பட்டினத்தார்
TAGS:
pattinathar Couplet, ,பட்டினத்தார் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil songs,pattinathar,pattinathar padalgal in tamil lyrics,devotional songs,Poet pattinathar



நெஞ்சொடு மகிழ்தல்

ஊரிறந்து, பேரிறந்து, ஒளியிறந்து, வெளியிறந்து,
சீரிறந்து நின்றதிலே சேர்ந்தனையே; நெஞ்சமே!


ஆண்பெண் அலியென்று அழைக்கஅரி தாய் நிறைந்து
காண்ப அரி தாய இடம் கண்ணுற்றாய் நெஞ்சமே!


ஆங்காரம் அச்சம் அகற்றி அறிவினொடு
தூங்காமல் தூங்கிச் சுகம் பெற்றாய் நெஞ்சமே!


ஆதியாய் நின்ற அகண்டபரி பூரணத்தைச்
சாதியா நின்ற இடம் சார்வுற்றாய் நெஞ்சமே!


விருப்புவெறுப்பு இல்லாத வெட்டவெளி யதனில்
இருப்பே சுகம் என்று இருந்தனையே நெஞ்சமே!


ஆரும் உறாப் பேரண்டத்து அப்புறத்தும் இப்புறத்தும்
நீரும் உப்பும் என்ன நிலை பெற்றாய் நெஞ்சமே!


உடனாகவே இருந்து உணர அரி யானோடு
கடல் நீரும் ஆறும்போல் கலந்தனையே; நெஞ்சமே!


நெடியகத்தைப் போக்கி, நின்ற சழக்கறுத்துப்
படிகத்துக் கும்பம்போல் பற்றினையே; நெஞ்சமே!


மேலாகி எங்கும் விளங்கும் பரம் பொருளில்
பாலூறும் மென் சுவைபோல் பற்றினையே; நெஞ்சமே!


நீரொடுதண் ஆலிவிண்டு நீரான வாறேபோல்
ஊரொடுபேர் இல்லானோடு ஒன்றினையே; நெஞ்சமே!


இப்பிறப்பைப் பாழ்படுத்தி இருந்தபடி யேஇருக்கச்
செப்ப அரிதாய இடம் சேர்ந்தனையே; நெஞ்சமே!


மேலாம் பதங்கள் எல்லாம் விட்டுவிட்டு ஆராய்ந்து
நாலாம் பதத்தில் நடந்தனையே; நெஞ்சமே!


கடங்கடங்கள் தோறும் கதிரவன் ஊடாடி
அடங்கும் இடம்தான் அறிந்து அன்புற்றாய்; நெஞ்சமே!


கற்றவனாய்க், கேட்டவனாய்க், காணானாய்க், காண்பவனாய்
உற்றவனாய் நின்றதிலே ஒன்று பட்டாய் நெஞ்சமே!


நாலு வகைக் கரணம் நல்குபுலன் ஐந்தும் ஒன்றாய்
சீலமுற்று நின்றதிலே சேர்ந்தனையே நெஞ்சமே!


விட்டிடமும், தொட்டிடமும், விண்ணிடமும், மண்ணிடமும்
கட்டும்ஒரு தன்மைஎனக் கண்ணுற்றாய்; நெஞ்சமே!


எந்தெந்த நாளும் இருந்தபடி யேஇருக்க
அந்தச் சுகாதீதம் ஆக்கினையே; நெஞ்சமே!


வாக்கிறந்து நின்ற மனோகோச ரம்தனிலே
தாக்கறவே நின்றதிலே தலைசெய்தாய்; நெஞ்சமே!


எத்தேசமும் நிறைந்தே எக்கால மும்சிறந்து,
சித்தாய சித்தினிடம் சேர்ந்தனையே; நெஞ்சமே!


தாழாதே நீளாதே தன்மய மாய்நிறைந்து
வாழாதே வாழ மருவினையே; நெஞ்சமே!


உள்ளும் புறம்பும் உவட்டாத ஆனந்தக்
கள்ளருந்தி நின்றதிலே கண்ணுற்றாய்; நெஞ்சமே!


வாதனை போய், நிட்டையும்போய், மாமௌன ராச்சியம்போய்
பேதம்அற நின்ற இடம் பெற்றனையே; நெஞ்சமே!


இரதம் பிரிந்துகலந்து ஏகமாம் ஆறேபோல்
விரகம் தவிர்ந்து அணல்பால் மேவினையே, நெஞ்சமே!


சோதியான் சூழ்பனிநீர் சூறைகொளும் ஆறேபோல்
நீதிகுரு வின்திருத்தாள் நீபெற்றாய்; நெஞ்சமே!


உடல் கூற்று வண்ணம்

ஒருமடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும்
அன்புபொருந்தி உணர்வுகலங்கி ஒழுகியவிந்து
ஊறுசுரோணிதம் மீதுகலந்து-


பனியில்ஓர் பாதி சிறுதுளிமாது பண்டியில்வந்து
புகுந்துதிரண்டு பதும அரும்பு கமடம்இதென்று
பார்வைமெய்வாய்செவி கால்கைகள் என்ற-


உருவமும்ஆகி உயிர்வளர்மாதம் ஒன்பதும் ஒன்றும்
நிறைந்துமடந்தை உதரம் அகன்று புவியில்வி ழுந்து
யோகமும்வாரமும் நாளும் அறிந்து-


மகளிர்கள் சேனை தரவணையாடை மண்படஉந்தி
உதைந்துகவிழ்ந்து மடமயில்கொங்கை அமுதம்அருந்தி
ஓரறிவீ ரறி வாகிவளர்ந்து-


