இடைக்காட்டுச் சித்தர் பாடல்



புல்லாங்குழலூதல்

நாற்போற் பொறிகளை நாநாவிதம் விட்டோர்
பேயரென் றூதுகுழல் - கோனே
பேயரென் றூதுகுழல்.

ஓடித் திரிவோர்க் குணர்வுகிட் டும்படி
சாடியே யூதுகுழல் - கோனே
சாடியே யூதுகுழல்.

ஆட்டுக்கூட் டங்களை அண்டும் புலிகளை
ஒட்டியே யூதுகுழல் - கோனே
ஒட்டியே யூதுகுழல்.

மட்டிக் குணமுள்ள மாரீச நாய்களை
கட்டிவைத் தூதுகுழல் - கோனே
கட்டிவைத் தூதுகுழல்.

கட்டாத நாயெல்லாம் காவலுக் கெப்போதும்
கிட்டாவென் றூதுகுழல் - கோனே
கிட்டாவென் றூதுகுழல்.

பெட்டியிற் பாம்பெனப் பேய்மன மடங்க
ஒட்டியே யூதுகுழல் - கோனே
ஒட்டியே யூதுகுழல்.

எனதென்றும் யானென்றும் இல்லா திருக்கவே
தனதாக வூதுகுழல் - கோனே
தனதாக வூதுகுழல்.

அற்றவிடமொன்றே யற்றதோ டுற்றதைக்
கற்றதென் றூதுகுழல் - கோனே
கற்றதென் றூதுகுழல்.

பால்கறத்தல்

சாவா திருந்திடப் பால்கற - சிரம்
தன்னி லிருந்திடும் பால் கற
வேவா திருந்திடப் பால்கற - வெறும்
வெட்ட வெளிக்குள்ளே பால்கற.

தோயா திருந்திடும் பால்கற - முனைத்
தொல்லை வினையறப் பால்கற
வாயா லுமிழ்ந்திடும் பால்கற - வெறும்
வயிறார வுண்டிடப் பால்கற.

நாறா திருந்திடும் பால்கற - நெடு
நாளு மிருந்திடப் பால்கற
மாறா தொழுகிடும் பால்கற - தலை
மண்டையில் வளரும் பால்கற.

உலகம் வெறுத்திடும் பால்கற - மிக்க
ஒக்காள மாகிய பால்கற
கலசத் தினுள்விழப் பால்கற - நிறை
கண்டத்தி னுள்விழப் பால்கற.

ஏப்பம் விடாமலே பாற்கற - வரும்
ஏமன் விலக்கவே பால்கற.
தீப்பொறி யோய்ந்திடப்பால்கற - பர
சிவத்துடன் சாரவே பால்கற.

அண்ணாவின் மேல்வரும் பால்கற - பேர்
அண்டத்தி லூறிடும் பால்கற
விண்ணாட்டி லில்லாத பால்கற - தொல்லை
வேதனை கெடவே பால்கற.

கிடை கட்டுதல்

இருவினையான மாடுகளை ஏகவிடு கோனே - உன்
அடங்குமன மாடொன்றை யடக்கிவிடு கோனே.

சாற்றரிய நைட்டிகரே தற்பரத்தைச் சார்வார் - நாளும்
தவமவமாக் கழிப்பவரே சனனமதில் வருவார்.

அகங்கார மாடுகண்மூன் றகற்றிவிடு கோனே - நாளும்
அவத்தையெனும் மாடதைநீ யடக்கிவிடு கோனே.

ஒருமலத்தன் எனுமாட்டை ஒதுக்கிக்கட்டுக் கோனே - உடன்,
உறையுமிரு மலந்தனையு மோட்டிக் கட்டுகோனே.

மும்மலத்தன் எனுமாட்டை முறுக்கிக்கட்டுகோனே - மிக,
முக்கால நேர்மையெல்லா முன்பறிவாய் கோனே.

இந்திரியத் திரயங்களை இறக்கிவிடு கோனே - என்றும்
இல்லையென்றே மரணங்குழு லெடுத்தூது கோனே.

உபாதியெனும் மூன்றாட்டை ஓட்டிவிடு கோனே - உனக்கு
உள்ளிருக்குங் கள்ளமெல்லாம் ஓடிப்போங் கோனே.

முக்காய மாடுகளை முன்னங்கட்டு கோனே - இனி
மோசமில்லை நாசமில்லை முத்தியுண்டாங் கோனே.

கன்மபல மாடுகளைக் கடைக்கட்டு கோனே - மற்றக்
கன்மத்திர யப்பசுவைக் கடையிற்கட்டு கோனே.

காரணக்கோ மூன்றனையுங் கால்பிணிப்பாய் கோனே - நல்ல
கைவசமாஞ் சாதனங்கள் கடைப்பிடிப்பாய் கோனே.

பிரமாந்த ரத்திற் பேரொளி காணெங்கள் கோனே - வாய்
பேசா திருந்து பெருநிட்டை சாரெங்கள் கோனே.

சிரமதிற் கமலச் சேவை தெரிந்தெங்கள் கோனே - முத்தி
சித்திக்குந் தந்திரஞ் சித்தத் தறியெங்கள் கோனே.

விண்ணாடி வத்துவை மெய்யறிவிற் காணுங் கோனே - என்றும்
மெய்யே மெய்யிற்கொண்டு மெய்யறிவிற் செல்லுங் கோனே.

கண்ணாடி யினுள்ளே கண்பார்த் துக்கொள்ளுங் கோனே - ஞானக்
கண்ணன்றிக்கண்ணாடி காணவொண்ணா தெங்கள் கோனே.

சூனியமானதைச் சுட்டுவா எங்குண்டுகோனே - புத்தி
சூக்குமமே யதைச்சுட்டு மென்றெண்ணங் கொள் கோனே.

நித்திய மானது நேர்படி லேநிலை கோனே - என்றும்
நிற்குமென் றேகண்டு நிச்சயங் காணெங்கள் கோனே.

சத்தியும் பரமுந் தன்னுட் கலந்தே கோனே - நிட்டை
சாதிக்கி லிரண்டுந் தன்னுள்ளே காணலாங் கோனே.

மூகைபோலிருந்து மோனத்தைச் சாதியெங்கோனே - பர
மூலநிலைகண்டு முட்டுப் பிறப்பறு கோனே.




Meta Information:
idaikaadar Couplet,இடைக்காட்டுச் சித்தர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,idaikaadar padalgal in tamil lyrics,devotional songs,Poet idaikaadar siddhar,idaikadar siddhar