திருவள்ளுவரின் திருக்குறள்

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.



தகுந்த ஆதாரத்தை ஆராய்ந்து மீண்டும் அந்தச் செயலில்( குற்றச்) தலைப்படாது இருக்க ஏற்றபடி தண்டிப்பது அரசின் செயல்.



செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.



தவறு செய்வோரைக் கண்டு, நடுநிலையில் நின்று ஆய்ந்து, அத்தவற்றை அவர் திரும்பவும் செய்யாமல் இருக்கத் தவற்றுக்கு ஏற்பத் தண்டிப்பதே ஆட்சி.



நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்.


Who punishes, investigation made in due degree,
So as to stay advance of crime, a king is he.


He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice), suitably punishes it, so that it may not be again committed.



thakkaangu naatith thalaichchellaa vaNNaththaal
oththaangu oRuppadhu vaendhu

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.



ஆக்கபூர்வமான செயல்கள் தொடர வேண்டுபவர் கடுமையாய் விமர்சித்து மென்மையாய் தண்டிக்க வேண்டும்.



ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.



நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது கடுமையாகத் தண்டிப்பவர்போல தொடங்கி வரம்பு கடவாமல் செய்க.



குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.


For length of days with still increasing joys on Heav'n who call,
Should raise the rod with brow severe, but let it gently fall.


Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquires with strictness, and then punish with mildness.



katidhoachchi mella eRika nedidhaakkam
neengaamai vaeNdu pavar

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.



வெறுப்பு வந்து செயல்படும் கொடிய ஆட்சியாளன் இருந்தால் ஒன்றுமை பகைமையாய் மாறி உள்ளதும் கெடும்.



குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.



குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.



குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்.


Where subjects dread of cruel wrongs endure,
Ruin to unjust king is swift and sure.


The cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come to ruin.



veruvandha seydhozhukum vengoala naayin
oruvandham ollaik kedum

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.



இறை விரும்பாதவன் என்று சொல்லப்படும் கடுஞ் சொல்லுக்கு உட்பட்ட ஆட்சியாளர் எல்லை சுருங்கி சீக்கிரத்தில் அழிவார்.



நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.



நம்மை ஆளுவோர் மிகவும் கொடியவர் என்று குடிமக்களால் சொல்லப்படும் கொடுஞ் சொல்லைப் பெற்ற ஆட்சி அதன் ஆட்சிக் காலம் குறைந்து விரைவி்ல் அழியும்.



கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்.


'Ah! cruel is our king', where subjects sadly say,
His age shall dwindle, swift his joy of life decay.


The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened.



iRaikatiyan endruraikkum innaachchol vaendhan
uRaikatuki ollaik kedum

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.



அரிதாக கேட்டு இனிமை அற்று பார்பவன் அடைந்த அதிகபட்ச செல்வம் ஏதும் செய்யமுடியாத பேய் கண்ட காட்சி போன்றது.



எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.



தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.



யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.


Whom subjects scarce may see, of harsh forbidding countenance;
His ample wealth shall waste, blasted by demon's glance.


The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil.



arunjevvi innaa mukaththaan perunjelvam
paeeykaN dannadhu udaiththu

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.



கடுமையான வார்த்தையும், கருணையற்ற பார்வையும் உடையவனின் அதிகபட்ச செல்வம் நீண்ட நாள் நிலைக்காமல் அழியும்.



கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.



சுடுசொல்லையும், முகதாட்சண்யம் இன்மையும் உடைய அரசின் பெருஞ்செல்வம், பெருகாமல் உடனே அழியும்.



கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்.


The tyrant, harsh in speach and hard of eye,
His ample joy, swift fading, soon shall die.


The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, will instantly perish instead of abiding long, with him.



katunjollan kaNNilan aayin netunjelvam
neetindri aange kedum

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.



வண்மையான வார்த்தையும் தாங்கமுடியா தண்டணையும் ஆட்சியாளரின் எதிரியற்ற தன்மையை அறுக்கும் அரம் போன்றது.



கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.



கடுமையான சொற்களும், வரம்பு மீறிய தண்டனையும் அரசின் பகையை வெல்லுதற்கு ஏற்ற ஆயுதத்தைத் தேய்த்துக் குறைக்கும் அரம் ஆகும்.



கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும்.


Harsh words and punishments severe beyond the right,
Are file that wears away the monarch's conquering might.


Severe words and excessive punishments will be a file to waste away a king's power for destroying (his enemies).



katumozhiyum kaiyikandha thaNdamum vaendhan
atumuraN thaeykkum aram

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.



மனிதாபிமானத்துடன் செயலாற்ற எண்ணாத ஆட்சியாளர் சினத்துடன் செயல்பட்டால் மங்கும் புகழ்.



அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.



தன் உடன் அமைச்சர்களுடன் கலந்து பேசிச் செயற்படாத அரசு, தன்னைச் சினவழி நடத்தித் தவறு வரும்போது அமைச்சர்களைச் சினந்தால், அரசின் செல்வம் நாளும் குறையும்.



கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும்.


Who leaves the work to those around, and thinks of it no more;
If he in wrathful mood reprove, his prosperous days are o'er!.


The prosperity of that king will waste away, who without reflecting (on his affairs himself), commits them to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against them.



inaththaatri eNNaadha vaendhan sinaththaatrich
seeRiR siRukum thiru

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.



போர் மூண்ட காலத்தில் அடக்கி ஆள ஆடசியாளர் வெருப்படைந்து சீர் கெடுவர்.



முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.



நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்.



முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்.


Who builds no fort whence he may foe defy,
In time of war shall fear and swiftly die.


The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish.



seruvandha poazhdhir siRaiseyyaa vaendhan
veruvandhu veydhu kedum

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.



கற்று அறியாதவர்களை இணைக்கும் கடுமையான ஆட்சி. அதைவிட வலிமையானது இல்லை நிலத்திற்குச் சுமை.



கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை.



மக்கள் அஞ்சும்படி தண்டனை தரும் ஆட்சி, நீதி நூல்களைக் கல்லாதவரின் துணையுடன் நிற்கும் நாட்டிற்கு அக்கூட்டத்தாரைவிடப் பெரிய சுமை வேறு இல்லை.



கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்கு பக்கபலமாக்கிக் கொள்ளும். அதைப்போல பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை.


Tyrants with fools their counsels share:
Earth can no heavier burthen bear!.


The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds).



kallaarp piNikkum kadungoal adhuvalladhu
illai nhilakkup poRai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வெறுப்புடன் நோக்காமல் தகுந்த ஆதாரத்தை அறிந்து தீர்ப்பு கூறுவது ஆட்சியர் கடமை. மேலும் வெறுப்புடன் தீய சொற்களை பயன்படுத்துவதும் மனிதபிமானமற்ற செயல் செய்வதும் தீர துன்பத்தையும் நிலத்திற்கு ஆறாத பழியும் உண்டாக்கும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.