காகபுசுண்டர்

சிறந்தபரா பரமாகி யெங்குந் தானாய்த்
தீர்க்கமுடன் ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிப்
பறந்தருளும் ஐம்பூத மாயை தோன்றிப்
பல்லாயிரங் கோடி அண்டம் படைத்த போதம்
வரம்பெருகி யனந்தனந்தம் உயிரு மாகி
மதபேத மாகவுந்தான் வடிவைக் காட்டிச்
சரம்பெருக அண்டத்தி லெழுந்தே நின்ற
சச்சிதா னந்தமதைப் பணிகு வோமே.


ஓமென்ற சுழுனையடா அண்ட வுச்சி
ஓமுடிந்த பட்டணத்துக் கப்பாற் சென்று
நாமென்று சொல்லற்று யோக ஞானம்
நாட்டுகிறேன் அஞ்சனமுந் திலதப் போக்கும்
வாமென்ற வயித்தியமும் அட்ட கர்மம்
வாதமென்ற வித்தையெல்லாந் தெளிவ தாகக்
காமென்ற வீடமதிற் கண்டு தேறிக்
காட்டுகிறேன் மெய்ஞ்ஞானக் கருவைப் பாரே.


பாரேநீ யோகமென்ற வழியைச் சொல்வேன்;
பத்தடா ஐம்புலனைப் பரத்தி னூடே
சீரொருவர் தெரியாமல் மதங்கள் பேசித்
திருவான வுச்சியிலே சேரா மற்றான்
ஆரொருவன் ஆதாரம் வெவ்வே றென்றே
அடுக்கடுக்காய்ப் பன்னிரண்டு தலங்க ளென்று
வீரேதான் பேசியே மெலிந்து போவான்.
விடமுண்ட அண்டமதை விரும்பிக் காணே.


காணப்பா தலமெல்லாம் அண்ட வுச்சி
கமலமடா பதினெட்டாங் கோட்டிற் சென்று
பூணப்பா மனத்தையுந்தான் பிசகொட் டாமற்
பூட்டடா பிரமத்திற் புகுந்தெந் நாளும்
வீணப்பா மந்திரங்க ளொன்று மில்லை
விதியில்லை மதியில்லை கெதியு மில்லை
தோணப்பா தோணுமடா மனமொன் றான
சுத்தமுடன் நீயிருந்து தவஞ்செய் வாயே.


செய்யப்பா வாசிமுனி மகனே கேளு
தீர்க்கமுடன் முன்னுரைத்த ஆயி ரத்தில்
மெய்யப்பா சரக்குநீத் துவகை யெல்லாம்
மேன்மையுடன் கட்டினங்கள் உருக்கி னங்கள்
பொய்யப்பா சொல்லவில்லை ரத்னப் போக்குப்
புனிதமுடன் சரியாகச் சொல்லிப் போட்டேன்
வையப்பா இந்நூலில் மவுன மெல்லாம்
வகையாகச் சொல்லுகிறேன் பணிந்து கேளே.


கேளப்பா கேசரமே அண்ட வுச்சி
கெட்டியாய்க் கண்டவர்க்கே மவுன மாகும்
ஆளப்பா பரப்பிரம யோக மென்றே
அடுக்கையிலே போதமுந்தான் உயரத் தூக்கும்
வாளப்பா கெவுனமணி விந்து நாதம்
வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டு போகும்
நாளப்பா அண்ட மெல்லாஞ் சத்தி யோடு
நடனமிடுஞ் சிலம்பொலியுங் காண லாமே.


காணலாம் பிரமத்தில் நிர்ண யந்தான்
காட்டுகிறேன் வாசிமுனி கருவாய்க் கேளு
பூணலாம் அண்டவுச்சி தன்னில் நின்று
பொறிகளையு முண்டாக்கிப் புவனந் தன்னில்
தோணலாம் உயிர்ப்பயிரைப் படைத்தெந் நாளுந்
தொந்தமென்னும் ஏழுவகைத் தோற்ற மாகி
ஆணலாம் நாலுவகை யோனி யாகி
அண்டமடா அனந்தனந்த மான வாறே.


வாறான பிரமத்தில் நடுவே மைந்தா!
வந்ததடா ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிக்
கூறாகப் பின்னியடா கீழே பாயுங்
கூறுகிறேன் இருக்கண்ணில் ஒளிவைக் கேளு;
வீறான அண்டவுச்சி முனைக்கப் பாலே
வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே
நேராக இருகண்ணிற் பின்ன லாகி
நிச்சயமா யொளிவாகி நிறைந்தார் பாரே.


பாரப்பா பரப்பிரமம் ஒளிவி னாலே
பத்திலே நரம்புவழி பாயும் போது
ஆரப்பா இருகண்ணில் ஒளிவ தாகி
அண்டமெல்லாம் ஏகமாய்த் தெரிய லாச்சு
காரப்பா நரம்பென்ற விழுது வட்டம்
கபாலத்தில் முக்கூறாய்ச் சுழுனை யாச்சு
வீரப்பா காதுக்கும் நாக்குக் குந்தான்
வெற்றிபெற இன்னமுந்தா னுரைக்கக் கேளே.


கேளப்பா மூலமடா லிங்கந் தன்னில்
கிருபையுடன் தண்டுக்குங் கீழ்மே லாக
நாளப்பா தமர்போலே பிடர் மார்க்கம்
நன்றாக ஓடுமடா நரம்பி னூடே
வாளப்பா அண்டமுட்டி வுயர மைந்தா!
வலுவாக முன்சொன்ன நரம்பி னூடே
தேளப்பா சேர்ந்துமிகப் பின்ன லாகிச்
சிறந்திடவே புருவமத்தி யாகும் பாரே.


