திருவள்ளுவரின் திருக்குறள்

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.



ஏளனமாய் துன்பம் செய்தாலும் மயங்கியவர் மீண்டும் மதுவை நாடுவது போல் கள்வனே உன் மார்பை நாடுகிறேன்.



கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்‌மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.



இந்த வஞ்சகரே! தன்னை உண்டு மகிழ்ந்தவர்க்கு எளிமை வரத்தக்க தீமையைச் செய்தாலும், அவரால் மேலும் மேலும் விரும்பப்படும் கள்ளைப் போன்றது எனக்கு உன் மார்பு. இத்தனையும் அவளுக்கு மட்டுந்தானா? அவன் எதுவுமே நினைக்கவில்லையா? அவள் நினைவுகளை அவளின் பார்வையிலேயே படித்துவிட்டான். அவளைத் தேற்றுகிறான்.



என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு தரக்கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச் செய்கிறது உன் மார்பு.


Though shameful ill it works, dear is the palm-tree wine
To drunkards; traitor, so to me that breast of thine!.


O you rogue! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasant disgrace.



iliththakka innaa seyinum kaliththaarkkuk
kallatrae kalva-nin maarbu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

எண்ணத்தால் போதையும் பார்வையில் மகிழ்ச்சியும் தருவது காமம் ஆனால் அது குடிபோதைக்கு இல்லை. தினை அளவும் வெறுப்பு இன்றி இருந்து பனையளவு காமத்தை அனுபவிக்க வேண்டும். என்னைப் பற்றிய அக்கறை இல்லை என்றாலும் காதலனான இறைவனை காணமல் அமைதியடையாது என் கண். வெறுப்படைந்து விலகினாலும் அவனை கூட நினைக்கும் நெஞ்சு. மை எழுதும் கோல் கண்ணுக்கு மை இடும்பொழுது மறைவது போல் அவன் குற்றம் அவனை கண்டால் தெரிவதில்லை. நெருங்கும் பொழுது குற்றத்தை மறந்து விலகிய நேரம் அவனது நற்பண்பையும் மறுக்கிறேன். நீந்த முடியாத ஆற்றில் குதிப்பது போல் ஊடல் கொண்டு தோல்வியடைகிறேன். துன்பம் தந்தாலும் மது உண்டவர் மீண்டும் மதுவை நாடுவது போல் உன் மார்பை நாடுகிறேன். மலரைவிட மென்மையான காமத்தை சிலரே செம்மையாக அனுபவிக்கின்றனர். கண் கலங்கி ஆறுபோல் ஆனாலும் பற்றிக் கொள்ளவதில் அவளுக்கே முதலிடம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.