றே அனைத்தும் துறந்தோர்கள்
சம்புவைக் காண்பாரடி குதம்பாய்
சம்புவைக் காண்பாரடி.


பொய்மை வெறுத்திட்டு மெய்யை விரும்பினோர்
மெய்யவர் ஆவாரடி குதம்பாய்
மெய்யவர் ஆவாரடி.


யான் என்ன தென்னும் இருவகைப் பற்றற்றோன்
வானவன் ஆவானடி குதம்பாய்
வானவன் ஆவானடி.


அகம்புறம் ஆனபற் றற்றமெய்ஞ் ஞானிக்கு
நகுபிறப்பு இல்லையடி குதம்பாய்
நகுபிறப்பு இல்லையடி.


பற்றறில் துன்பமும் பற்றறும் இன்பமும்
முற்றாக எய்துமடி குதம்பாய்
முற்றாக எய்துமடி.


பொய்ஞ்ஞானம் நீக்கியே பூரணம் சார்தற்கு
மெய்ஞ்ஞானம் வேண்டுமடி குதம்பாய்
மெய்ஞ்ஞானம் வேண்டுமடி.


பிறவியை நீக்கிடப் பேரின்பம் நோக்கிய
அறிவு பெரிதாமடி குதம்பாய்
அறிவு பெரிதாமடி.


தத்துவமாகவே சத்துப்பொருள் கண்டால்
தத்துவ ஞானமடி குதம்பாய்
தத்துவ ஞானமடி.


அண்டத்தைக் கண்டதை ஆக்கினோன் உண்டென்று
கண்டது அறிவாமடி குதம்பாய்
கண்டது அறிவாமடி.


முக்குற்றம் நீக்கமுயலும் மெய்ஞ் ஞானமே
தக்கமெய்ஞ் ஞானமடி குதம்பாய்
தக்கமெய்ஞ் ஞானமடி.


போதம் இதென்றுமெய்ப் போதநிலை காணல்
போதமது ஆகுமடி குதம்பாய்
போதமது ஆகுமடி.


ஆண்சாதி பெண்சாதி யாகும் இருசாதி
வீண்சாதி மற்றவெல்லாம் குதம்பாய்
வீண்சாதி மற்றவெல்லாம்.


பார்ப்பார்கள் மேலென்றும் பறையர்கள் கீழென்றும்
தீர்ப்பாகச் சொல்வதென்ன? குதம்பாய்
தீர்ப்பாகச் சொல்வதென்ன?


பார்ப்பாரைக் கர்த்தர் பறையரைப் போலவே
தீர்ப்பாய்ப் படைத்தாரடி குதம்பாய்
தீர்ப்பாய்ப் படைத்தாரடி.


பற்பல சாதியாய்ப் பாரிற் பகுத்தது
கற்பனை ஆகுமடி குதம்பாய்
கற்பனை ஆகுமடி.


சுட்டிடுஞ் சாதிப்பேர் கட்டுச்சொல் லல்லாமல்
தொட்டிடும் வத்தல்லவே குதம்பாய்
தொட்டிடும் வத்தல்லவே.


ஆதி பரப்பிரமம் ஆக்கு மக்காலையில்
சாதிகள் இல்லையடி குதம்பாய்
சாதிகள் இல்லையடி.


சாதிவேறு என்றே தரம்பிரிப் போருக்குச்
சோதிவே றாகுமடி குதம்பாய்
சோதிவே றாகுமடி.


நீதிமானென்றே நெறியாய் இருப்பானே
சாதிமா னாவாடி குதம்பாய்
சாதிமா னாவாடி.


சாதி ஒன்றில்லை சமயம் ஒன்றில்லை என்று
ஓதி உணர்ந் தறிவாய் குதம்பாய்
ஓதி உணர்ந் தறிவாய்.


தன்புத்தி தெய்வமாய்ச் சாற்றிய சார்வாகம்
புன்புத்தி ஆகுமடி குதம்பாய்
புன்புத்தி ஆகுமடி.


கல்லினைச் செம்பினைக் கட்டையைக் கும்பிடல்
புல்லறி வாகுமடி குதம்பாய்
புல்லறி வாகுமடி.


அண்டத்தைக் கண்டு அநாதியில் என்பவர்
கொண்ட கருத்தவமே குதம்பாய்
கொண்ட கருத்தவமே.


பெண்ணின்ப முத்தியாய்ப் பேசும்பா டாண்மதம்
கண்ணின்மை ஆகுமடி குதம்பாய்
கண்ணின்மை ஆகுமடி.


சூரியன் தெய்மாய்ச் சுட்டுஞ் சமயந்தான்
காரியம் அல்லவடி குதம்பாய்
காரியம் அல்லவடி.





Meta Information:
kudambai Couplet,குதம்பைச் சித்தர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,kudambai padalgal in tamil lyrics,devotional songs,Poet kudambai siddhar