பாரடா புருவமத்தி யேதென் றக்கால்
பரப்பிரம மானதோர் அண்ட வுச்சி
நேரடா முன்சொன்ன நரம்பு மத்தி
நிலைத்ததடா சுழுனையென்று நினைவாய்ப் பாரு
வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா!
மேவடா மனந்தனையுஞ் செலுத்தும் போது
காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து
கலந்தைந்து பூதமுந்தான் ஒன்றாய்ப் போமே.


போமடா முன்சொன்ன நரம்பி னூடே
பூரித்து ரவிமதியுஞ் சுடர்தாம் மூன்றும்
ஆமடா பின்னியுங் கீழே பாயும்
அந்தரங்கந் தனைப்பார்க்க அடங்கிப் போகும்
நாமடா வெளிதிறந்து சொல்லி விட்டோம்
நாதாந்த பரப்பிரம நாட்டந் தன்னை
ஓமடா விந்துவுந்தான் அண்ட வுச்சி
உறுதியுடன் சித்தமதை யூன்றிப் பாரே.


பாரான சாகரமே அண்ட வுச்சி
பதினாலு லோகமெல்லாம் பரத்தி னூடே
சீராகத் தெரியுமடா மவுன மார்க்கஞ்
சித்தான சித்துவிளை யாடிநிற்கும்.
வீரான மந்திரங்கள் பிறந்த தெப்போ?
விஷ்ணுவென்றும் பிரமனென்றும் வந்த தெப்போ
கூரான முக்குணங்க ளுதித்த தெப்போ?
கூறாத அட்சரத்தின் குறியைக் காணே.


காணார்கள் பிரம்முந்தா னுதிக்கு முன்னே
கருணையுள்ள மந்திரங்கள் பிறந்த துண்டோ?
தோணாமல் மந்திரங்க ளனந்தங் கற்றுச்
சுழுனையென்ற மூக்குநுனி தன்னைப் பார்த்து
வீணாகத் திரிந்து மிகப் பித்தர் போலே
வேரோடே கெட்டுழல்வான் விருதா மாடு;
கோணாம வண்ணாக்கின் நேரே மைந்தா!
குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முத்தி தானே.


முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது
மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும்
சத்தியடா மனந்தானே யேக மாகத்
தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா!
புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற்
பூலோக மெல்லாந்தான் பணியு முன்னை;
எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம்
ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே.


தானென்ற கற்பமடா மதுவுண் டக்கால்
சஞ்சார சமாதியென்ப ததற்குப் பேரு
ஊனென்ற பசிதீரும் கோபம் போகும்.
உதயகிரி தனிற்சென்றூ டுருவிப் பார்க்கத்
தேனென்ற திரையேழுந் தீய்ந்து போகுந்
திரிவாரே உச்சிநடுச் சென்ற போது
கோனென்ற கருவியெல்லா மொடுங்கிப் போகுங்
கூற்றுவனா ராட்டமதைப் பார்க்கலாமே.


பார்க்கலாம் ஒருகாலை உயரத் தூக்கிப்
பாடுவா னொருகாலைத் தாழ விட்டே
ஏர்க்கையிலே மேல்நோக்குங் காலைக் கேளாய்
என்மகனே மதியென்ப ததற்குப் பேரு
கார்க்கையிலே கீழ்நோக்குங் காலை மைந்தா
கண்டுபார் ரவியென்று கருத லாகும்
மார்க்கமுடன் அண்டவுச்சி மேலே தானும்
மகத்தான வன்னியிருப் பிடந்தான் பாரே.


பாரப்பா இதையறியார் சித்தர் கூடிப்
பார்தனிலே அறுபத்து நாலு யோகம்
ஆரப்பா இருக்குமென்று வெவ்வே றாக
அலைந்தலைந்து கெட்டவர்க ளனந்தங் கோடி
நேரப்பா ராசாங்க யோகம் பார்த்து
நிலையறிந்து கண்டவனே கோடிக் கொன்று
வீரப்பா பேசாமல் மனக்கண் ணாலே
விந்துவடா பாய்ந்ததலம் வெளியைக் காணே.


காணாத காட்சியெல்லாங் கண்ணிற் கண்டு
காகமடா புசுண்டரென்று பேரும் பெற்றேன்
தோணாமல் நானலைந்து சிறிது காலம்
துருவமென்ற பிரமத்தை யடுத்துக்கேட்க
நாணாமல் அண்டவுச்சி தன்னி லேதான்
நாடியே மனத்தாலே நாட்ட மாகக்
கோணாமல் பாருமென்றே எனக்குச் சொல்லக்
கூசாமல் மனமொன்றா யிருத்தி னேனே.


இருத்தியே இருதயத்தில் மனமொன் றாக
சுகபர மாம்பொருளை யிருத்தி யொன்றாய்
நிருத்தியே வெகுகோடி கால மட்டும்
நிருவிகற்பச் சமாதியிலே நிறைந்தெந் நாளும்
பொருத்தியே லலாடக்கண் திறந்து பார்க்கப்
பூலோக மெங்கு மொன்றாய் நிறைந்தென் மைந்தா!
கருத்தொன்றாய் நிறுத்தியடா கபாடம் நீக்கிக்
காரணத்தைக் கண்டுவிளை யாடுவாயே.


விளையாடிப் போதமய மாக வுந்தான்
வெட்டாத சக்கரத்தின் வெளிச்சம் பார்த்து
நிலையான அண்டமதில் நெற்றிக் கண்ணை
நீயறிந்தே அரவுவிடந் தன்னைப் போக்கி
அலையாம லாரொருவ ருறவு மற்றே
ஆயிழையாள் மோகமதை யதட்டித் தள்ளி
மலையாமற் பிரமமே துணையென் றெண்ணி
மவுனமென்று மந்தனையு மடக்கி நில்லே.


