திருவள்ளுவரின் திருக்குறள்

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.



கொலை செய்வதையே தொழிலாக கொண்டவரை விட கொடுமையானது, அலைப்போல் தொடர்ந்து அர்த்தமற்ற செயல்களைச் செய்யும் ஆட்சியாளர்களின் ஆட்சி.



குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.



குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது.



அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.


Than one who plies the murderer's trade, more cruel is the king
Who all injustice works, his subjects harassing.


The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer.



kolaimaeRkoN taariR kotidhae alaimaeRkondu
allavai seydhozhukum vaendhu

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.



கொலைக் கருவியைக் காட்டி கொடு என்பதைப் போன்றது ஆணைகள் கொண்டு மிரட்டும் ஆட்சியாளர்களின் கண்முடித்தனம்.



ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.



தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம்.



ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.


As 'Give' the robber cries with lance uplift,
So kings with sceptred hand implore a gift.


The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says "give up your wealth".



vaelotu nindraan iduven Radhupoalum
koalodu nindraan iravu

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.



நாள்தோறும் ஆராய்ந்து செயலாற்றாத ஆட்சியாளர்களின் நாடு நாள்தோறும் கெடும்.



நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.



நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான்.



ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.


Who makes no daily search for wrongs, nor justly rules, that king
Doth day by day his realm to ruin bring.


The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, will daily fall to ruin



naatoRum naati muRaiseyyaa mannavan
naatoRum nhaadu kaedum

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.



குடிமக்களையும் சேர்ந்து இழக்கும் ஆணைகளை சிறப்புறச் செய்யாத அரசு.



(ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.



மேல்வருவதை எண்ணாது, தவறாக ஆள்பவன் தன் செல்வத்தையும், செல்வம் தரும் குடிமக்களையும் சேர்ந்தே இழந்துவிடுவான்.



நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.


Whose rod from right deflects, who counsel doth refuse,
At once his wealth and people utterly shall lose.


The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects.



koozhunG kutiyum orungizhakkum koalkoatich
soozhaadhu seyyum arasu

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.



துன்பத்தை தாங்காமல் அழும் கண்ணீர், இருக்கும் செல்வத்தை அழிக்கும் படை போன்றது.



(முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.



தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.



கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.


His people's tears of sorrow past endurance, are not they
Sharp instruments to wear the monarch's wealth away?.


Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth ?.



allaRpattu aatraadhu azhudhakaN Neerandrae
selvaththaith thaeykkum padai

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.



ஆட்சியாளருக்கு அவசியம் சிறந்த ஆணைகள் அப்படி இல்லையென்றால் ஆட்சியாளருக்கு நற்புகழ் வாய்க்காது.



அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்.



ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்திருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது.



நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும். இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்.


To rulers' rule stability is sceptre right;
When this is not, quenched is the rulers' light.


Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance.



mannarkku mannudhal sengoanmai aqdhindrael
mannaavaam mannark koaLi

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.



மழைத்துளி இல்லாது போனால் இவ்வுலகிற்கு ஏற்றது இல்லை. அதைப் போலவே ஆட்சியர் கொடுக்கும் தன்மையற்று இருப்பது வாழும் உயிர்க்கு ஏற்றது இல்லை.



மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.



மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.



மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்.


As lack of rain to thirsty lands beneath,
Is lack of grace in kings to all that breathe.


As is the world without rain, so live a people whose king is without kindness.



thuLiyinmai GnaalaththiRku etratrae vaendhan
aLiyinmai vaazhum uyirkku

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.



துன்பத்திலும் துன்பமானது நல் ஆணைகள் கொண்டு ஆளாத ஆட்சியாரின் கிழ் உடைமைக் (குடியுரிமை)கொண்டு இருப்பது.



முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.



தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம்.



வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது.


To poverty it adds a sharper sting,
To live beneath the sway of unjust king.


Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice.



inmaiyin innaadhu udaimai muRaiseyyaa
mannavan koaRkeezhp patin

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.



ஆணைகள் கோடி ஆட்சியாளர் செய்வது, வானம் பெய்தும் கோடி நீர்தங்கும் இடத்தில் நீர் தங்காமல் போவதைப் போன்றதே. நீர் நிலைகள் மழையை தக்கவைத்துக் கொள்ளாததைப் போலவே ஆணைகள் அதிகம் செய்யும் அரசால் நன்மைகள் இருக்காது.



அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.



ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.



முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது.


Where king from right deflecting, makes unrighteous gain,
The seasons change, the clouds pour down no rain.


If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers.



muRaikoati mannavan seyyin uRaikoati
ollaadhu vaanam peyal

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.



ஆக்கப் பணிகள் குறையும் தொழில் நுட்ப நூல்கள் பெருகாது, ஆட்சியாளர் அரசை கவனிக்காமல் இருந்தால்.



நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.



காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.



ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்.


Where guardian guardeth not, udder of kine grows dry,
And Brahmans' sacred lore will all forgotten lie.


If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.



aapayan kundrum aRudhozhiloar noolmaRappar
kaavalan kaavaan enin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

கொலை பாதகரை விட கொடுமையானவர் கொடிய ஆட்சியர். துன்பத்தை விட துன்பமும் அவரே தருவார். அர்த்தமற்ற ஆணைகள் குடி மக்களை இழுக்கச் செய்யும். ஆக்கப் பூர்வமான செயல்கள் குறையும்படி செய்பவர்கள் நல்லாட்சி தருபவர்கள் இல்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.