திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கள்ளாமை / The Absence of Fraud

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.



எள்ளி நகைக்கக் கூடாது என்று விரும்புபவர் எப்போதும் திருட்டுத்தனம் தோன்றாமல் காக்க வேண்டும் தன் நெஞ்சை.



பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.



அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.



எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்.


Who seeks heaven's joys, from impious levity secure,
Let him from every fraud preserve his spirit pure.


Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing.



eLLaamai vaeNtuvaan enpaan enaiththondrum
kaLLaamai kaakkadhan nenju

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.



மனத்தால் எண்ணுவதும் குற்றமாகும் அடுத்தவர் பொருளை திருட்டுத் தனத்தால் திருடலாம் என்று.



குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.



அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது.



பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்.


'Tis sin if in the mind man but thought conceive;
'By fraud I will my neighbour of his wealth bereave'.


Even the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of another.



uLLaththaal uLLalum theedhae piRanporuLaik
kaLLaththaal kaLvaem enal

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.



திருட்டுத் தனத்தால் உருவாகிய செல்வம் அளவு குறைந்து வளர்வதுப் போல் கெட்டுவிடும்.



களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.



திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.



கொள்ளையடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்.


The gain that comes by fraud, although it seems to grow
With limitless increase, to ruin swift shall go.


The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase.



kaLavinaal aakiya aakkam aLaviRandhu
aavadhu poalak kedum

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.



திருட்டுத் தனத்தால் தோன்றிய காதல் விளைவிப்பது அழியா துன்பமே ஆகும்.



களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.



அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.



களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.


The lust inveterate of fraudful gain,
Yields as its fruit undying pain.


The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow.



kaLavin-kaN kandriya kaadhal viLaivin-kaN
veeyaa vizhumam tharum

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.



இயற்கையின் பரிசை எண்ணி அன்பு மேலோங்கி வாழ்தல் என்பது பொருள்களைப் பார்த்து பொறாமை அடைபவருக்கு இல்லை.



அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.



அடுத்தவர் பொருளைத் திருட எண்ணி, அவர் தளரும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போர், அருள் மீது பற்று உள்ளவராய் வாழ முடியாது.



மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது.


'Grace' is not in their thoughts, nor know they kind affection's power,
Who neighbour's goods desire, and watch for his unguarded hour.


The study of kindness and the exercise of benevolence is not with those who watch for another's forgetfulness, though desire of his property.



aruLkarudhi anputaiya raadhal poruLkarudhip
pochchaappup paarppaarkaN il

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.



அளவை தீர்மானித்து செயல்களை செய்யாதவர்கள் திருட்டுத்தனத்தில் மிகவும் ஆர்வம் அடைவார்கள்.



களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.



உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.



ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்.


They cannot walk restrained in wisdom's measured bound,
In whom inveterate lust of fraudful gain is found.


They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others.



aLavin-kaN nindrozhukal aatraar kaLavin-kaN
kandriya kaadha lavar

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.



திருட்டுத்தனம் என்ற திடமான செயல் தேவைகளின் அளவை அறிந்துக் கொண்ட ஆற்றல் மிகுந்தவரிடத்தில் இல்லை.



களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.



உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.



அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது.


Practice of fraud's dark cunning arts they shun,
Who long for power by 'measured wisdom' won.


That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude.



kaLavennum kaaraRi vaaNmai aLavennum
aatral purindhaarkaNda il

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.



தேவைகளின் அளவை அறிந்தவர்களின் நெஞ்சம் அறத்துடன் இருப்பதைப்போலவே திருட்டுத்தனம் அறிந்த நெஞ்சில் வஞ்சனை இருக்கும்.



அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.



உயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும்.



நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.


As virtue dwells in heart that 'measured wisdom' gains;
Deceit in hearts of fraudful men established reigns.


Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude.



aLavaRindhaar nenjath thaRampoala niRkum
kaLavaRindhaar nenjil karavu

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.



தேவைக்கு அதிகமாக செய்து வீழ்வார்கள் திருட்டுத்தனம் மட்டுமின்றி மற்றவற்றிலும் தேர்ச்சி அற்றவர்களே.



களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.



அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார்.



அளவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்.


Who have no lore save that which fraudful arts supply,
Acts of unmeasured vice committing straightway die.


Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression.



aLavalla seydhaangae Veevar KaLavalla
matraiya thaetraa thavar

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.



திருடருக்கு உயிர் நிலைத்தல் சாத்தியம் இல்லை, திருடர்களுக்கும் தெய்வீக உலகம் சாத்தியம்.



களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.



திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.



களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது.


The fraudful forfeit life and being here below;
Who fraud eschew the bliss of heavenly beings know.


Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud.



kaLvaarkkuth thaLLum uyirnhilai kaLvaarkkuth
thaLLaadhu puththae LuLagu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பிறர் ஏளனம் செய்யதிருக்க வேண்டும் என்றால் அடுத்தவர் பொருளை களவாட நினைக்க கூடாது. மனதளவிலும் கள்ளத்தனம் இல்லாதவரே நிறைவாக வாழ்வார். தேவையின் அளவு அறிந்தவர் திருடுவது இல்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.