நில்லென்றால் லோகத்தில் மனிதர் தாமும்
நிட்டையுடன் சமாதியுமே பொருந்தா மற்றான்
வல்லவர்போல் வேதபுரா ணங்காவ் யங்கள்
மந்திரங்கள் கோடானு கோடி யென்றும்
சொல்லுவார் கோவிலென்றுந் தீர்த்த மென்றுந்
திருடர்கள்தா னலைந்தலைந்து திரிவார் மட்டை
வெல்வதொரு பிரமநிலை யறியா மற்றான்
வேரற்ற மரம்போலே விழுவார் பாரே.


பாரப்பா மலரெடுத்து லிங்கம் வைத்துப்
பார்த்தீப லிங்கத்தைப் பணியா மற்றான்
வீரப்பா நீராட்டிப் பூசை செய்து
வீணர்கள்தாம் கத்தபம்போற் கதறு வார்கள்
தேரப்பா மலரதனைக் கிள்ளும் போது
செத்தசனம் போலாச்சுத் தெளிந்து பாரு
காரப்பா மனங்கொண்டு பரத்தி னூடே
கண்டவரே கயிலாசத் தேகந் தானே.


தானென்ற பிரமத்தை யடுத் திடாமல்
தாரணியில் தெய்வமடா அனந்த மென்றும்
ஊனென்ற குருவென்றுஞ் சீட னென்றும்
உதயகிரி பாராத வுலுத்த மாடு
வேனென்ற பொய்களவு கொலைகள் செய்து
வேசையர்மே லாசைவைத்து வீண னாகிக்
கோனென்ற குருபாதம் அடைய மாட்டான்
கூடுவான் நரகமதில் வீழ்வான் பாரே.


பாரப்பா நாக்கையுந்தான் அண்ணாக் கேத்திப்
பார்த்தனிலே பார்த்தவர்க்குப் பலித மில்லை
ஆரப்பா கண்வெடிக்குந் தேகம் போகும்
அடயோக மென்பார்க ளாகா தப்பா!
சாரப்பா மனந்தனையண் ணாக்கில் நேரே
சார்ந்துமிகப் பார்க்கையிலே வாசி தானும்
வீரப்பா மேலடங்குங் கீழ்நோக் காது
வெட்டாத சக்கரத்தை யறிய லாமே.


அறியலாம் மனந்தானே உயிர்தா னாகும்
அண்டத்திற் சேர்ந்திடவே ஆகும் முத்தி
பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும்
பஞ்சமா பாதகங்கள் பறந்தே போகும்
விரிவான மனந்தனையும் அணுவ தாக்கி
விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்த்துக்
குறியான குண்டலியா மண்ட வுச்சி
கூறுகிறேன் முக்கோண நிலைய தாமே.


தாமென்ற உலகத்தில் மனித ரோடே
சஞ்சாரஞ் செய்யாமற் றனித்து நில்லே
ஓமென்ற ஊண் மிகுந்து உண்டி டாதே
ஓரமாய் வழக்கதனை உரைத்தி டாதே
ஆமென்ற அட்சரத்தை மறந்தி டாதே
ஆயாச மாகவுந்தான் திரிந்தி டாதே
காமப்பேய் கொண்டவனோ டிணங்கி டாதே
காரணத்தைக் கண்டுவிளை யாடு வாயே.


விளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு
வேகாத தலையாகும் விரும்பிப் பாரு
மலையாமல் வெண்சாரை பிடித்தே யுண்ணு
மைந்தனே சாகாக்கா லதுவே யாகும்;
அலையாமல் சோதியதன் பாலை யுண்ணே
அக்கினியாங் கம்பமடா சுழுனை யாச்சுக்
கலைநாலு போகிறதை யெட்டிற் சேரு
கபடமற்ற தேகமடா கண்டு பாரே.


கண்டுகண்டு மனந்தானே அண்டஞ் செல்லக்
கலைநாலும் எட்டிலையுஞ் சேர்ந்து போகும்
தண்டுமுண்டு செய்யாதே மனம்வே றானால்
தற்பரத்தை யெப்போதும் அறிய மாட்டாய்
தொண்டுசெய்து பெரியோரை யடுத்து மைந்தா
தொழுதுநீ யென்னூலை யன்பாய்க் கேளு
விண்டுமவர் சொலாவிட்டா லிந்நூல் சொல்லும்
வெற்றிபெற மனவடக்கம் வைத்துப் பாரே.


பாரப்பா விஞ்சைமந்த்ரம் என்பார் வீணர்
பாயடா விஞ்சைகிரி தன்னில் மைந்தா!
ஆரப்பா சென்றேறிப் பார்க்கும்போது
அதீதமுள்ள விஞ்சைமந்த்ரம் அனந்தங் காட்டும்;
நேரப்பா சிருட்டிப்புச் சங்கா ரங்கள்
நிமிடத்திற் செய்திடுவாய் நிலையைக் கண்டால்
வீரப்பா அமிர்தமுந்தான் குமிழி பாயும்
வேறில்லாக் கனிதனையு முண்க லாமே.


உண்கலாம் பிரமத்தி லடங்கும் போதே
உறுதியுள்ள அண்டத்தி லுருகிப் பாயுந்
திங்கலாந் தோணுமடா அமர்தச் சீனி
தித்திப்புப் பாலுடனே திடமாய் மைந்தா!
தங்கலாந் தேகமது அறியா மற்றான்
சட்டையுமே கழன்றுமிகத் தங்கம் போலே
பொங்கலாம் மெய்ஞ்ஞானத் தீபத் தாலே
பூரித்துப் பார்த்திடவே புவன மொன்றே.