ஒளிநகைஊறல் இதழ்மடவாரும் உவந்துமுகந்திட
வந்துதவழ்ந்து மடியில் இருந்து மழலைபொழிந்து
வாஇருபோவென நாமம்விளம்ப-


உடைமணி ஆடை அரைவடம் ஆட உண்பவர் தின்பவர்
தங்களொடுஉண்டு தெருவில் இருந்த புழுகி அளைந்து
தேடியபாலரோ டோடிநடந்து அஞ்சுவயதாகி விளையாடியே


உயர்தருஞான குருஉபதேசம் முத்தமிழின்கலை
யும்கரைகண்டு வளர்பிறைஎன்று பலரும்விளம்ப
வாழ்பதினாறு பிராயமும்வந்து-


மயிர்முடிகோதி அறுபதநீல வண்டிமிர் தண்தொடை
கொண்டைபுனைந்து மணிபொன் இலங்கும் பணிகள் அணிந்து
மாகதர்போகதர் கூடிவணங்க-


மதன சொரூபன் இவன் எனமோக மங்கையர் கண்டு
மருண்டு திரண்டு வரி விழிகொண்டு சுழிய எறிந்து
மாமலர் போல் அவர் போவது கண்டு-


மனது பொறாமல் அவர் பிறகோடி மங்கல செங்கல
சந்திகழ் கொங்கை மருவமயங்கி இதழ் அமுதுண்டு
தேடியமாமுதல் சேரவழங்கி-


ஒரு முதலாகி முதுபொருளாய் இருந்ததனங்களும்
வம்பில் இழந்து மதனசுகந்த விதனம்இதென்று
வாலிபகோலமும் வேறு பிரிந்து-


வளமையும்மாறி இளமையும்மாறி வன்பல்வி ழுந்துஇரு
கண்கள் இருண்டு வயது முதிர்ந்து நரைதிரை வந்து
வாதவி ராத குரோதம் அடைந்து- செங்கையினில் ஓர் தடியும் ஆகியே


வருவதுபோவது ஒருமுதுகூனும் மந்தியெனும்படி
குந்தி நடந்து மதியும் அழிந்து செவிதிமிர்வந்து
வாயறியாமல் விடாமல் மொழிந்து-


துயில்வரும்நேரம் இருமல் பொறாது தொண்டையும் நெஞ்சமும்
உலர்ந்து வறண்டு துகிலும் இழந்து சுணையும் அழிந்து
தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு


கலியுகமீதில் இவர் மரியாதை கண்டிடும் என்பவர்
சஞ்சலம் மிஞ்ச கலகல என்றுமலசலம் வந்து
கால்வழி மேல்வழி சாரநடந்து-


தெளிவும்இராமல் உரை தடுமாறி சிந்தையும் நெஞ்சமும்
உலைந்து மருண்டு திடமும் உலைந்துமிகவும் அலைந்து
தேறிநல் ஆதரவு ஏதெனநொந்து-


மறையவன் வேதன் எழுதியவாறு வந்தது கண்டமும்
என்று தெளிந்து இனி என கண்டம் இனியென தொந்தம்
மேதினி வாழ்வு நிலாதினி நின்ற-


கடன் முறை பேசும் என உரைநாவுறங்கி விழுந்துகை
கொண்டு மொழிந்துகடைவழிகஞ்சி ஒழுகிட வந்து
பூதமும் நாலுசு வாசமும் நின்று-நெஞ்சுதடுமாறி வரும்நேரமே-


வளர்பிறை போல எயிறும் உரோமமும் சடையும் சிறு
குஞ்சியும் விஞ்ச மனதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போல்யம தூதர்கள் வந்து-


வலைகொடுவீசி உயிர்கொடு போக மைந்தரும் வந்து
குனிந்தழ நொந்து மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கினரே இவர் காலம் அறிந்து-


பழையவர்காணும் எனும்அயலார்கள் பஞ்சு பறந்திட
நின்றவர் பந்தர் இடுமென வந்து பறையிட முந்த
வேபிணம் வேக விசாரியும் என்று-


பலரையும் ஏவி முதியவர் தாமிருந்தசவம் கழு
வும் சிலரென்று பணிதுகில் தொங்கல் களபமணிந்து
பாவகமே செய்து நாறும் உடம்பை-


வரிசை கெடாமல் எடுமென ஓடி வந்திளமைந்தர்
குனிந்து சுமந்து கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிடவாழ்வென வாழ்வென நொந்து-


விறகிடமூடி அழல்கொடு போட வெந்து விழுந்து
முறிந்து நிணங்கள் உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை நம்பும் அடியேனை இனி ஆளுமே!


வெளிப்பட்டபின் பாடிய தலப் பாடல்கள்
திருவிடைமருதூர்

மென்று விழுங்கி விடாய்க்கழிக்க நீர்தேடல்
என்று விடியும் எனக்கு எங்கோவே - நன்றி
கருதார் புரமூன்றும் கட்டழலால் செற்ற
மருதா உன் சந்நிதிக்கே வந்து.


திருவொற்றியூர்

கண்டம் கரியதாம் கண் மூன்று உடையதாம்
அண்டத்தைப் போல் அழகியதாம் - தொண்டர்
உடல் உருகத் தித்திக்கும் ஓங்கு புகழ் ஒற்றிக்
கடலருகே நிற்கும் கரும்பு.





Meta Information:
pattinathar Couplet,பட்டினத்தார் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,pattinathar padalgal in tamil lyrics,devotional songs,Poet pattinathar