பட்டினச் சித்தர் ஞானம்
TAGS:
pattinach Couplet,பட்டினச் சித்தர் ஞானம் ,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,pattinach padalgal in tamil lyrics,devotional songs,Poet pattinach siddhar



வாராது நெஞ்சே மயக்கம் வருமுன்னே
வேரா னதைப்பிடித்து மேலேறிப் - பாராமல்
பொய்யிலே நில்லாதே புத்திகெடா தேயிருந்தால்
மெய்யிலே நின்றறிவோம் மெய்.


மெய்யாறு வீடுகளாய் மேலாம் படைவீடாய்
ஐயாறு மாதம் அறுபதாய் - மெய்யாகக்
கண்டதெல்லாம் நான்காண் காணா ததைத்தேடிக்
கண்டுருகி நெஞ்சே கனி.


கனியருந்த மாட்டாமல் காயருந்து கின்றாய்
கனிருசிபோ லாகுமோ காய்தான் - இனியதுகேள்
நானும் நீயும் கனிகாண் நடுவிருந்த தேருசிகாண்
தேனும் பாலும் போல் சிவன்.


சிவதலங்க ளைத்தேடி சீயெழுத்த றுத்துச்
சிவதலங்க ளைத்தேடி சேரா - தவ தவங்கள்
பண்ணாதே நெஞ்சேகேள் பாரவினை வந்தக்கால்
எண்ணாதே அஞ்சியேங்கா தே.


ஏங்காதே நெஞ்சேகேள் எவ்வினைகள் வந்தாலும்
ஏங்காதே சற்றும் இளைக்காதே - தாங்காமல்
கொண்ட வனும் செத்தவனும் கூட்டத்தானும் வந்தான்
இன்றுகுறித் துண்மையிதென் றெண்.


எண்ணரிய நெஞ்சே இனியநற் பாலதனை
அன்னந்தண் ணீர்நீக்கி யேயிருந்து - தன்மைபோல்
துன்பங் களைந்து தூயவெளி யூடுருவாய்
இன்பங் களைச்சேர்ந் திரு.


சேர்ந்திருவோ ரும்பாலும் தேனும் போலே கலந்து
வார்ந்ததிலே யுள்ளுரிசி வாங்காமல் - போங்காலம்
வைத்தமறக் காலன் வருவானே வந்தக்கால்
ஏய்த்திடுவா னெஞ்சே எவன்.


எவனிருந்து நெஞ்சே எதிர்ப்பாரு முண்டோ
கவனமற நின்று கருதின் - புவனமெல்லாம்
வித்துயிரெல் லாங் கழண்டு விண்ணுடைந்த தேமனமே
மற்றுடலைஉண்கிறதே மண்.


மண்ணெழுந்தும் நீரெழுந்தும் வாய்வெழுந்தும் தீயெழுந்தும்
விண்ணெழுந்துங் கூடி ஒரு வீடாகி - நண்ணரிய
மாயமெல்லா முண்டாக்கி வைத்தான் காண்நெஞ்சேஇக்
காயமெல்லாம் நானாக் கரு?


கருவழிந்தால் வித்தையில்லாக் காரணம் போல் நெஞ்சே
கருவழிந்த தெல்லாம் கண்டதெல்லாம் - கருதித்
திரியாதே நெஞ்சே சிவன் செயலே யல்லால்
மரியாரில் லாதக்கால் வந்து.


வந்ததுவும் நாதாந்த வாதனைக்கண்டே வணங்கித்
தந்திரமாய்ச் சென்று தரியாமல் - அந்தரத்தில்
விட்டபட்டம் போலலைந்து வெவ்வினையி னால்மனமே
தட்டுகெட்டுப் போகாதே தான்.


தானந் தவமுயற்சி தாளாண்மை யோடுநெஞ்சே
வானம் பிளந்து வழிகூடின் - நானுமதில்
நீயு மொருநிழலில் நின்றங் கிளைப்பாறி
தோயுமதி தானே தொடங்கு.


தொடங்கு வினையறுத்து சுற்றமெலா நீத்தே
அடங்கு மிடத்தில் அடங்காமல் - கிடந்து
பறந்தெடுத்த குஞ்சாய் பதைத்தாய் மனமே
அருஞ்சரத் தம்மத னடி.


மதனசரத் தால்மனமே வையம் மயங்கி
விதனத் துறலால் வேறில்லை - மதனாலே
தத்துச் சுகத்தை நத்தி தானலைய வேண்டாங்காண்
மெத்த சுகத்தை வெறுத்து.


வெறுத்துவெருக் கொண்டதுபோல் வீணிலே நெஞ்சே
பொறுத்த மயக்கிற் போகாதே - குறித்தெடுத்து
தேடியே வாசிதனை சேர்ந்து கலந்தபொருள்
கூடினா லாமே குணம்.


குணங்கள் பலவிதமாய் கொள்ளாதே நெஞ்சே
வணங்குங் குணமாக வந்து - வணங்கியே
மண்டல மெலாங் கடந்து மாவீட்டை நீதிறந்து
கண்டெடுத்துக் கொள்வாய் கனம்.