ஒன்றான பிரமமே வெவ்வே றாக
உலகத்தி லனந்தமடா கூத்து மாச்சு;
நன்றாச்சுத் தீதாச்சு நாலு மாச்சு
ஞாயிறு திங்களென்ற பேருண் டாச்சு;
குன்றாச்சு ஊர்வனகள் அனந்த மாச்சு;
குருக்களென்றுஞ் சீடனென்றுங் குறிக ளாச்சு
நன்றாச்சு நாதவிந்தும் அடங்கி நின்ற
நாதனையு மொருமனமாய் நாட்டு வாயே.


நாட்டுவார் சித்தரெல்லாம் பேத மாக
நலம் போலே சாத்திரங்கள் கட்டி னார்கள்!
பூட்டியே மனிதரெல்லாம் நூலைப் பார்த்துப்
பூரணமாய் அண்டமதைப் பாரா மற்றான்
காட்டிலே திரிந்தலைந்த மானைப் போலே
கபடமாய் வாய்ஞானம் பேசு வார்கள்;
கூட்டிலே அடைந்திருக்கும் குயிலைப் பாரார்
கூறாத மந்திரத்தின் குறியைப் பாரே.


குறியென்ற உலகத்திற் குருக்கள் தானும்
கொடியமறை வேதமெல்லாங் கூர்ந்து பார்த்தே
அறியாமற் பிரமத்தைப் பாரா மற்றான்
அகந்தையாய்ப் பெரியோரை அழும்பு பேசி
விரிவான வேடமிட்டுக் காவி பூண்டு
வெறும்பிலுக்காய் அலைந்திடுவான் நாயைப் போலே
பரியாச மாகவுந்தான் தண்டு மேந்திப்
பார்தனிலே குறட்டிட்டு நடப்பான் பாரே.


பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி;
பணம்பறிக்க வுபதேசம் பகர்வோ மென்பான்;
ஆரப்பா பிரமநிலை காட்டா மற்றான்
ஆகாசப் பொய்களையு மவன்தான் சொல்வான்;
நேரப்பா சீடனுக்குப் பாவ மாச்சு;
நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோட மாச்சு;
வீரப்பா அடங்குகின்ற இடத்தைப் பாரான்
விதியாலே முடிந்ததென்று விளம்பு வானே.


வானென்ற அண்டமதிற் சென்று புக்கு
வடவரையி லுச்சிநடுத் தீபங் கண்டு
தேனென்ற சுத்தசிவ கங்கை தன்னில்
தீர்த்தங்க ளாடித்திரு நாம மிட்டுக்
கோனென்ற மனமன்பாய் மலராய்ச் சார்த்திக்
கொடியமறை வேதமுந்தா னடக்கங் கண்டு
தேனென்ற சித்தமே புத்தி யாகத்
தெளிந்தவரே மெய்ஞ்ஞானி யாவர் பாரே.


பாரண்ட மதையொன்றாய்ப் பார்க்கும் போது
பலபேத மாயையெல்லாம் மருண்டே யோடுஞ்
சீரண்டம் அகிலாண்ட பிரமாண் டங்கள்
செனித்தவகை யுயிர்தோறும் நீயாய் நிற்பாய்
காரண்ட லலாடக்கண் திறந்த போது
கண்கொள்ளாக் காட்சியெல்லாங் கலந்தே காட்டும்;
வீரண்ட மேல்வட்டம் விரிந்த சக்கரம்
மெய்ஞ்ஞான வெளியதனிற் றொடர்ந்து கூடே.


கூடுவதென் குணமறிந்த மனமொன் றாகக்
கூத்தாடித் திரியாமற் கவன மாகப்
பாடுது பலநூலைப் படித்தி டாமற்
பராபரத்தி னுச்சிநடு வெளியே சென்றே
ஆடுவது தொந்தோமென் றாட்டைப் பார்த்தே
அடுக்கடுக்கா யாயிரத்தெட்டிதழுங் கண்டு
வாடுகிற பயிர்களுக்கு மழைபெய் தாற்போல்
வாடாத தீபத்தை யறிந்து பாரே.


பாரென்று மெய்ஞ்ஞானம் பகர்ந்து சொன்னீர்
பராபரத்து நிலையினுடைப் பாதஞ் சொன்னீர்
வீரென்ற அண்டமெல்லாம் பாழ தாகி
விராட பிரம மொன்றியா யிருக்கும் போது
சீரென்ற வுயிர்களெல்லா மிருப்ப தெங்கே?
சித்தருடன் திரிமூர்த்தி யிருப்ப தெங்கே?
கூரென்று நீர்தங்கு மிடந்தா னெங்கே?
குருபரனே! இந்தவகை கூறு வீரே.


கூறுகிறே னென்மகனே வாசி நாதா
குணமான வீச்சுரனார் சபையிற் கூடித்
தேறுகின்ற பிரளயமாம் காலந் தன்னிற்
சீவசெந்து சித்தருடன் முனிவர் தாமும்
வீருடனே யெங்கேதா னிருப்பா ரென்று
விமலருந்தான் விஷ்ணுவையும் விவரங் கேட்கக்
கார்மேக மேனியனங் கவரை நோக்கிக்
கண்டுமிகப் பணிந்துமினிக் கருது வானே.


கருதுவான் ஆலிலைமேற் றுயில்வேன் யானும்
கனமான சீவசெந்தும் அனந்த சித்தர்
உறுதியா யென்றனுடைக் கமலந் தன்னில்
ஒடுங்குவா ராதரித்து மிகவே நிற்பேன்.
வருதியாய்ப் புசுண்டருந்தான் வருவா ரென்று
வலவனுடன் மாலானும் உரைக்கும் போது
சுருதியா யெனையழைத்தே சிவன்றான் கேட்கச்
சூத்திரமாய் நல்வசனம் மொழிந்தேன் பாரே.


