திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: சான்றாண்மை / Perfectness

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.



கால மாற்றம் எனப்படும் ஊழியால் மாற்றங்கள் ஏற்பட்டாலும் தன்னை நிலைத்த தன்மையில் தக்க வைத்திருப்பவர் சான்றாண்மைக்கே பெருங்கடல் எனப்படுவார்.



சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.



சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார்.



தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்.


Call them of perfect virtue's sea the shore,
Who, though the fates should fail, fail not for evermore.


Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change.



oozhi peyarinum thaampeyaraar saandraaNmaikku
aazhi enappadu vaar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அவசியம் செய்ய வேண்டியதை கட்டாயம் செய்வதே சான்றாண்மை. குண நலமுடன் அன்பு நாணம் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை என ஐந்துடன் இருப்பதும், நல்லனவற்றை அழிக்காமல் அதை வளர்ப்பதும், தகுதி அற்றவர் இடத்திலும் தோல்வியை ஏற்பதும், துன்பம் தந்தவற்கும் இனியவை செய்வதும், சான்றாண்மையாகும். இப்படியானவர் ஊழி கடந்து போற்றப்படுவர். இவர்கள் சான்றாண்மை குறைந்தால் அகம் புறம் என இரு நிலையும் ஏற்காது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.