கன தனத்து மாதர் கழிகாதல் கொண்டே
வினையார் நகைக்குருக வேண்டா - தினமனமே
சோதித்தா னல்லால் சுபகா ரியமாகப்
போதித்தால் கொள்விலையோ புத்தி.


புத்திதரும் வித்தைதரும் பொல்லாப் பில்லாமல் நெஞ்சே
சித்திமுத்திபேரின்பம் சேர்ந்திடலாம் - நித்தநித்தம்
தானந்த மானதொரு சற்குருவோடே பழகி
ஆனந்த முண்டிருந்தக் கால்.


கால்வழிச் சென்று கருபைக் குழிக்குக்கீழ்
மூலமற்ற நல்வழியே மூழ்கின்றி - மாலை
இருட்டறுத்துப் போடாமஎன்பாவி நெஞ்சே
திருட்டுவித்தை செய்கிறாய் சென்று.


சென்று சிவனடியில் சேர்ந்த பெரும்பாம்பு
ஒன்றுமிக வாசியைத்தான் ஓட்டாமல் - நன்றாய்
நிலையாக நில்லா தலைவாய் மனமே
அலைவாயி னில்துரும்ப தாய்.


தாய்தந்தை பெண்டுபிள்ளை தானென் றிரங்கிநித்தம்
காய்பறிக்கி றாயே கனியிருக்க - தாய்தந்தை
எத்தனை பேர் பெற்றாரோ என் மனமே நாமுந்தான்
எத்தனை பேரைப்பெற்றோம் இங்கு.


இங்குஅங்குமாய் மனமே ஈடழிய வேண்டாங்காண்
அங்கம் பொருளா அறிந்துகொண்டு - எங்குமெங்கும்
நாமேசிவமாக நாடினால் ஞானமொழி
தாமே அருளைத் தரும்.


அருளில்லா தார்க்கும் அருளறிவங் காமோ
அருளறிவு தானே ஆனந்தம் - அருளறிவு
தேடுவதும் கூடுவதும் சிந்தையா னந்தமுடன்
நாவதும் தானறி வினால்.


நாடிலெழுத்து ஆறும் நடுவெழுத் தீரைந்தும்
ஓடி னொருபதினா லாகுமோ - ஓடாய்நீ
ஓரெழுத்தைக் கண்டுறங்கி உன்னோடுறங்கி நெஞ்சே
ஓரெழுத்தி லேசென் றுரை.


உறைகலத்தினாய் போல உள்ளமல மெல்லாம்
அறுத்தடைந்து நெஞ்சே அறுதி - நிறைத்துப்
புளியம் பழத்தோடு போலிருக்க வேண்டும்
களியழியுங் காலத்துக் கே.


காலங் கழித்துக் கடைவாயில் பாலுறுமுன்
வேலங் கனைய விழிமடவார் - ஏலக்
குழியில்வைத்து மாரடித்து கூப்பிடுமுன் மாய்கைக்
கழியெடுத்துப் போடுமுன் கண்ணால்.


கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சேநீ
எண்ணாத மாய்கையெல்லாம் எண்ணுகிறாய் - நண்ணாய் கேள்
பார்க்கவேண் டுந்தனையும் பத்தரை மாற்றுத்தங்கம்
ஆக்கப் போகாதோ உன்னால்.


உன்னாலே நெஞ்சமே ஊழ்வினை வந்தாலும்
எந்நாளும் பாம்பின்வாய் தேரைபோல் - முன்னால்
அம்பிபட்டுப் போகாதே ஆனந்த மெய்விளக்கு
நம்பி துணைக்கு முற்றும் நம்பு.


நம்பினான் றன்னை நடுவணையி லேயிருந்து
கும்பிடா தார்க்குங் குறையுண்டோ - நம்பிப்
பளிங்கொளிபோல் நெஞ்சே பரந்திடாலா மெங்கும்
விளங்கனலோ டேசேருமே.


ஏமன்வரு முன்நெஞ்சே எவ்வினையுமே வென்று
சாம நடுவதனில் சார்ந்ததிலே - சேமமுடன்
காலனையும் வென்று சில காமனையும் வென்றுபின்பு,
பாலிக்க லாமதுநாம் பார்.


பாரயனும் மாலும் பரவவரு ருத்திரனும்
காரனைய வாரணத்தை தான்கண்டு - சீராய
நக்கத் திடைநடுவே நற்க்கன பொற்பதியில்
சொற்கனகத் தற்பதியில் தோன்று.


தோன்றுமே யெல்லாச் சுகமுற்றதில் மனமே
தோன்றுமே ஆனந்தச் சுந்தரர்பின் - தோன்றுமே
அட்சரச் சுருக்கி னொடும் அக்கரப் பெருக்கமுடன்
உச்சரித்து ரைக்கிறவுண்மை.


உண்மை யிதுகாண் ஒளியிருந்த வீடதுகாண்
உண்மை சிவனிருக்கும் ஊருகாண் - உண்மை
கருமை ஒளியேழ் கதியுள் பதங்கள்
மருவுதங்கி நீ வருந்து மாறு.