பாரென்று சிவனுடைய முகத்தைப் பார்த்துப்
பல்லாயிரங் கோடியண்ட வுயிர்க ளெல்லாஞ்
சீரென்ற சித்தருடன் முனிவர் தாமுந்
திருமாலும் ஆலிலைமேற் றுயிலும் போது
கூரென்ற வுந்தியிடக் கமலந் தன்னிற்
கூடியே அடைந்திருப்பார் குணம தாக
வீரென்ற ஐவரையும் தாண்டி யப்பால்
வெகுசுருக்காய் வீதிவழி வந்தேன் பாரே.


பாரப்பா ஆகாயஞ் செல்லும் போது
பாலகனே சக்கரந்தான் சுற்றி யாட
ஆரப்பா சக்கரத்தைப் பிசகொட் டாமல்
அதன்மேல் யேறியுந்தா னப்பாற் சென்றேன்;
நேரப்பா நெடுந்தூரம் போகும் போது
நிச்சயமாய்க் கம்பத்தின் நிலையைக் கண்டேன்;
வீரப்பா அக்கினிபோல் படர்ந்து நிற்கும்
வெளியொன்றுந் தெரியாம லிருக்குந் தானே.


இருக்குமடா எங்குமொன்றாய் அக்கினிக் கம்பம்
என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா!
உருக்கமுடன் பெண்ணரசி யொன்றி நிற்பாள்;
ஓகோகோ அவள் முகத்தைப் பார்க்கும் போது
பெருக்கமுடன் முன்பார்த்தாற் புருட ரூபம்
புத்திரனே பின்பார்த்தாற் பெண்போல் ரூபம்
மருக்கமுடன் யான்றானுங் கம்பத் தூடே
வத்தோடே வத்தாக இருந்தேன் பாரே.


பாரப்பா இப்படியே அனந்த காலம்
பராபரத்தி னூடேதா னிருந்து வாழ்ந்தேன்;
ஆரப்பா பிரமமுந்தான் மனமிரங்கி
அகண்டமதைப் படைப்பதற்கே அருளும் போதும்
வீரப்பா கம்பத்தி லிருந்த பெண்ணும்
விமலரென்றும் உமையென்றும் மிகவே தோன்றிச்
சீரப்பா சக்கரத்தி லிருந்து கொண்டு
திருமாலைத் தானழைக்கத் தீர்க்கம் பாரே.


பாரப்பா திருமாலுங் கமலந் தன்னில்
பல்லாயிரங் கோடி அண்ட வுயிர்க ளெல்லாம்
நேரப்பா அழைத்துமுக் குணத்தைக் காட்டி
நிலையான சமுத்திரங்கள் பூமி தானும்
சேரப்பா ரவியோடு திங்கள் தானுஞ்
சிறந்தெழுந்த மலைகாடு சீவ செந்து
விரப்பா நவக்கிரகம் நட்சத் ரங்கள்
வெற்றியுடன் நால்வேதம் வகுத்த வாறே.


வாறான தெய்வமென்றும் பூத மென்றும்
வையகத்தில் வானமென்றும் பூமி யென்றும்
கூறான மாமேரு கிரிக ளென்றும்
கோவிலென்றுந் தீர்த்தமென்றுங் குளமுண டாக்கி
நேராகப் பிரமமே சாட்சி யாக
நிலைத்தெங்கும் உயிர்தோறும் நிறைந்தா ரையா!
வீராகத் திரியாமல் மவுனம் பார்த்து
வெற்றிபெற இன்னமுந்தான் உரைக்கக் கேளே;


கேளப்பா இப்படியே பிரள யந்தான்
கிருபையுடன் ஏழுலட்சங் கோடி யானால்
ஆளப்பா அரியயனும் சீவ செந்தும்
அகண்டமென்ற பிரமத்தி லடங்கு வார்கள்;
நாளப்பா நானுமந்தப் படியே செல்வேன்;
நலமாக இன்னமுந்தான் அகண்ட மானால்
வாளப்பா காகமென்ற ரூப மானேன்
வடவரையின் கூடுதொத்தி யிருந்தேன் பாரே.


பாரடா இப்படியே யுகங்கள் தோறும்
பார்தனில்நா னிருந்தேன்எத் தனையோ கோடி
ஆரடா என்னைப்போல் அறிவா ருண்டோ?
ஆதியென்ற சித்திக்கும் ஆதி யானேன்
வீரடா விமலரிடஞ் செல்லும் போது
வெற்றியுட னெனையெடுத்து முத்த மிட்டார்;
காரடா கைலையின்மே லிருக்கச் சொன்னார்!
காகமென்ற ரூபமா யிருந்தேன் பாரே.


காகமென்ற ரூபமா யிருந்து கொண்டு
காரணங்கள் அத்தனையும் கருவாய்ப் பார்த்து
வேகமுடன் வெளியோட்ட நிலையாய்ப் பார்க்க
வெகுதூரம் சுற்றியின்னம் விவரங் காணேன்;
மோகமுடன் பரந்தமனம் அணுவ தாக்கி
மூர்க்கமுடன் பரவெளியை மனவெளி தாக்க
நாகரீக மாகவுந்தா னண்ட மேவி
நடுவணைய முச்சிநடு மத்தி தானே.


மத்தியமாம் வானதிலே வளர்ந்த லிங்கம்
மகாமேரு வுச்சியிலே வளர்ந்த லிங்கம்
சக்தியும் ஆவியுடையு மான லிங்கம்
சஞ்சாரச் சமாதியிலே நிறைந்த லிங்கம்
புத்தியால் மனமொன்றாய்ப் புகழ்ந்த லிங்கம்
பூவருந் தன்னில்தான் முளைத்த லிங்கம்
எத்திசையும் புகழ்ந்திடவே வந்த லிங்கம்
ஏகபர மானதொரு லிங்கந் தானே.


தானென்ற சிறுவீட்டுக் குள்ளே சென்று
தலைமாறிப் போனதொரு வாசி யைத்தான்
கோனென்ற பிரமத்தி லடக்க மாகக்
குறித்திடுவாய் மனமடங்கிக் கூர்ந்து பார்க்க
வானொன்றிப் போகுமடா பாணம் பாணம்
மைந்தனே! உண்டிடவே பசிதான் தீரும்;
தேனென்ற சட்டை களுங் கழன்று போகும்
தேனுக்குந் தேவனா யிருக்க லாமே.


இருக்கலாம் எந்தெந்த யுகங்க ளுக்கும்
ஏகாந்த மானதொரு பிரமந் தன்னில்
பெருக்கவே மனமடங்கி மவுனம் பெற்றும்
பேராசை யாகவுந்தான் பிரமத் துள்ளே
குருக்களைப்போல் அரசனைப்போ லிந்திர னைப்போல்
குணமான மூவரைப் போற்பிரமத் தூடே
திருக்கெடுத்தே யெந்தெந்த அவதா ரங்கள்
செய்திடலாம் நிலையறிந்த பெரியோர் தானே.


தானவனே யென்குருவே புசுண்ட நாதா
தாரணியிலே சீவசெந்தாம் அகண்ட மெல்லாம்
தோணவே மும்மூர்த்தி யிவர்கள் தாமுந்
துடியாகப் பிரமத்தி லடங்கு மென்றீர்
கோனவனே பின்னுந்தா னகண்ட மெல்லாங்
குறிப்புடனே படைக்கும்வகைக் குறியுஞ் சொன்னீர்
தானவனே மதுவுண்ணச் சொன்னீ ரையா
சத்தியமா யதன் விவரஞ் சாற்று வீரே.


சாற்றுகிறே னென்மகனே வாசி நாதா!
சத்தியமா யண்டத்திற் செல்லும் போது
போற்றுகிற அக்கினியும் பிரவே சித்துப்
புலன்களைந்துஞ் சேர்ந்ததனாற் போத மாகும்;
மாற்றிலையும் அதிகமடா வுன்றன் தேகம்
மைந்தனே! அபுரூப மாகு மப்பா!
வாற்றியே நிழற்சாய்கை யற்றுப் போனால்
வலுத்ததடா காயசித்தி யாச்சுப் பாரே.


ஆச்சென்ற அபுரூப மான போதே
அட்டமா சித்திவகை யெட்டு மாடும்;
மூச்சொன்றி யடங்கிப்போம் பிரமத் தூடே
முன்னணியும் பின்னணியு மொன்றாய்ப் போகும்;
காச்சென்று காச்சிவிடு மவுனங் கண்டு
கலைமாறி நின்றிடமே கனக பீடம்
நீச்சென்று மில்லையடா வுன்னைக் கண்டால்
நிலைத்ததடா சமாதியென்ற மார்க்கந் தானே.


மார்க்கமுடன் தவசுநிலை யறியா மற்றான்
மனந்தளர்ந்து திரிவார்கள் லோகத் துள்ளே
ஏக்கமுடன் முப்பதுக்குள் மவுனங் கண்டே
இளவயசா யிருப்பார்கள் பெரியோர் மைந்தா!
காக்கவே சற்குருவின் பாதங் கண்டு
கருணையுடன் அவர் பதத்தை வணங்கிப் போற்றித்
தீர்க்கமுடன் பிரமத்தில் மனந்தான் செல்லச்
சீவனுக்குச் சீவனா யிருக்கலாமே.


இருக்கலாஞ் செடிபூடு கற்ப மில்லை
ஏகாந்த மானதொரு பிரமந் தன்னில்
உருக்கியே மனமடங்கிப் பார்க்கும் போதே
உத்தமனே காயமது வுறுதி யாச்சு;
மருக்கியே திரியாமல் மதம்பே சாமல்
வண்டரோ டிணங்கியடா மருவி டாமல்
குருக்கியே கோளரிடஞ் சேர்ந்தி டாமற்
குருபாதங் கண்டுமிகப் பணிந்து பாரே.


பாரென்று சொல்லிய மெய்ஞ்ஞான மூர்த்தி!
பரத்தினுடை அடிமுடியும் பகுந்து சொல்லும்
சீரென்று சொப்பனங்க ளதிக மாகத்
திடப்படவே காணுமிடந் தீர்க்கஞ் சொல்லும்
காரென்று மணம்பிறந்த இடந்தான் சொல்லும்
கதிர்மதியுஞ் சுற்றிவரு மார்க்கஞ் சொல்லும்
வீரென்றே உயிர் பிறந்த இடந்தான் சொல்லும்
வெற்றிபெற இந்தவகை விளம்பு வாயே.


வாயாலே சொல்லுகிறேன் மகனே கேளு;
மகத்தான பிரமத்தின் பாதந் தன்னில்
ஓயாமல் முன்சொன்ன நரம்பு பின்னி
உத்தமனே ரவிமதியுஞ் சுற்றி யாடும்;
மாயாமல் வாசியுந்தான் நடுவே நின்று
மார்க்கமுடன் சுழுத்தியிடம் மனந்தான் சென்றால்
காயான சுழுத்தியென் றிதற்கு நாமம்
கண்டுபார் கண்டுகொள்ளப் போதந் தானே.