வருந்தும் பொழுதுகாண் மாயையாய் நெஞ்சே
வருந்தும் குணமாக வந்து - வருந்தும்
இருவினை தொடக்கறும் ஏழ்வகைப்பிறப்பாம்
கருமலத் திருக்கறுங் காண்.


காண்மனமே சத்திசிவம் ஒன்றான காரணத்தை
காண்மனமே மாலயனுங் காணரிதை - காண்மனமே
செம்பொன்னி னம்பலத் துள் சேருஞ்செஞ் சொல்லென்றும்
அம்பலத்தில் ஆடுநட னம்.


நடனமது பார்மனமே நயனத் திடையே
நடனமது நாலாம் பதங்காண் - நடனம்
பதிமதிவித் தாய் மனமே பலகதிவித் தாயெனவே
அதிவிதசித் தாந்த மாடும்.


ஆடும் பதிமனமே அம்பலத்தைச் சுட்டுநடம்
ஆடும் பரமகுரு ஆனந்தம் - ஆடுகின்ற
கூத்தனை கூற்றிற்ற கூத்தபிரா னையசுத்தம்
நீத்தவனைச் சித்தம்வைத்து நில்.


நில்லு நிலவறமாய் நேசமுடனே பதியில்
நில்லு பிறவியற நீநெஞ்சே - நில்லு
கனல்மதியும் கார்மிடறும் கதிரும் மதியும்
புனலொடு செஞ்சடையும் போற்றி.


போற்றித் தினமனமே பொல்லாக் குலங்கள் விட்டுக்
காற்றுங் கனலுங் கருத்துஒன்றாய்ப் - பார்த்தறிவால்
சுத்தமலப் பித்தையற்றுச் சுற்றஒழி சுற்றிலுற்றுச்
சத்தமறித் துற்றதிலே தங்கு.


தங்குநீ சென்று சதாசிவத்திலே மனமே
மங்குங் கருக்குழிக்குள் வாராமல் - தங்கும்
கருவும் புனலும் கதியும் கெதியும்
விதியும் திருத்தான வெளி.


வெளியில் வெளியாகி விண்ணவன் றானாய்
வெளியி லொளியா யிருக்க - வெளியிற்
கரியுரித்துப் போர்த்தவனைக் கார்மதிசென் றானைக்
கருவறுத்துப் பார்த்தலே காண்.


காணு மனமே கரிகாலனை வதைத்துக்
காணு முலகமெல்லாம் காணுருவாய் - தானு
மனவிரக மானபுலி மன்றுள் நடனப்
பணவரவின் உற்ற பாதம்.


பாதத்தான் அஞ்செழுத்தான் பரமன் சிங்க
நாதத்தா னென்று நெஞ்சே நன்றாகப் - போதத்தான்
ஆரணத்தி னோடடைந்து அண்டமெல்லாம் சுட்டதிரு
நீறணிந்து கொண்டிரு நித்தம்.


நித்தனாய் நிர்மலனாய் நின்றுலகம் மூன்றுரைக்கும்
கர்த்தனாய் அஞ்செழுத்தின் காரணமாய்ப் - பெற்ற
குருவினிரு பாதங் குளிர நினைநீ
தருமதுபற் றாமனமே தான்.


தானவனா காவிட்டால் சண்டாள னிற்றடிவான்
தானவனு மங்கே தரிக்கொட்டான் - மானார்
கலங்கும் கலவிக்கருத்திற்றால் தான் கொடுப்பான்
இலங்கும் அடிதேர் நெஞ்சே.


நெஞ்சே உனக்கு நிலவறமாய்ச் சொன்னவெலாம்
எஞ்சாவென் சொல்லென் றிகழாதே - நெஞ்சே
கருத்திச்சை தள்ளி கருதென்று செப்பின்
கருத்திச்சை தள்ளு கருத்துள்.


உள்ளிருந்து நெஞ்சே உலாவுஞ் சிவகுருவை
வெள்ளெருக்கின் பூச்சூடும் வேணியனை - உள்ளே
மனமுருகப் பார்த்தால் மலைசிலையாகச் சென்றால்
உனதறிவால் பார்த்து நீ ஓது.


ஓதுநீ நெஞ்சேகேள் ஓரெழுத்து மந்திரத்தால்
ஆதியாய் எங்கும் அமர்ந்தானை - ஓதில்
கடிய மிடியும் கடிய பிணியும்
கடிய வணுகாமல் காக்கும்.


காக்குந் தினமே கடியப் பிறப்பறுத்து
கார்க்கும் பலபிணிநோய் காட்டாமல் - நோக்குமந்தி
வந்து பகல்வெளியில் வாராத மன்மதனை
யுந்து மதையுணர்ந்தில் வாழ்.


வாழுநீ நெஞ்சே மயங்கித் திரியாதே
ஏழெழுத்துக் கப்பா லிருப்பானை - ஏழை
வருத்தந்தீர்த் தன்பன்மனமதனில் தங்கு
பருத்தரத்தி னத்தைப் பணி.





Meta Information:
pattinach siddhar Couplet,பட்டினச் சித்தர் ஞானம் சித்தர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,pattinach padalgal in tamil lyrics,devotional songs,Poet pattinach siddhar