தானென்ற பலரூப மதிகங் காணுந்
தன்னுடைய தேவதைபோற் பின்னும் காட்டும்
ஊனென்ற பெண்ணைப்போ லுன்னைக் கூடி
உத்தமனே சையோகஞ் செய்தாற் போலே
தேனென்று மயக்கி வைக்குஞ் சுழுத்தி யாலே
தித்திப்புப் போலேதான் ருசியைக் காட்டும்
கோனென்ற குருவருளைப் பணிந்து கொண்டு
குறிப்பறிந்து பூரணத்தின் நிலையைப் பாரே.


நிலையாத சமுத்திரமே சுழுத்தி யாச்சு;
நின்றிலங்கும் வாசியைத்தான் வெளியிற் சேரு
தலையான அக்கினியப் படியே சேரு;
சத்தியமாய் ரவிமதியைக் கூடச் சேர்த்து
மலையாமல் ஏகபரா பரனே யென்று
மனமடங்கி அண்டவுச்சி தன்னைப் பார்க்க
அலையாது மனந்தானும் பரத்திற் சென்று
ஆகாய வீதிவழி யாட்டும் பாரே.


ஆட்டுமடா ஆசையற்று ரோச மற்றே
அன்னை சுற்றந் தன்னைமறந்தே அகண்ட மேவும்
பூட்டுமடா நவத்துவா ரங்கள் தம்மைப்
பொறிகளைந்துஞ் சேருமடா புனித மாகக்
காட்டிலென்ன நாட்டிலென்ன மவுனங் கண்டால்
காமதேனு கற்பகமும் உனக்கே சித்தி
வீட்டிலே தீபம் வைத்தாற் பிரகா சிக்கும்
வெளியேறி னாற்றீபம் விழலாய்ப் போமே.


போமடா புத்திசித்தம் என்ற தாகிப்
புசுண்டனென்று பேரெடுத்துப் புவனந் தன்னில்
ஆமடா வடசாளி மைந்த னென்றும்
அருமையாங் கன்னியுடை மைந்த னென்றும்
நாமடா ஐந்துபேர் தம்மி லேதான்
நாட்டமுடன் முன் பிறந்தேன் நான்தான் மைந்தா!
வாமடா சாண்முழத்திற் காட்சி பார்க்க
வத்துவுந்தான் ஈச்சரனா ரென்பார் பாரே.


பாரப்பா என் குலந்தான் சொல்லக் கேளு;
பார்தனிலே பிரமனுடை விந்து வாலே;
ஆரப்பா பிறந்துவிட்டோம் ஐந்து பேரும்;
ஆகாய அண்டமதை யடுத்தே சென்றேன்;
நேரப்பா வெகுகோடி காலம் வாழ்ந்தேன்
நிட்டையிலே மனந்தவறா திருந்து கொண்டேன்;
வீரப்பா பேசுவோர் லோகத் தோர்கள்
விட்டடைந் தொட்டவிடம் விரும்பிக் காணே.


காணப்பா சாதிகுலம் எங்கட் கில்லை;
கருத்துடனே என்குலஞ்சுக் குலந்தான் மைந்தா!
தோணப்பா தோணாமற் சாதி பேதஞ்
சொல்லுவான் சுருக்கமாய், சுருண்டு போவான்;
வீணப்பா பிரமத்தில் ஆதி காலம்
வீரமுடன் பிறந்ததடா உயிர்க ளெல்லாம்;
நானப்பா அப்படியே உதித்தேன் முன்னே;
நன்றாக வுதித்தவிடம் நாடி னேனே.


நாடியே யுதித்தவிடம் அறியாத் தோஷம்
நடுவாக வந்தவிடம் பாரத் தோஷம்
கூடியே பிறந்தவிடங் காணாத் தோஷம்
குருபரனை நிந்தனைகள் செய்த தோஷம்
வாடியே வத்தோடே சேராத் தோஷம்
வம்பரோ டிணங்கியே திரிந்த தோஷம்
கூடியே வுறவற்றே யிருந்த தோஷம்
கும்பியுங்கற் சிப்பியையும் அறியான் பாவி.


அறியாத பாவிக்கு ஞான மேது?
ஆறுமுகன் சொன்னதொரு நூலைப் பாரு;
பரிபாஷை யாகவுந்தான் சொல்ல வில்லை;
பராக்கிரமம் என்னுடைய நூலைப் பாரு;
விரிவாகச் சித்தர்சொன்ன நூலை யெல்லாம்
வீணாக மறைப்பாகச் சொன்னா ரையா!
குறியான அண்டமதை யொளித்தே விட்டார்
கூறினார் வெவ்வேறாய்க் குற்றந் தானே.


குற்றமது வையாமல் அண்டத் தேகிக்
கூறாத மந்திரத்தின் குறியைப் பார்த்துச்
சித்தமொன்றாய் அந்திசந்தி யுச்சிக் காலம்
தேவனுக்குப் பூசைசெய்து தெளிவு பெற்றுக்
குற்றமது வையாமல் மனமன் பாலே
குருபரனை நோக்கியடா தவமே செய்து
பற்றாசை வைத்துமிகப் பார்க்கும் போது
பராபரையுங் கைவசமே யாகு வாளே.


ஆகுவா ளந்திசந்தி யுச்சி யென்றால்
அப்பனே ரவிமதியுஞ் சுடர்மூன் றாகும்
ஏகுவாய் மூன்றுமொன்றாய்ப் பின்ன லாகி
இருந்திடமே பிரமாண்ட நிலைய தாகும்;
போகுமே நீ செய்த காமமெல் லாம்
புவனைதிரி சூலிகையுடைக் கிருபை யாலே;
வாகுமே வழியோடே சேர்த்தா யானால்
வாணியுந்தான் நாவில்நடஞ் செய்வாள் பாரே.


பாரடா வாணியுந்தா னிருந்த வீடு
பாலகனே சொல்லுகிறேன் பண்பாய்க் கேளாய்;
ஆரடா அண்ணாக்கின் கொடியி னூடே
அண்டத்தைப் பற்றியடா விழுது போலே
நேரடா நரம்பது தான் பொருந்தி நிற்கும்
நிலையான அக்கினியின் மத்தி தன்னில்
வீரடா அதுவழியே அருள்தான் பாய்ந்து
விண்ணுலகில் வேணதமிழ் சொல்லு வாளே.


சொல்லுவா ளனந்தமறை வேத மெல்லாம்
சுருதியடா முடிந்தெழுந்த பிரமத் தாலே
வெல்லுவார் தனையறிந்த பெரியோ ரெல்லாம்
வீறாண்மை பேசார்கள் மவுன மாகி
அல்லுபக லற்றதொரு பிரமந் தன்னை
ஆரறிவா ருலகத்தி லையா பாரு
சொல்லடங்கு மிடந்தனையுங் கண்டு தேறிச்
சூத்திரமாய்க் கல்லுப்பு வாங்கு வாங்கு.


வாங்கியே அண்டத்தில் மூளை சேர்த்து
வளமாக வப்பிலையும் பிசறு மைந்தா!
தாங்கியே திருகுகள்ளிக் குள்ளே வைத்துத்
தமர்வாயைத் தான்மூடிச் சாபந் தீர்த்தே
ஓங்கியே திங்களுந்தான் மூன்று சென்றால்
உத்தமனே கள்ளியைத்தான் தரித்துக்கொண்டு
சாங்கமினிச் செய்யாமற் சீலை மண்ணுஞ்
சத்தியமாய்ச் செய்தபின்னே உலர்த்திப் பாரே.


பாரப்பா வுலர்ந்த தன்பின் எடுத்து மைந்தா!
பக்தியுடன் கசபுடத்திற் போட்டுப் பாராய்
ஆரப்பா ஆறவைத்தே யெடுக்கும் போதில்
அருணனிறம் போலிருக்குஞ் செந்தூ ரந்தான்
நேரப்பா அணுப்போலே சரக்குக் கெல்லாம்
நிச்சயமாய்ப் பூசியுந்தான் புடத்திற் போடு
வீரப்பா நீருமடா நவலோ கந்தான்
வேதையென்ற வித்தையெல்லாங் கைக்குள் ளாச்சே.


ஆச்சடா வுடம்பிலுள்ள வியாதி யெல்லாம்
அணுப்போல வுண்டிடவே பறந்து போகும்;
வாச்சடா தேகசித்தி யதிக மாச்சு
வத்துடனே கூடியுந்தான் வாழ லாச்சு;
மூச்சுடா தலைப்பிண்டங் கொடியு மாவும்
முத்தியடா வாங்கியபின் தயிலம் வாங்கி
ஏச்சடா தரியாமல் சூடன் சேர்த்தே
இன்பமுடன் வத்துவையும் பூசை செய்யே.


பூசையடா செய்துமிகப் பதனம் பண்ணு
புத்திரனே பேய்ப்பீர்க்குத் தயிலம் வாங்கி
ஆசைபுல்லா மணக்கதுவு மதுபோல் வாங்கி
அப்பனே கேசரியின் நெய்யுஞ் சேர்த்தே
ஓசையுடன் தேவாங்கு பித்துஞ் சேர்த்தே
உத்தமனே தலைப்பிண்டந் தயிலஞ் சேர்த்துப்
பாசையடா பேசாம லரைத்து மைந்தா!
பாலகனே சவாதோடு புனுகு சேரே.


சேரடா அணுப்போலே புருவத் திட்டுத்
தீர்க்கமுடன் நீ தானுஞ் செல்லும் போதில்
ஆரடா வுன்னைத்தான் ஆர்தான் காண்பார்?
அண்டமெனும் பிரமத்தி னருளி னாலே
நேரடா திகைப்பூண்டு கொண்டு வந்து
நிச்சயமாய் முன்சொன்ன தயிலம் விட்டு
வீரடா அரைத்தபின்பு புருவத் திட்டால்
வேசையர்கள் வெகுபேர்கள் மயங்கு வாரே.


வாரான தில்லைப்பால் கருந்து ளசியும்
வவ்வாலின் பித்துடனே மந்திப் பித்துஞ்
சீராக முன்சொன்ன கருவை விட்டுத்
திடமாக அரைத்திடுவாய் சாம மொன்று
நேராக அரைத்ததையு மெடுத்து மைந்தா
நிச்சயமாய்ப் புருவத்தி லிட்டுப் பார்க்க
வீராகப் பாதாளம் பிளந்தே யோடும்
வேதாந்த சாரணையை விரும்பிப் பாரே.


பாரடா பரப்பிரமத் தூடே சென்று
பரிதிமதி அக்கினியும் மூன்று மொன்றாய்
நேரடா ஆதியுந்தான் எதிரி தன்னை
நிச்சயமாய்ப் பார்த்திடவே நீறிப் போவான்.
கூரடா கோடானு கோடி சித்துக்
குறித்திடவே ஆகுமடா பிரமத் தாலே
வீரடா இந்நூலைக் கொடுத் திடாதே
வெற்றியுடன் எண்பதுமே விளங்க முற்றே.


Meta Information:
காகபுசுண்டர், kaagapujendar Couplet,காகபுசுண்டர் பாடல்,சித்தர் பாடல்கள்,உபநிடதம் - 31,காவியம் 33,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,kaagapujendar padalgal in tamil lyrics,devotional songs,Poet kaagapujendar